(ஷிஹான்)

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் காதலை ஏற்க மறுத்த மகள் மற்றும் தந்தை மீது இன்று (29) அதிகாலை ஒளிந்திருந்து கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச்சென்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தேத்தாத்தீவு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆடைகள் தைக்கும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய கத்திக்குத்துக்கு இலக்கான 29 வயதான பெண்ணிற்கும் அதே நிறுவனத்தில் கடமையாற்றிய தேத்தாத்தீவு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தருக்கும் இடையே காதல் தொடர்பு ஏற்பட்ட நிலையில் குறித்த காதலுக்கு பெண் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த பெண் இதற்கு முன்னர் திருமணம் முடித்த விவாகரத்துப்பெற்ற நிலையில் அவருக்கு 5 வயது பிள்ளை ஒன்றும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று அதிகாலை சென்ற குறித்த குடும்பஸ்தர் ஒளிந்திருந்து காதலித்த பெண் மற்றும் பெண்ணின் தந்தையையும் கத்தியால் குத்தி படுகாயமடைய செய்த பின்னர் தப்பி சென்று தனது வீடு அமைந்துள்ள தேத்தாத்தீவு பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மகள் மற்றும் அவரது தந்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தரின் சடலம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் திருமணம் செய்த நிலையில் 12 வயதில் பிள்ளை ஒன்றிற்கு தந்தை என்பதை மறைத்து குறித்த பெண்ணை காதலித்துள்ளதுடன் திருமண ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக தயாரான நிலையில் பெண்ணின் தந்தையினால் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் உண்மை நிலையை அறிந்த குறித்த பெண், குறித்த நபர் உரிய முறையில் விவாகரத்தை பெற்ற பின்னர் திருமணம் பற்றி பேசமுடியும் என அவரிடம் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த அவர், காதலித்த பெண்ணையும் அவரது தந்தையையும் குத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸ் அவசர இலக்கமான 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.