மாவனல்லை பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 9 நோயாளிகளுக்கு இடையில் கடந்த தினம் மாவனல்லையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின் மணமக்களும் அடங்குவதாக தெரிவித்தார்.

மேலும் குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 120 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த திருமண வைபவம் இடம் பெற்ற தினத்தில் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெற்றுள்ள போதும், இரண்டாவது நாள் மணமகனின் வீட்டில் நடத்தப்பட்ட வைபவத்தில் சுகாதார வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை என மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

மணமகன் கொழும்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் பணி புரிபவர் எனவும் குறித்த திருமண வைபவத்திற்கு கொழும்பில் இருந்தும் சிலர் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளான மணப்பெண் உந்துகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மணமகன் கேகாலை மாவட்ட தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கேகாலை மாவட்டத்தில் ​கொவிட் தொற்றுக்குள்ளான 150 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 3,031 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் குமார் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.