(எம்.மனோசித்ரா)

பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர் தொற்றுக்குள்ளாகியிருக்காத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கொரோனா மரணங்கள் தொடர்பான மீளாய்வுக்குழு ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்த குழந்தைக்கு கொவிட் தொற்று செய்யப்பட்டுள்ள போதிலும் அதன் பெற்றோருக்கு தொற்று ஏற்படவில்லை. அவ்வாறெனில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டும்.

தற்போது ஒரு குழந்தை மாத்திரமே உயிரிழந்துள்ள போதிலும் இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே துரிதமாக கொரோனா மரணங்கள் குறித்த மீளாய்வு குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தினோம். குறித்த மரணம் தொடர்பில் மீளாய்வு செய்வது அந்த குழுவின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.