உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கபட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்திப்பதற்கு அவரது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்த கோரிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நிராகரிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ச்சலன பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் நாயகம் சுசாந்த பாலபெட்ட பெந்தி இதனை கூறியுள்ளார்.
பிரியந்த பெர்ணான்டோ, யோசித ராஜபக்ஸ ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுமுன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா, சிறையில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்தித்து தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள கடந்த செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் இதுவரை அவரது சட்டத்தரணிகளுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கருத்துரையிடுக