மாணவ சமுதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு - கிழக்கில் இன்று(திங்கட்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அனைத்து தமிழ் கட்சிகள், மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் குறித்த கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு - கிழக்கு மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இந்த போராட்டத்திற்கு வழங்கியிருந்த பூரண ஆதரவானது, இந்த பணி மறுப்பு போராட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற காரணமாக இருந்தது.

பூரண ஹர்த்தால் வெற்றியடைந்துள்ளமை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 'குறுகிய கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட பூரண ஹர்த்தாலுக்கு மாபெரும் அதரவு வழங்கியமைக்கு வட கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக தாமாகவே முன்வந்த தமது பரிபூரண ஆதரவை நல்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், வர்த்தக சங்கத்தினர் போன்றோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைய தினம் மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிருபிக்கப்படுள்ளது. இது பலருக்கும் பாடம் புகட்டியுள்ளது. எமது ஒற்றுமையே எமது பலம். 'எமது உரிமை எமது உணர்வு.'

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரம்பல் அச்சம் காரணமாக நான் சுய தனிமைப்படுதலுக்கு உட்பட்டுள்ளேன். இதன் காரணமாக அன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு என்னால் வர முடியாததை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றேன்.

அத்துடன், தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மயிலத்தமடு பண்ணையாளர்களை நேரில் சென்று பார்க்க முடியால் போய்விட்டதையும் எண்ணி வருந்துகின்றேன்.

உங்கள் பிரச்சனையை நான் ஒரு போதும் கைவிடப்போவதில்லை. நீதி கிடைக்கும் வரை தொடர்வேன்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஐபிசி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.