பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கராச்சியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

2-வது போட்டி ராவல்பிண்டியில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 272 ரன்கள் அடித்தது. தென்ஆப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட்டும், மகாராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் விளையாடியது. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 5 விக்கெட் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 201 ரன்னில் சுருண்டது.

71 ரன்கள் முன்னிலைப் பெற்ற பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் விளாச 298 ரன்கள் குவித்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 370 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.

எய்டன் மார்கிராம், வான் டெர் துஸ்சென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தென்ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிராம் 59 ரன்களுடனும், வான் டெர் துஸ்சென் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா அணிக்கு 9 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 243 ரன்கள் தேவைப்பட்டது.


இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மார்கிராம் சிறப்பாக விளையாடி வான் டெர் துஸ்சென் நேற்றைய 48 ரன்னிலேயே ஹசன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டு பிளிஸ்சிஸ் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

மறுமுனையில் மார்கிராம் 108 ரன்கள் விளாசினார். டெம்பா பவுமா 61 ரன்னில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 5 விக்கெட்டும், ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால், இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 எனக்கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.