சுயாதீன நாடான இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பான செயற்பாடுகளுக்காக சர்வதேச நிறுவனங்களின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் கிடையாது என தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க வலியுறுத்தியுள்ளார்.

குறிஞ்சிமலைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் அகழ்வுகள் பற்றி அவர் நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். இதற்காக யுனெஸ்கோ அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் கிடையாது. தற்சமயம் மேற்கொள்ளப்படும் அகழ்வு நடவடிக்கைகளின் போது காணப்படும் சவால்கள் அநாவசியமானவை என்றும் தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க கூறினார்.

வடபகுதியைச் சேர்ந்த சில அரசியல் வாதிகள் தொல்பொருள் அகழ்வுகள் பற்றி தெரிவிக்கும் கூற்றுக்கள் அடிப்படையற்றவையாகும். எங்கெங்கு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அகழ்வின் போது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்த மிகப்பெரிய பௌத்த விஹாரை அமைந்த பகுதியாகவும் இது அறியப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பெரும்பாலான தொல்பொருள் தளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது சொற்ப அளவிலான குழுவினரின் எழுச்சியேயன்றி இதனை பொதுமக்களின் எதிர்ப்பாகக் கருதமுடியாது என்றும் தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.