(லோரன்ஸ் செல்வநாயகம்)

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நாளையுடன் நிறைவடைகின்ற நிலையில் பரீட்சை மண்டபத்துக்கு வெளியில் குழப்பகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவ்வாறு குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பரீட்சை நிலையங்களுக்கு அருகிலும் நடமாடும் பொலீஸ் பாதுகாப்பு சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பரீட்சை நிலையத்திலோ அல்லது அதன் சுற்றாடலிலோ குழப்பகரமான வகையில் செயற்பட்டால் அல்லது ஏனைய மாணவர்களுக்கு தடை ஏற்படும் வகையில் செய்யப்பட்டாலும் அத்துடன் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் பரீட்சைகள் சட்டத்திற்கு இணங்க கடும் தண்டனைகள் வழங்கப்படும். அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை இரத்துச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்புவோர் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் 0112784208,0112784537,0113188350,0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அத்துடன் 19 11 என்ற அவசர தொலைபேசி இலக்கம் பொலிஸ் தலைமையகத்தின் 011 242 11 11 ஆகிய இலக்கங்களுடனும் மற்றும் பொலிஸ் அவசர பிரிவு 119இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். (RH)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.