அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் பாடசாலைகளுக்கு வந்து பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு  கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓகஸ்ட் மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட பின்னர், நாட்டிலுள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கான சாத்தியம் உள்ளது என்றும் பள்ளிகளை தொடர்ந்து மூடுவதற்கான சாத்தியம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

எனவே, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசலைகளுக்கு வந்து அதற்கு முன் திட்டமிட்டபடி பணிக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு விரைவில் பாடசாலைகளைத் திறப்பது நாட்டிலுள்ள பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு அவசியமான ஒன்று என்றும், அதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அவர்களில் 83 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதன்படி, மேல் மாகாணத்தில் 98 சதவீதம், ஊவா மாகாணத்தில் 95 சதவீதம், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 84 சதவீதம், வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 83 சதவீதம் , வடக்கு மாகாணத்தில் 82 சதவீதம், கிழக்கு மாகாணத்தில் 74 சதவீதம், மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 52  சதவீதமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1,439 பாடசாலைளும், 50 முதல் 100 மாணவர்களைக் கொண்ட 1,523 பாடசாலைகளும்  உள்ளன என்றும் நாட்டில் உள்ள 10,165 பாடசாலைகளில் 2,962 பாடசாலைகள் 100 க்கும் குறைவான மாணவர்ளைக் கொண்டவை என்றும் தெரிவித்தர்.

முதல் கட்டமாக, குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, பின்னர் படிப்படியாக மற்ற பாடசாலைகளை முறையாகத் திறக்கவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Source 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.