ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 ஆவது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மறைந்த பிரதமர் எஸ்.டப்ளியூ ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் கொழும்பு நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய வருட பூர்த்தி நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த வருட பூர்த்தி நிகழ்வின் போது, கட்சியின் யாப்பு திருத்தப்படவுள்ளது.

இதற்காக இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை மத்திய செயற்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மத்திய செயற்குழுவில் அனுமதி கிடைக்கப்பெற்ற கட்சியின் யாப்பு திருத்த யோசனை அந்த செயற்குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

தற்போது நான்காகவுள்ள சிரேஷ்ட உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக அதிகரிக்கவும், 10 ஆகவுள்ள உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புதிய திருத்தம் ஊடாக சிரேஷ்ட உப தவிசாளர்கள், உப தவிசாளர்கள், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோரை பதவி விலக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.