வெலிகமை ரிபாயிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் ரிபாயிய்யா ஆண்கள் அரபுக் கல்லூரிகளின் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள மரைன் கிராண்ட் மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.
இது, 143 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட, பாராளுமன்ற சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பாக இருக்கும் இலங்கை ரிபாயிய்யா தரீக்கா சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை ரிபாயிய்யா தரீக்கா சங்கத்தின் ஆன்மீகத் தலைவர் ரிபாய் மௌலானா முஹம்மத் ஆசிக் தங்களின் ஆதரவின் கீழ் இந்த விழா நடைபெற்றது.
ரிபாயிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் வரவேற்புரையாற்றினார், அத்துடன் நாஸர் காதிர் கல்லூரி நினைவு மலரின் முதல் பிரதியை முஹம்மத் ஆஷிக் தங்கலுக்கு வழங்கிவைத்தார்.
ரிபாயிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி இருபத்தெட்டு மாணவிகள் மற்றும் ரிபாயிய்யா ஆண்கள் அரபுக் கல்லூரி ஒன்பது மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களின் சான்றிதழ்களை முஹம்மது ஆஷிக் தங்கலிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
விழாவின் விசேட பேச்சாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் டாக்டர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் இருவரும் உரையாற்றினர்.
ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபா மௌலவி அல் ஹாஜ் அப்துல் ஹமீத் (பஹ்ஜி), கலீபாத்துல் ரிபாயி மௌலவி ஏ.சி.ஏ. பளீல் (காசிமி), பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பு துணை மேயர் எம்.டி.எம். இக்பால், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அயாத் அலி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, முஸ்லிம் மத விவகார ஒருங்கிணைப்பாளர் செய்யித் ஹசன் மௌலானா, மக்கள் தொடர்பு அலுவலர் பர்ஸான் முன்சூர், தரீக்காக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(நன்றி - SL Arab News)





