தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நடவடிக்கைகள், நேர்முகப் பரீட்சை நடவடிக்கைகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல், கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைளின் காரணமாக தேசிய அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்வதற்கான தேவையைக் கொண்ட பயனாளிகளுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அவசர அடையாள அட்டை விநியோக சேவை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.வி.குணதிலக்க தெரிவித்தார்..

இது குறித்து வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை:



நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் திகதி தொடக்கம் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த தொற்று அனர்த்த நிலை முழுமையாக முடிவடையவில்லை என்பதுடன் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடும் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் ஒரு நாள் விநியோக சேவையை தொடர்ந்தும் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
02. இருப்பினும் பரீட்சை நடவடிக்கைகள், நேர்முகப் பரீட்சை நடவடிக்கைகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல், கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைளின் காரணமாக தேசிய அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்வதற்கான தேவையைக் கொண்ட பயனாளிகளுக்காக அடையாள அட்டையை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று பிரதேச செயலகத்தின் ஊடாக தற்பொழுது முன்னெடுப்பதற்கான ஒழுஙகுகள் செய்யப்பட்டுள்ளன.
03. இதற்கமைவாக, இந்த விண்ணப்பத்தாரர்களின் தேவையை கிராம உத்தியோகத்தர்கள் மூலம் உறுதி செய்து அவர்களது விண்ணப்பத்தை பிரதேச செயலகத்தில் அடையாள பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்;. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் அந்த அலுவலகத்தில் சேவையில் உள்ள அதிகாரியினால் ஆட்பதிவு திணைக்களத்தின் பதிவை மேற்கொள்ளும் தரவு கட்டமைப்புக்குள் சேர்க்கப்படுவதுடன்; அதற்கான அடையாள அட்டை விரைவாக தயாரிக்கப்பட்டு பதிவு தபாலில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
04. மேலும், மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்களை தயார் செய்த அனைத்து விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பங்களை தமது பொறுப்பில் வைத்திருக்காது பிரதேச செயலகத்தில் உள்ள அடையாள அட்டைப் பிரிவிற்கு அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
05. இதற்கு மேலதிகமாக வழமையான சேவையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் கிராம உத்தியோகத்தர் மூலம் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடிவதுடன் , அதற்கான தேசிய அடையாள அட்டைகளை ஆகக் குறைந்த காலப்பகுதிக்குள் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
06. இதே போன்று ஒவ்வொரு வருடத்தைப் போன்று இந்த வருடத்திலும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் க.பொ.த. பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரையில் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தவறிய அனைத்து பாடசாலைகளும் அந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு , மாகாண அலுவலகங்களுக்கு அல்லது பிரதான அலுவலகத்திற்கு விரைவாக சமர்ப்பிக்க வேண்டும்.
பி.வி.குணதிலக்க
ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.