வர்தமானியின்படி சுருக்கு வலைகளுக்கு  அனுமதி பத்திரம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கடற்தொழில் அமைச்சரிடம்  கோரிக்கை விடுத்தார்.திங்கள் இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 
சுருக்கு வலை என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன மீன்பிடி முறையாகும். ஆனால் எம் மக்கள் மத்தியில் சுருக்கு வலை என்பது தடைசெய்யப்பட்ட தொழில் என்ற கருத்து நிலவுகிறது .உண்மையில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை எது? அங்கீகரிக்கப்பட்ட சுருக்கு வலை எது என்பது பற்றி இந்த சபையில் தெளிவு படுத்தப்படலாம் என நினைக்கிறேன்.
1986 ஆம் ஆண்டு சுருக்கு வலை தொடர்பான வர்தமானி அறிவித்தலின்படி 3/8 (0.375) அங்குல கண் அளவுக்கு மேற்பட்ட சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் வழங்கப்படலாம் என உள்ளது.அந்த வர்தமானியை இங்கு சமர்ப்பிக்கிறேன். ஆகவே வர்தமானி அறிவித்தலின்  படி 3/8 அங்குலத்துக்கு மேற்பட்ட கண் உள்ள வலைகள் அனைத்த்தும் சட்டரீதியான வலைகள். 
ஆனால் தற்போது 1.5 அங்குல கண் அளவுக்கு மேற்பட்ட வலைகளுக்கே அனுமதி பத்திரம் வழங்கப்படுகிறது.இதனால் 1.5 அங்குலத்துக்கு குறைவான வலைகள் தடைசெய்யப்பட்ட வலைகள் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.அது தவறானது அதுபோன்று 3/8 அங்குலத்துக்கும் 1.5 அங்குலத்துக்கும் இடைப்பட்ட வலைகள் கடற்படை ,மீன்பிடி திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. 
1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுருக்கு வலை தொடர்பான திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுருக்கு வலையை அனுமதி பத்திரம் இல்லாமல் யாரும் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளதை காரணம் காட்டி வர்தமானியின் படி அனுமதி வழங்கப்பட்ட சட்டரீதியான சுருக்குவலை மீன்பிடி  திணைக்களத்தால் அனுமதி பத்திரம் வழங்கப்படாததால்  மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் 13 இலட்சம் பெறுமதியான வலைகள் எரிக்கப்பட்டு அவர்களும் வழக்குகளுக்காக நீதிமன்றத்துக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. 
உண்மையில் வர்தமானி மூலம் அனுமதி வழங்கப்பட்ட வலைகளுக்கு அனுமதி பத்திரம் வழங்காதது யாரின் தவறு இது மீனவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.ஆகவே இது தொடர்பாக அமைச்சர் உரிய தெளிவுபடுத்தலை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் 1.5 அங்குல சுருக்கு வலைகளுக்கான அனுமதி பத்திரத்தில் சில நிபந்தனைகள் உள்ளன.உண்மையில் அவை திருகோணமலைக்கு பொருத்தமில்லாத நிபந்தனைகளாகவும் காணப்படுகின்றன.7 கடல் மைல்களுக்கு அப்பால் சென்றே மீன் பிடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.இந்த நிபந்தனை விதிக்க காரணம் தென் பகுதியில் ஏழு மைல்களுக்கு உள்ளே அதிக முருகை கற்பாறைகள் காணப்படுவதால் சுருக்கு வலை மூலம் அவை அழிவடைவதே தடுப்பதற்காக. 
ஆனால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமையில் 7 மைல்களுக்கு உள்ளே அவ்வாறான முருகைக்கற்பாறை இல்லை அத்துடன் 1.5 அங்குல சுருக்கு வலை அலகொடுவா எனப்படும் சூறை மீன் பிடிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது.பாறைகளில் உள்ள மீன்களை பிடிப்பதற்கு இவை பயன்படுத்தப்படுவதில்லை.   
உண்மையில் ஏழு மைல் என்பது திருகோணமலை யை பொறுத்தவரை நடைமுறை சாத்தியம் அற்றது. ஏன் எனில் கிண்ணியாவில் இருந்து ஏழு கடல் மைல் என்பது திருகோணமலையில் இருந்து மூன்று மைல்களாக இருக்கும். ஒருவர் கிண்ணியாவில் இருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் மீன் பிடிக்க செல்லும் போது அவர் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்.ஆகவே திருகோணமலையின் பூகோல அமைப்பை கருத்தில் கொண்டு இந்த எல்லையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அடுத்த நிபந்தனையாக வலையின் நீளம் 225 m உயரம் 25 M என, குறிப்பிடப்பட்டுள்ளது.உண்மையில் 225m வலையை பயன்படுத்தி சூறை மீனை பிடிக்க முடியாது.அவ்வாறு 225m வலையை பயன்படுத்தி சூறை மீன் பிடிக்க முடியும் என மீன்பிடி திணைக்கலாமோ NARA வோ கூறினால் அனுமதி பத்திரம் வழங்க முதல் அவர்கள் முதலில் திருகோணமலைக்கு வந்து அவர்கள் கூறும் வலையில் 100 கிலோ சூறை மீனை பிடித்து காட்டிவிட்டு இந்த நிபந்தனைகளை விதிக்கட்டும்.
இவ்வாறு நடைமுறை சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை விதித்து மீனவர்களை கைது செய்து அவர்களின் உடமைகளை அழிக்க இடமளிக்க வேண்டாம் என நான் கோரிக்கை விதிக்கிறேன்.
2019 ஆம் ஆண்டு முதல் இரவில் சுழியோடி (Diving) அட்டை பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.உண்மையில் பகல் நேரங்களில் அட்டைகளை பிடிக்க முடியாது. அத்துடன் அட்டை ஏற்றுமதி நாட்டுக்கு டொலர் வருமானத்தை பெற்று தரும் துறையாகும்.ஆகவே எவ்வித விஞ்ஞான காரணமும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரம் மீண்டும் வழங்கப்பட தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 


- ரிஹ்மி ஹக்கீம் -
கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 

குறித்த பரீட்சையானது கொழும்பில் மாத்திரமே நடைபெற்றது. 2021 இல் நாட்டின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கும் போது நடைபெற்ற இப்பரீட்சையில் வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்கள் உட்பட கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பிரதேசங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் தோற்றினார்கள்.

பரீட்சார்த்திகள் பலர் தங்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் வந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, விசேட வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் சென்று ஐந்து மணி நேர பரீட்சையை பரீட்சார்த்திகள் எழுதியிருந்தனர்.

இவ்வாறு பரீட்சை 2021 இல் நடைபெற்ற போதும் நீண்ட நாட்களாக பெறுபேறுகள் வெளிவராததால் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாம் நீதிச்சேவை ஆணைக்குழுவை தொடர்பு கொண்ட போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும் 2023 ஆம் வருடம் ஆரம்பமானதை தொடர்ந்தும் பெறுபேறுகள் வெளியாகவில்லை என்பதால் பெறுபேறுகள் எப்போது வெளிவரும், தாமதத்திற்கான காரணம் என்ன என்று வினவிய போது தெளிவான பதில் எமக்கு கிடைக்கவில்லை. 
2023 ஜூன் மாதமாகியும் பெறுபேறுகள் வெளிவராத காரணத்தால் அது தொடர்பில் தகவல் பெறுவதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் 2023 ஜூன் 21 ஆம் திகதி விண்ணப்பம் ஒன்றை அனுப்பினோம். 

RTI விண்ணப்பத்திற்கு 14 நாட்களுக்குள் அரச நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். ஆனால் நீதிச்சேவை ஆணைக்குழு நாம் விண்ணப்பித்து ஒரு மாத காலமாகியும் பதிலளிக்காத காரணத்தால் அதன் தகவல் அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது எமது விண்ணப்பம் தொடர்பில் இவ்வார இறுதியில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும் தொடர்ந்தும் பதில் எதுவும் கிடைக்காததால், ஜூலை 31 ஆம் திகதி மேன்முறையீட்டு விண்ணப்பத்தை (RTI 10) நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பினோம். 
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 03 ஆம் திகதி, எனது விண்ணப்பம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டது. 

அதாவது முதலில் அனுப்பிய விண்ணப்பத்திற்கு 14 நாட்களுக்குள் வழங்க வேண்டிய பதில் 44 நாட்களுக்கு பிறகே எமக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஆணைக்குழுவின் தகவல் அதிகாரியை தொடர்பு கொண்ட போது, ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லை எனவும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே நியமனங்கள் வழங்கப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒரு பிரஜையால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு உரிய காலத்திற்குள் பதிலளிப்பது சகல அரச நிறுவனங்களினதும் கடமையாகும். நாம் அடுத்த கட்டமாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்ய இருந்தோம் எனவும் தெரிவித்தோம்.
எனினும் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளிவரலாம் எனவும் தகவல் அதிகாரி தெரிவித்தார். 

அதற்கிடையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடமும் எமது கோரிக்கையினை முன்வைத்தோம். எனினும் அவரிடமிருந்து பதில் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (21) முதல் பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு கிடைக்கப்பெற்று வருவதை எம்மால் அறியக்கூடியதாக உள்ளது. 
அதனடிப்படையில் சுமார் இரு வருடங்களுக்கு முன்பு நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

எனினும் மொழிபெயர்ப்பு பாடத்தில் சித்தி பெறுவதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய குறைந்த பட்ச புள்ளிகள் மற்றும் வெட்டுப்புள்ளி விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை. எத்தனை பேருக்கு நியமனம் வழங்குவது என்று ஆணைக்குழு தீர்மானம் எடுத்த பின்னர் வெட்டுப்புள்ளி விபரம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வெட்டுப்புள்ளி விபரம் வெளிவராமை காரணமாக நியமனம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

பெறுபேறுகள் வெளியாகியமை எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இது போன்ற பல விடயங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும் என்பதற்கு இது முக்கியவொரு எடுத்துக்காட்டாகும்.
நாட்டில் ஏற்கனவே பல்வேறு திறந்த போட்டிப்பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தாலும் இரு வருடங்களுக்கும் மேலாக சில பரீட்சைகள் நடாத்தப்படவில்லை (உ+ம் : முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தெரிவுக்கான பரீட்சை) என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும். 

அது தொடர்பில் தேவையுடைய தரப்பினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி உரிய தகவலை கோரலாம். அதன்மூலம் சிறந்தவொரு முடிவு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
உரிமையுடன் தகவல் அறிவோம்



தெல்தோட்டை எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர்களை கல்லூரியுடன் இணைக்கவும் அவர்களின் மூலம் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்வரும் 28, 29 மற்றும் 30ம் திகதிகளில் தெல்தோட்டை மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. எனசல்கொல்ல பிறீமியர் லீக் - 2023 என்ற பெயரில் இடம்பெறும் இப்போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் செப்டெம்பர் மாதம் 27ம் திகதி புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற உள்ளது. 

ஒன்றிணைவோம் பலம்பெறுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற உள்ள இந்த சுற்றுப் போட்டித் தொடர்பில் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.



இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்றைய தினத்தில் 2000 கிலோகிராம் தேசிக்காய் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன



இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட தரவு சேகரிப்பு பணிகள் அடுத்தமாதம் மேற்கொள்ளப்படுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் உதவியுடன் பல்வேறு முகவர் நிலையங்கள் மற்றும் சர்வதேச மையத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கரு, தாய் மற்றும் குழந்தைக்கும் ஏற்படும் சிக்கல்களை வைத்தியர்களினால் எதிர்காலத்தில் கணிக்க முடியுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்


வெலிகமவை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் இயற்கையான நிறம் கரும்பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அசாத்திய அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடல் அலைகளின் இந்த திடீர் மாற்றத்தால் மக்கள் மத்தியில் பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நாட்களில் மழை பெய்வதால் ஆறுகளின் தோற்றம் மாறி பாசிகள் பெருகி வருவதால், கடல் அலைகளின் நிறத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகே தெரிவித்துள்ளார்.
எனினும், நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், எனவே யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Blogger இயக்குவது.