அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியிருக்கிறார்.  

இந்நிலையில், அந்நாட்டின் ஒக்லஹோமா மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார் டிரம்ப். கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து இந்த பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி டிரம்ப் , 'கொரோனா பரிசோதனை என்பது இரு பக்கங்களிலும் கூர்மையாக உள்ள வாள் போன்றது. இதில் (கொரோனா) கொடுமையான பகுதி என்னவென்றால் நீங்கள் பரிசோதனைகளை அதிகரிக்கும் போது வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 

ஆகையால், கொரோனா பரிசோதனை செய்யும் அளவை குறைக்க வேண்டுமென எனது நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்' என்றார். 

ஆனால், டிரம்ப் பிரசாரக்கூட்டத்தில் உள்ள ஆதரவாளர்களின் கவனத்தை தன்பக்கம் கொண்டு வர சாதாரணமாக கூறினாரா? அல்லது உண்மையாகவே கொரோனா பரிசோதனைகளை குறைக்க தனது அதிகாரிகளிடம் தெரிவித்தாரா? என்பது குறித்த உண்மையான தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரி கூறுகையில், டிரம்ப் நகைச்சுவையாகவே கூறியதாகவும், அதை ஊடகம் தான் பெரிதுபடுத்தி விட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும், உலகிலேயே அமெரிக்காதான் மிகவும் அதிகமான கொரோனா பரிசோதனை செய்துள்ளது. அது மேலும் தொடர்ந்து பரிசோதனைகளை செய்யும் என தெரிவித்தார்.

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 2 கோடியே 84 லட்சத்து  66 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.