செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்திற்கு அருகில் நிலத்துக்கு அடியில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றின்போது சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்றின் இருப்பையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

திரவ நிலையில் நீர் இருப்பு என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. எனவே, இந்த கண்டுபிடிப்பானது, சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் மிகவும் உப்புத்தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுவதால், இது நுண்ணுயிரிகளின் உயிர் வாழ்தல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

மெல்லிய வளி மண்டலம் கொண்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பதுq என்பது சாத்தியமற்றது. ஆனால் தரைக்கு கீழே திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்த சமீபத்திய கண்டுபிடிப்பானது, 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு சொந்தமான மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆய்வுக்கலத்தின் ரேடாரில் உள்ள தரவை கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இதே ஆய்வுக்கலத்தின் ரேடாரை கொண்டுதான், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தின் நிலப்பரப்புக்கு 1.5 கிலோமீட்டர் கீழே சுமார் 20 கிலோமீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்தனர்.

இருப்பினும், அந்த கண்டுபிடிப்பு 2012 மற்றும் 2015க்கு இடையில் மார்சிஸ் ஆய்வுக்கலன் சேகரித்த 29 கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள கண்டுபிடிப்பானது, 2010 மற்றும் 2019க்கு இடையில் சேகரிக்கப்பட்ட 134 ரேடார் குறிப்புகளை கொண்ட மிகப் பெரிய தரவுத்தொகுப்பை ஆய்வு செய்ததன் மூலம் சாத்தியமாகியுள்ளது.

“2018ஆம் ஆண்டு நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவலை உறுதிசெய்தது மட்டுமின்றி, மூன்று புதிய பிரகாசமான பகுதிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்று இந்த ஆய்வு குழுவை சேர்ந்தவரும் இத்தாலியின் ரோமா ட்ரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான எலெனா பெட்டினெல்லி கூறினார்.

“பிரதான ஏரியானது திரவ நிலையில் நீர் கொண்ட சிறிய அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது. ஆனால், ரேடாரின் தொழில்நுட்ப பண்புகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து அதன் தூரம் காரணமாக, அவை ஒன்றோடொன்று இணைந்துள்ளதா என்பதை நாம் உறுதியாக தீர்மானிக்க முடியாது.”

முன்னதாக, அன்டார்டிகா, கனடா மற்றும் கிரீன்லாந்திலுள்ள பனிப்பாறைகளை கொண்ட ஏரிகளை ஆய்வுசெய்ய பயன்படுத்தப்படும் முறையை தழுவி மார்சிஸ் ஆய்வுக்கலன் திரட்டிய தரவுகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர்.

தற்போது செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்டுள்ள ஏரிகளிலுள்ள பனி உருகுவதற்கு தேவையான வெப்பம் கிடைக்காததால், அங்கு காணப்படும் நீர் உப்புகளின் அதிக செறிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இத்தகைய நிலைமைகளில் செவ்வாய் கிரகத்தில் உயிரிகள் வாழ முடியுமா என்பது அங்கு காணப்படும் நீர் ஆதாரங்கள் எவ்வளவு உப்புத்தன்மை கொண்டவை என்பதைப் பொறுத்தே அமையும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு மேலதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. 

அறிவியல் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.