29.11.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. 2022 நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

இலங்கை அரசியலமைப்பின் 154எ உறுப்புரையின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள நிதி ஆணைக்குழுவால் மாகாண சபைகளுக்கு வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதியைப் பகிர்ந்தளிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகள் தொடர்பாக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். அதற்கமைய, நிதி ஆணைக்குழுவால் 2022 நிதியாண்டுக்கான பரிந்துரைகளை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 154எ(7) உறுப்புரையின் பிரகாரம் குறித்த பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கை தொழிநுட்பக் கல்லூரி மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரிகளில் கட்டுமானம் தொடர்பான பாடநெறியின் இயலளவு விருத்திக்கான கருத்திட்டம்

கட்டுமானத் துறையில் உழைப்புப் படையின் கேள்வியைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான உயர்ந்த தரத்துடனான தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட தொழிநுட்பக் கல்லூரிகளில் கட்டுமானத் துறைசார் பயிற்சிப் பாடநெறிகளை விருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) 04 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்துள்ளது. குறித்த அனுசரணையின் கீழ் மருதானை, இரத்தினபுரி தொழிநுட்பவியல் கல்லூரிகள் மற்றும் இரத்மலானை, மாத்தறை தொழிநுட்பக் கல்லூரிகளில் கட்டுமானம் தொடர்பான பாடநெறிகளின் இயலளவு விருத்தியை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்திற்கு 441,000 அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கம் பங்களிப்புச் செய்கின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தவும், அதற்கான அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக KOICA நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகவும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாண ஒப்பந்தம் - 2 ஆம் கட்டம் வழங்கல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாணக் கருத்திட்டம், உலக வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் Accelerating Higher Education Expansion and Development (AHEAD) Operation கருத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்காக 2019 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் கட்டிடங்களை கிளிநொச்சியில் நிர்மாணிப்பதற்காக தேசிய போட்டி விலைமுறி நடைமுறையைப் பின்பற்றி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, 10 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய குறித்த ஒப்பந்தத்தை போக்கஸ் மார்க்கட்டிங்க் அன்ட் இன்ஜியரிங்க் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் இதயநோய் சத்திரசிகிச்சைக்கான கட்டிடத்தொகுதியை அமைத்தல்

சப்ரகமுவ மாகாணத்தில் வாழ்கின்ற ஏறத்தாழ இரண்டு மில்லியன்கள் மக்களுக்கு இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் மூலம் சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறித்த மருத்துவமனையில் தற்போது இதயநோய் சத்திரசிகிச்சை சேவைகள் இருப்பினும், அதற்குத் தேவையான பௌதீக ரீதியான வசதிகள் போதுமானதாக இன்மையால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அதனால், குறித்த மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளுடன் கூடிய இதயநோய் சத்திரசிகிச்சைத் தொகுதியை நிர்மாணிப்பதற்கும், குறித்த ஒப்பந்தத்தை தயாரித்து, நிர்மாணித்து, ஒப்படைத்தல் அடிப்படையில் பொறியியல் பணிகள் தொடர்பாக மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்குமாக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இரத்மலானஃமொரட்டுவை கழிவு நீர் அகற்றும் கருத்திட்டத்தின் 1 ஆம் படிமுறை - 2 ஆம் கட்டத்திற்காக மலக்கழிவுகளை சேகரிக்கும் வலையமைப்பை விரிவாக்கம் செய்தல்

இலங்கை அரசாங்கம் மற்றும் பிரான்சின் அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் நிதியனுசரணையின் கீழ் இரத்மலானைஃமொரட்டுவை கழிவு நீர் அகற்றும் கருத்திட்டத்தின் 1 ஆம் படிமுறை - 2 ஆம் கட்டத்தின் கீழ் தற்போது காணப்படும் மலக்கழிவு சேகரிக்கும் வசதிகளை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சர்வதேச போட்டிப் பொறிமுறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 07 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, அமைச்சரவையின்; நிரந்தரப் பெறுகைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் ஜியோ இன்ஜினியரிங்க் கோர்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்பாடுகளை தயாரிக்கும் சட்டத்தை வகுத்தல்

இலங்கை பிரஜைகளிடமுள்ள இறைமையின் அடிப்படைக் கூறாக அமைவது சர்வசன வாக்குரிமையாகும். அது தேர்தலின் போது மக்கள் விருப்பாக சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தேர்தலின் போது ஏதேனுமொரு வேட்பாளர், கட்சி அல்லது குழுவொன்று மக்களுடைய வாக்குகளுக்காக எந்தவொரு கட்டுப்பாடுகளின்றி அதிகளவில் பணம் செலவிடுவதன் மூலம் பொதுமக்களின் விருப்பு தொடர்பாக குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இல்லாவிடின், கட்சியால் மேற்கொள்ளப்படும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் தேவைகள் தொடர்பாக இலங்கையில் கலந்துரையாடப்பட்டு வருவதுடன், இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகள் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்ட ஒழுங்குகளை விதித்துள்ளன. தேர்தலின் போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைக் குறைப்பதற்காகவும், ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காகவும் தற்போதுள்ள கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கு, 2017 ஒக்ரோபர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் கட்டமைப்பு மற்றும் சட்ட ஒழுங்களுக்கமைய மறுசீரமைப்புக்களை அடையாளங் கண்டு, திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழுவால் குறித்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி, உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலையத்திற்கான அறக்கட்டளையை உருவாக்குவதற்கான சட்டமூலத்தைப் பாராளுமன்றில் சமர்ப்பித்தல்

முதிர்வடைந்த மற்றும் ஆதரவற்ற நிலையிலுள்ள பிக்குமாருக்கான பராமரிப்பு நிலையமாக நடாத்திச் செல்லும் கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலையத்தை சட்ட ரீதியான நிறுவனமாக மேற்கொண்டு செல்வதற்கு இயலுமான வகையில் அறக்கட்டளையை நிறுவுவதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக 2014 ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

சந்தை விலையை நிலைப்படுத்தல், நுகர்வோருக்கு சலுகை வழங்கல் மற்றும் உள்ளூர் விவசாயத்தைப் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களுக்காக 2007 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க விசேட வர்த்தகப் பொருட்களின் வரிச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விதிகள் அடங்கிய கீழ்வரும் வர்த்தமானி அறிவித்தல்களின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2021 யூலை மாதம் 18 ஆம் திகதிய 2236/66 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

• 2021 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதிய 2240/20 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

• 2021 செப்ரெம்பர் மாதம் 07 ஆம் திகதிய 2244/8 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

• 2021 ஒக்ரோபர் மாதம் 11 ஆம் திகதிய 2249/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

• 2021 ஒக்ரோபர் மாதம் 13 ஆம் திகதிய 2249/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

• 2021 நவம்பர் மாதம் 02 ஆம் திகதிய 2252/9 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

• 2021 நவம்பர் மாதம் 02 ஆம் திகதிய 2252/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

09. உள்ளூர் சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக மியன்மார் (பர்மா) இலிருந்து அரிசி இறக்குமதி செய்தல்

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 20,000 மெற்றிக்தொன் அரிசியை, ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்கன் டொலர்களுக்கு வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.