சகா

நடைபெற்றுவரும் க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் போது கல்முனையில் உள்ள பரீட்சை மத்திய நிலையமொன்றில் ஆள்மாறாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பரீட்சையில் சகோதரனுக்கு பதிலாக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கல்விப் பொதுத் சாதாரண பரீட்சை, நாடு பூராகவும் திங்கட்கிழமை (23)  ஆரம்பிக்கப்பட்டது.

 ​விளக்கமறியலில் வைக்கப்பட்டவர், தனிப்பட்ட பரீட்சார்த்தியாவார்.  தூர இடமொன்றில் இருந்து வருகை தந்துள்ளதுடன்  சமய பாட பரீட்சையை சகோதரனுக்கு பதிலாக எழுதியதுடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், இச்சம்பவத்தில் ஒரு முக தோற்றமுடைய இரண்டு  சகோதரர்களும் தத்தமது  அடையாள அட்டையில் மாற்றம் செய்து இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் 32 வயதுடைய தனது சகோதரனுக்கு பதிலாக 28 வயதுடைய தம்பி முறையான சகோதரனே இவ்வாறு பரீட்சை எழுதி சிக்கியுள்ளார்.

கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய   சந்தேக நபரை  பெரிய நீலாவணை பொலிஸார். கைது செய்துள்ளதுடன் பின்னர் மறுநாளான செவ்வாய்க்கிழமை(24) அன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  இரண்டு நாட்கள் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இதே வேளை, இச்சம்பவம் குறித்து  உரிய தரப்பினரிடம் விசாரணைகளை கல்வி அதிகாரிகள் ,பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் இன்மையால் பரீட்சார்த்திகள் பலரும், கடும் சிரமங்களுக்கு மத்தியில், பரீட்சைக்குத் தோற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.