தற்போது கடும் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் ஆரோக்கியச் சீர்கேடுகள் ஏற்படலாம் என, சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சீர்கேடுகளைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம், உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன் கூடிய இலேசான ஆடைகளை அணிவது சிறப்பானது. குறிப்பாக விவசாய, கட்டுமானப் பணிகளில் ஈடுபடும்போது, சூரியக் கதிர்களின் நேரடித் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தினந்தோறும் காலையிலேயே குளிப்பது பொருத்தமானது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் சந்தர்ப்பங்களில், பிள்ளைகள் திறந்த வெளிகளில் விளையாடுவதை இயன்றளவு தவிர்ப்பது நல்லது. அத்துடன், கூடுதலான வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளைத் தனியே வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இனிப்பும், மதுசாரமும் செறிந்த பானங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும் என்றும், சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.