சின்னத்தை மாற்றுவதற்கான கால அவகாசம் நிறைவு ; ஐக்கிய மக்கள் சக்திக்கு இரண்டு தெரிவுகள்

Rihmy Hakeem
By -
0

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அறிவிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்திருந்தது.

பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு 7 தினங்களுக்குள் அரசியல் கட்சிகள் குறித்த தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல்கள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 20 க்கும் அதிகமான கட்சிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை சின்னத்தை மாற்றுவதற்கான காலவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி, தேர்தலில் தொலை பேசி சின்னம் ஊடாகவே போட்டியிட முடியும்.

அவ்வாறு இல்லையெனில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும்.

இந்த நிலையில் சின்னத்தை மாற்றும் காலம் நிறைவடைந்துள்ளமை அடுத்து பொது தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் எமது செய்தி சேவை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் வினவப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய அவர், தொலைபேசி சின்னத்தின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதால் இந்த கூட்டணியில் இணையாத ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய தரப்பினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சி, யானை சின்னத்தின் கீழ் பொது தேர்தலில் போட்;டியிடவுள்ளதாக அதன் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அண்மையில் கடிதம் மூலம் அறிவித்தார்.

இதேவேளை, நெருக்கடி நிலவும் 6 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

(சூரியன்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)