புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இரவு (11) முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறை தொடர்பில், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில், பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கொழும்பில், நேற்று இவ்விரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென்ற முடிவு எடுக்கப்பட்டதுடன், வேட்பாளர்கள் ஒதுக்கீடு தொடர்பில், இருதரப்பும் கலந்துபேசி முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் இரண்டு கட்சித் தலைவர்களுடன் மு.காவின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பிரதித்தலைவர் ஹரீஸ், புத்தளம் நகர பிதா பாயிஸ், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, உள்ளிட்ட இரு கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

