அரச வைத்தியசாலைகளில் க்ளினிக் - சிகிச்சை பெறும் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் தம்மிடம் இல்லாத நோயாளர்களுக்கு மருந்து வகைகளை வழங்குவதற்காக இலங்கை தபால் சேவையுடன் ஒன்றிணைந்த வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மீண்டும் இன்று (2020.11.04) தொடக்கம் நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெறும் நோயாளர்களின் மருந்துகளை வீடுகளில் வழங்கும் பணி இன்று ஆரம்பமானது..
இந்த மருந்துகளை நோயாளர்களின் வீடுகளில் வழங்குவதாயின், நோயாளர் வதிவிடத்தின் முகவரி, தொலைபேசி விபரங்கள் அவசியம்.
தமது க்ளினிக் சிகிச்சை புத்தகத்துடன் சரியான முகவரியை வழங்கவில்லையாயின், தொலைபேசி மூலம் நீங்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலைக்கு அழைப்பை மேற்கொண்டு தகவல்களை பூரணப்படுத்த முடியும்.
அப்பொழுது உங்களது வைத்தியசாலை பணியாளர்கள் உங்களுக்கான மருந்து பொதிகளை தயார் செய்து முகவரி, தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு தபாலை விநியோகிக்கும் பணியாளர்களிடம் ஒப்படைப்பர்.
இதனை தொடர்ந்து தபாலை விநியோகிக்கும் பணியாளர்கள் மூலம் உங்களது வீட்டிளிலேயே மருந்துகளை கொண்டு வந்து ஒப்படைக்கப்படும்.
வைத்தியசாலைகளுக்கு தகவல்களை வழங்கும் போது உங்களது பிரதேச குடும்ப சுகாதார சேவை அதிகாரி, கிராம உத்தியோகத்தரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது பொருத்தமானதாகும்.