ஆப்கான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தாலிபன்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள நகர எல்லையில் காத்திருக்குமாறு தமது போராளிகளை தாலிபன்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மக்கள் அதிகம் வாழும் காபூல் நகரில் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து நேரலாம் என்று கருதி, நகரின் எல்லைகளிலேயே தயாராக காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாலிபன்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
அதில், தற்போதைக்கு நகரின் பொறுப்பு அரசிடமே உள்ளது. அமைதியான வழியில் ஆட்சிப்பொறுப்பை அரசு ஒப்படைப்பது தொடர்பாக அதனுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானியர்கள் நாட்டுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு வலியுறுத்தியுள்ள தாலிபன்கள், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறுப்புள்ள அரசாங்கம் மூலம் எதிர்கால இஸ்லாமிய அரசு முறைக்கு நாடு மாறுவதை காண வேண்டும் என்று கூறியுள்ளனர்.