இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

Rihmy Hakeem
By -
0

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் பெண் நீதிபதியை மிரட்டிய குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், போலீசாரால் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது ஆதரவாளரான ஷாபாஸ் கில்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கில் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சட்டினார். மேலும், தனது கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட பெண் நீதிபதி ஆகியோரை மிரட்டும் வகையில் பேசினார்.

அவரது உரை நாடு முழுவதும் செய்தி அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், இம்ரான்கானின் உரையை அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் நேரலையில் ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை விதித்தது.

இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (ஏடிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரிகள், நீதிபதி உள்ளிட்டோரை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இம்ரான் கான் மீதான வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் இஸ்லாமாபாத் நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் முன் ஜாமின்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  இம்ரான்கானுக்கு வரும் 25-ம் தேதி வரை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)