(நூருல் ஹுதா உமர்)
பிழையான அரசியல் முன்னெடுப்பொன்றினால் மிகப்பெரும் பொருளாதார சவாலை எதிர்நோக்கி வரும் எமது நாட்டை மீட்டெடுக்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் கட்சி சார்ந்த மற்றும் தனிப்பட்ட அரசியல் இலாபங்களைக் கருத்திற்கொண்டு அரசியல் செய்வதைக்கைவிட்டு நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா கேட்டுக்கொண்டார்.
காத்தான்குடியில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்க முடிகின்றது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான பாதையில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளும் ஒருமித்து ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
மேலும், தற்போதுள்ள சவால்களை வெற்றி கொள்ள இப்போது ஒற்றுமையான விட்டுக்கொடுப்பு நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் தான் முடியுமென உறுதியாக தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் நாட்டை சரியான வழியில் கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் சுயஅரசியல் இலாபங்களை மறந்து எவ்வித அரசியல் பாரபட்சங்களுமின்றி நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு எமது நாடு இன்றுள்ள நிலையில் மக்கள் படும் கஷ்டங்களை கவனத்திலெடுத்து மக்களுக்கான அரசியலை ஒற்றுமையுடன் 'பல்கட்சி' அரசொன்றை அமைத்து அரசியல் இஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி வெளிநாட்டு முதலீடுகளையும், சர்வதேச நாணய நிதிய உதவிகளையும் பெற்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்.
நாடு கடலில் சிக்கிய படகு போன்று திசைதெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலையில் இப்போதுள்ளது. இந்நேரம் அரசியல் செய்து கட்சியைப் பாதுகாப்பது குறித்தோ அல்லது வாக்கு வங்கி குறித்தோ எமது பிரதிநிதிகள் சிந்தித்துச் செயற்படக்கூடாதென்றும் நாளைய தலைமுறைக்கு சகல வளமுமிக்க எமது நாட்டை எப்படி ஒழுங்காகக் கையளிப்பதென்பது பற்றி சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இவ்விக்கட்டான சூழ்நிலையில் சகல பேதங்களும் துறந்து எமது தனிப்பட்ட விரும்புவெறுப்புகளுக்கப்பால் சென்று இலங்கையர்களாகச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.