உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு - ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

TestingRikas
By -
0
உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு

 இரண்டாம் உலகப்போர் கால தலைவர்கள் போல் நாம் ஒன்றிணைந்து அதற்கான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும்‌ அந்த பொறுப்பு நம் தோள்களில் தான் உள்ளது  இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு  

உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு. இரண்டாம் உலகப்போர் கால தலைவர்கள் போல் நாம் ஒன்றிணைந்து அதற்கான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும். அந்த பொறுப்பு நம் தோள்களில் தான் உள்ளது என்று இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை  புதுதில்லியில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடோடோ விமான நிலையத்தில் வரவேற்றார்.

இதனையடுத்து, ஜி-20 மாநாட்டு நடைபெறும் பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். பின்னர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது. 
உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு. இந்த உலகம் முழுவதும் இணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும். இதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன். கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் பேரழிவுகளை ஏற்படுத்தியது. அப்போதைய் உலகத் தலைவர்கள் அமைதிக்கு திரும்புதலுக்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். இப்போது இது நமது நேரம். நமக்கான வாய்ப்பு. உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

2030ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது என்றார். எரிசக்தி விநியோகத்தில் தடையை ஊக்குவிக்க கூடாது, எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை அவசியம் என்றார். பசுமையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.

சுத்தமான எரிசக்தி, சுத்தமான சுற்றுச்சூழல் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது. ஏனெனில் இந்தியா இப்போது வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறது. ஆகையால் இந்தியாவுக்கு எரிசக்தி கிடைப்பதைத் தடுக்கும், எரிசக்தி ஸ்திரத்தன்மையை அசைக்கும் எவ்வித தடைகளையும் ஊக்குவிக்கக் கூடாது. உலகில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு நிலவுவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவதே இந்த தருணத்தின் தேவை. அடுத்த ஆண்டு புத்தரும், காந்தியும் பிறந்த மண்ணில் நாம் அனைவரும் ஜி20 மாநாட்டிற்காக கூடும்போது நாம் உலகிற்கு அமைதிக்கான தகவலை இன்னும் அழுத்தமாக கடத்துவோம்.
எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாட்கள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்க கூடாது. எரிபொருள் சந்தையில் நிலைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓவ்வொரு நாட்டிலும் ஏழைக் குடிமக்களுக்கான சவால் மிகவும் கடுமையானது. அன்றாட வாழ்வே அவர்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கிறது. 
இவ்வாறு அவர் பேசினார்.

(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)