கஹட்டோவிட்ட நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், வத்துப்பிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் (02) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முக்கிய மருத்துவப் பரிசோதனைகள்
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களைக் கண்டறிந்து தடுக்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் குறிப்பாக:
* மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
* சர்க்கரை வியாதி (Diabetes) பரிசோதனை
* குருதியமுக்கம் (Blood Pressure) தொடர்பான பரிசோதனைகள்
வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் நிபுணத்துவமிக்க மருத்துவர் குழாம், தாதியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து பொதுமக்களுக்கான இப்பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
விசேட புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் புற்றுநோய் தொடர்பான வைத்திய நிபுணராகப் பணியாற்றும் வைத்தியர் ஹஸன் லரீப் அவர்களின் விசேட விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது. புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்பகால அறிகுறிகள் குறித்து அவர் வழங்கிய ஆலோசனைகள் அங்கிருந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்
இந்நிகழ்வில் கஹட்டோவிட்ட கிராம சேவகர் பிரதீப், சுகாதார அதிகாரிகள் மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
நபவிய்யா தரீக்காவின் முகத்தம் அப்துஸ்ஸமீன் ஹாஜியார், தக்கியாவின் சிரேஷ்ட மத்திச்சம் அல் ஹாஜ் உஸ்மான் ஆகியோரின் வழிகாட்டலில், இந்த செயற்திட்டத்தை சகோதரர் ரிக்கான் மற்றும் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் கமல் ஆகியோர் மிக நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
கஹட்டோவிட்ட மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த இலவச சேவையின் மூலம் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

