சட்டவிரோத மற்றும் ஆபத்தான சமூக சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விஷேட கூட்டமொன்று அத்தனகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் மண்டபத்தில் நேற்று (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஊர்மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளின் தீங்குகளில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பிரதேசத்தில் அண்மையில் திருட்டு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் உங்களது வீடுகளில் நகைகளை அலுமாரிகளில் வைக்காமல் பாதுகாப்பான இன்னொரு இடத்தில் வைக்குமாறு அத்தனகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தினார்.
அத்தனகல்ல பிரதேசம் கசிப்பு உற்பத்திக்கு பெயர் போன பிரதேசமாக இருந்த நிலையில், தான் பதவிக்கு வந்த பின்னர் பெருமளவு அதனை ஒழித்துள்ளதாக தெரிவித்த அவர், அங்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தையும் பெருமளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்த அவர் தான் கஹட்டோவிட்ட மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் அன்பு கொண்டவன் என்றும் தெரிவித்தார்.
எதிர்பார்த்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் காரணமாக மற்றுமொரு கூட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் வார இறுதி நாள் ஒன்றில் இரவு நேரம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அஷ்ஷெய்க் எம்.எம்.மொஹமட், அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் நிறுவன தலைவர் அஷ்ஷெய்க் நூருல்லாஹ், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் பிர்தௌஸ், பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


