பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியானது தாங்கள் இழந்துள்ள செல்வாக்கினை கட்டியெழுப்பும் நோக்கில் காஸ்மீர் தாக்குதலை பயன்படுத்தி வருகின்றது.       

தாங்களே இந்த தாக்குதலை நடாத்தினோம் என்று “ஜெய்ஸ் ஈ முகம்மத்” என்னும் விடுதலை இயக்கம் உரிமை கோரியிருந்தும், பாகிஸ்தான் மீது வெளிப்படையாக குற்றம் சாட்டும் நடவடிக்கையிலேயே மோடி அரசு கவனம் செலுத்துகின்றது. 

இவ்வாறான மோடி அரசின் பொறுப்பற்ற பிரச்சாரமானது இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மீது வன்முறைகளை தூண்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

இவ்வாறு முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்வது பீ ஜே பீக்கு புதிய விடயமல்ல. 

காஸ்மீர் ராஜ்யமானது நீண்டகால வரலாற்றைக் கொண்டது. அங்கு பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் வாழ்ந்தாலும், முஸ்லிம் அல்லாதவர்கள் காஸ்மீரை ஆட்சி செய்து வந்தார்கள். 

பாகிஸ்தான் இந்தியா ஆகிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட இருந்த வேளையில் காஸ்மீரை ஆட்சி செய்துவந்த “ஹரி சிங்” தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு எதிராக அங்குள்ள பழங்குடியினர்கள் கிளர்ச்சி செய்தார்கள்.

இந்த கிளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னர் ஹரி சிங் இந்தியாவின் உதவியை நாடியதுடன், நேருவின் வேண்டுகோளுக்கிணங்க தற்காலிக இணைப்பு என்ற ரீதியில் முழு காஸ்மீரையும் இந்தியாவுடன் இணைத்துகொள்வதாக சாசனத்தில் கையெழுத்திட்டார்.   

இந்த இணைப்பானது காஸ்மீர் மக்களின் சம்மதம் இன்றி மன்னர் ஹரி சிங்கின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும். இது 1947 ஒக்டோபர் மாதம் நடைபெற்றது.

இந்த இணைப்பை காஸ்மீர் மக்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் உற்பட உலக நாடுகள் நிராகரித்தது. 

உலக நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் இது ஒரு தற்காலிக இணைப்பு என்றும் காஸ்மீரின் எதிர்காலத்தை அம்மக்களே விரைவில் தீர்மானிப்பார்கள் என்றும் அப்போது இந்தியாவின் நேரு அரசு அறிவித்திருந்தது. 

இருந்தாலும் காஸ்மீர் மக்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வதற்கான சர்வர்ஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்தினையும், உலக நாடுகளின் வேண்டுகோளையும் இதுவரையில் இந்தியா மறுத்தே வந்துள்ளது. 

இந்த பிரச்சினையை இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் செல்வாக்கினை அதிகரிப்பதற்காக பயன்படுத்தி வந்துள்ளார்களே தவிர, இதய சுத்தியுடன் தீர்த்து வைக்கின்ற நோக்கம் அவர்களிடம் இருந்ததில்லை.

அந்தவகையில் அண்மையில் நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்குவதன் மூலம் இந்திய மக்கள் மத்தியில் தங்களது வீரத்தை நிலைநிறுத்தும் தேவை மோடி அரசுக்கு உள்ளது. 

அதற்காக பாகிஸ்தான் எல்லைகளில் அதிகமான இராணுவ வீரர்களை குவித்து வருவதுடன், போர் ஒத்திகைகளிலும் இந்திய படையினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

காஸ்மீரில் இந்திய இராணுவத்தினர்கள் மீதான தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்ட பாகிஸ்தான் மீது தாக்குதல் நடாத்தி பாகிஸ்தான் இராணுவத்தினர்களை கொன்று உள்ளோம் என்ற வெற்றிச் செய்தியை இந்திய மக்களுக்கு அறிவிப்பது.

அல்லது அப்பாவி காஸ்மீர் மக்களை கொலை செய்துவிட்டு தீவிரவாதிகளை கொலை செய்துள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்திய மக்களுக்கு காண்பிப்பது என்ற அரசியல் நோக்கம் மோடி அரசுக்கு உள்ளது.

அவ்வாறு செய்வதன் மூலம்தான் எதிர்வரும் தேர்தலை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என்பது மோடி அரசின் அரசியல் நிலைப்பாடாகும். 

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.