அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட குறித்த நேர்காணலுக்கு வழங்கப்பட்டுள்ள பின்னூட்டங்கள் சான்று பகர்கின்றன.

பல பெரும்பான்மை சகோதரர்களின் பெயர்களைத் தாங்கியுள்ள பின்னூட்டங்கள் நேர்மறைக் கருத்துக்களையும் அவர்களின் உள்ளக்கிடக்கைகளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.

பெரும்பான்மை சகோதரர்களின் பெயர்களைத் தாங்கியுள்ள நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களிலிருந்து ஒருசிலவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்த்து இங்கே பதிவிடுகிறேன்.

இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் பல சிங்கள மக்களிடம் உள்ள சந்தேகங்கள் வெறும் ஒன்றரை மணிநேர நிகழ்ச்சியினூடாக ஓரளவுக்கேனும் களையப்பட்டுள்ளமை இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரும் வெற்றியாகும்.

அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் இந்தத் தூய பணி இன்னும் தொடரவேண்டும்.

1. Ruwan Bandara: சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பாராது இதயத்தினூடாக அவர் சொல்வதைக் கேட்டுப்பாருங்கள். நாம் எங்கு பிழைவிட்டிருக்கிறோம் என்பதை இப்போதேனும் புரிந்துகொண்டு எமது பிள்ளைகளுக்காவது மனிதம் நிறைந்த ஒரு நாட்டை உருவாக்குவோம்!

2. Arunya Nirmaliee: இன்றிலிருந்து எனக்கு முஸ்லிம் பெண்மணிகள் புர்கா அணித்திருக்கின்றனர் என்பதால் கோபமோ வெறுப்போ ஏற்படாது. நாம் அவர்களை மதிக்க வேண்டும். இலங்கையில் அரைகுறை ஆடையணிந்து திரிகின்ற சகோதரிகளுக்கு சிறந்ததொரு செய்தி வழங்கப்பட்டுள்ளது.

3. Krishan Kaushalya: (இந்த நிகழ்ச்சி முஸ்லிம்களும் கேட்கும் விதமாக தமிழ்மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும். அவர்களும் இதனைக் கட்டாயம் கேட்க வேண்டும்). இந்த மௌலவி சிறந்த அறிவைக் கொண்டுள்ளார். சிறந்ததொரு மனிதர். எல்லாவற்றையும் நேர்மையாக வெளிப்படுத்துகின்றார். இவரைப் போன்று எல்லா முஸ்லிம் சகோதரர்களும் நினைப்பார்களேயானால் இந்த நாடு எவ்வளவு அழகானதாக இருக்கும். சத்துர நிகழ்ச்சியை நகர்த்திச்செல்கின்ற விதம் பாராட்டத்தக்கது. இந்த முஸ்லிம் சகோதரரிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.



4. Sulari Hansika: பெறுமதியான ஒரு கலந்துரையாடல். கற்றுத்தேர்ந்த மக்கள் ஒரு பெறுமதியான புத்தகத்தைப் போன்றவர்கள். எமக்கு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன.

5. Dimuth Aladeniya: இவர் சிங்கள மொழியைப் பிரயோகிக்கின்ற விதத்தைப் பார்க்கின்றபோது மெய்சிலிர்த்தது எனக்குமட்டும்தானா? சிங்களவர்களான எங்களின் வரலாற்றிலிருந்தே உதாரணங்களை எடுத்து, கத்தியால் குத்துவத்தைப் போன்று எங்களையே அதுபற்றிக் கேள்வி கேட்கின்றபோது இடிவிழுந்ததுபோல் வெட்கமும் கவலையும் ஏற்பட்டது எனக்குமட்டும்தானா?

6. Hashini Himaya: மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றிச் சொன்ன விடயமென்றால் சூப்பர். மக்கள் சரியான சுயநலவாதிகள். சிலவேளை முஸ்லிம் சமயத்தவர்கள், "கோழி இறைச்சி சாப்பிட வேண்டாம்.... கோழி நாம் நேசிக்கின்ற ஓர் உயிரினம். எமது மார்க்கத்தின்படி கோழியை தெய்வத்தன்மையுடன் நோக்குகின்றோம். அதனால் கோழிகளைக் கொல்ல வேண்டாம். கோழிக்கடைகளை மூடிவிடுங்கள்" என்று சொன்னால் அவர்களின் மார்க்கத்திற்கு மதிப்பளித்து சிங்கள மக்கள் அவ்வாறு செய்வார்களா? ஒருபோதும் இல்லை. அந்த முஸ்லிம் மக்களுக்கு மாடு என்பது கோழி, மீன், ஆடு போன்றதோர் உயிரினம்தான். எமது மக்கள் உடும்பு, முள்ளம்பன்றி, மான் போன்றவற்றைச் சாப்பிடுவது பற்றி ஒரு கதையும் இல்லை. மாட்டிறைச்சி சாப்பிடவேண்டாம் எனச் சொல்கின்ற பலர் வேட்டையாடிய இறைச்சிகளைச் சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பப்படுகின்றனர். மாட்டைக் கொல்லவேண்டாம்.... யானையைக் கொல்லவேண்டாம் என வெட்கமின்றிக் கதைக்கின்றனர். அப்படியல்ல. எந்தவோர் உயிரினத்தையும் கொல்லவேண்டாம் என்றே சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். சிங்கள, கத்தோலிக்க மக்களிலும் முஸ்லிம்களைப் போன்றே ஜாதி, மதங்களுக்காக சண்டை பிடிப்பவர்கள் இருக்கின்றனர். பிள்ளை பெறுவது பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், எமது பாட்டியின் அம்மாவின் காலத்தில் எல்லா வீடுகளிலும்போல 12 பிள்ளைகள் என்ற அளவுக்குப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இப்போதுள்ளவர்கள் பொருளாதாரம், பாலியல் சார்ந்த வெட்கம் போன்ற காரணங்களினால் அந்த நிலையைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொண்டனர். எங்களுடைய பௌத்தமும் "பிறப்பென்பது கவலைகரமானது" என்றுதான் எமக்குக் கற்றுத்தருகின்றது. அதுதான் இதற்கான பிரதான காரணம். ஆனால், முஸ்லிம்களின் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை மிக அரிதாகவே முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் சேர்க்கின்றனர்.... வீதிகளில் அநாதரவாக விடுகின்றனர். ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மனிதர்கள் பெறுமதியானவர்கள்.

ஒகொடபொல ரினூஸா
31.03.2019


யொவுன் புரய - 2019 இனை முன்னிட்டு நன்னீர் மீன் பிடித்துறையில் அதிக கேள்வியுள்ளதும், பெறுமதி வாய்ந்ததுமான 90,000 மீன் குஞ்சுகள் வீரவிலை ஹம்பாந்தோட்டை, வீரவில ஏரியில் விடப்பட்டன.

யொவுன் புரய 2019 இனை முன்னிட்டு ஹம்பாந்தோட்ட, வீரவில ஏரியில் மீன் குஞ்சுகள் இடும் நிகழ்வு நேற்றைய தினம் (30) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தலைமையில் நடைபெற்றது. 

நன்னீர் மீனவர்களை பலப்படுத்தும் துரிதமான வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு வீரவில ஏரியில் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக இடப்பட்டன.

இவ்வாறு விடப்பட்ட மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை 90,000 இற்கும் அதிகமாகும். இதன் மூலம் நன்னீர் மீனவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கக் கூடியதாக இருக்கும். 

ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்




ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்­விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்­சையில் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் சேர்ந்த ஜானக குமாரசிங்க மற்றும் அச்சலா திசாநாயக்க ஆகிய தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்.

இவர்கள் ஆரம்பக் கல்வியை நாஹொல்லாகொட மகாவித்தியாலயத்தில் கல்வியை தொடங்கினர். புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று பேரும் சித்தி பெற்றனர்.

இதனையடுத்து குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் தமது கல்வியைத் தொடர்ந்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மூவரும், ஒன்பது ஏ திறமைச் சித்திக­ளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஈ.எம். திவ்யாஞ்சலி தெவ்மினி குமார­சிங்க, ஈ.எம். நவாஞ்சலி தெத்மினி குமார­சிங்க மற்றும் ஈ.எம். பிரியங்ஞ்ஜன பியு­மன்ன குமாரசிங்க ஆகிய சகோதர சகோத­ரிகளே இந்தச் சாதனையைப் படைத்துள்ள­னர்.

(கேசரி)


மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட கஞ்சிப்பான
இம்ரான் , கொழும்பில் சி ஐ டியினரின் தீவிர விசாரணைகளில் பல முக்கிய விடயங்களை கசிய விட்டிருப்பதாக தகவல்..

பல அரசியல்வாதிகள் , நடிகர்கள் , வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரின் பெயரை வெளியிட்டுள்ள இம்ரான் தனக்கு உரிய பாதுகாப்பு சிறையில் வழங்கப்படுமானால் மேலும் பல தகவல்களை கூறத் தயாரென கூறியிருப்பதாக அறியமுடிகின்றது.
கஞ்சிப்பான இம்ரானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பான அறிக்கை மற்றும் சிக்கியிருக்கும் அரசியல் பிரமுகர்களின் பெயர்களை பாதுகாப்புத்துறை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.

அதேபோல அவரிடம் வெளியாகிய பாதாள உலகக் கோஷ்டியின் விபரங்கள் ஊடாக உடனடியாக கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

17 மணி நேர விசாரணைகளின் போது இடையிடையே கண்ணீர் விட்டழுத இம்ரான், சமூகம் தான் தன்னை குற்றவாளியாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டாரென உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்லவிருந்த இம்ரானுக்கு கொழும்பு விமான நிலையத்தில் டிரான்சிட் ஊடாக தப்பிச் செல்ல உதவியவர்கள் குறித்தும் விசாரணைகள் நடப்பதாக அறியமுடிகின்றது.

நன்றி - மடவளை நியூஸ் 


அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இரண்டு மாதங்களுக்குள் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையில் பட்டதாரிகளுக்கு தமது வல்லமையை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும். 

பட்டதாரிகளிடமிருந்து தேவையான சேவை கிடைக்காமை பாரிய பிரச்சினையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். 

அரச தகவல் திணைக்களம்


கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு மீள்திருத்த நடவடிக்கைக்காக, எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) வெளியாகின.

இந்நிலையில், மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலை மாணவர்கள் தத்தமது பாடசாலை மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பத்திரிகை விளம்பரங்களை பின்பற்ற வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  


உலகத்தின் அனைத்து நாடுகளும் உற்பத்தித்திறன் தொடர்பில் கவனம் செலுத்தி முன்னோக்கி சென்றதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இலங்கையிலும் அரச மற்றும் தனியார் துறைகளின் உற்பத்திகள், போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் எனவும், அத்துறைகளை விருத்தி செய்யாது நாடு எனும் ரீதியில் முன்னோக்கி செல்வதற்கு முடியாது எனவும் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். 

பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உற்பத்தித்திறன் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

'இற்றைக்கு 72 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் பிரதான நாடொன்றாக இலங்கை கருதப்பட்டது. நாங்கள் பாடசாலை செல்லும் காலத்தில் கூட இலங்கைக்கு ஆசியாவில் முக்கிய இடம் கிடைத்திருந்தது. அன்று எமது நாட்டில் காணப்பட்ட நிர்வாக சேவை, அரச சேவை, வெளிநாட்டு சேவை என்பன ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக காணப்பட்டன என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.

எனினும் இன்று ஆசியாவின் பல நாடுகள் எம்மை விட முன்னோக்கி சென்றுள்ளது. அந்த நாடுகளில் அரச சேவையும், தனியார் சேவையும் பாரியளவு முன்னேற்றம் கண்டுள்ளது. 

இன்று ஆபிரிக்க நாடுகளின் பெருந்தோட்ட துறையானது இலங்கையை விடவும் உயர்ந்த அபிவிருத்தி மட்டத்தில் காணப்படுகின்றது. ஏனைய நாடுகள் விவசாயத்துறை, கைத்தொழில் மற்றும் சேவைப் பிரிவுகளில் இலங்கையை பின்தள்ளிவிட்டு முன்னோக்கி சென்றுள்ளன. அந்த நாடுகளின் உற்பத்தித்திறன் எம்மை விட வேகமாக முன்னோக்கி சென்றுள்ளமையே இதற்கான காரணம் என நான் கருதுகின்றேன்.  

அந்த நாடுகளின் தனியார் பிரிவுகளும் சரி, அரச பிரிவுகளும் சரி சர்வதேச சந்தையில் போட்டியிட்டு முன்னோக்கி சென்றுள்ளன. எனினும் முன்னைய காலத்தில் இந்த நாடுகளில் நிர்வாக சேவைக் கூட இருக்கவில்லை. வியட்நாமானது, பிரான்ஸ் நாட்டின் காலனித்துவத்தின் கீழ் இருந்த காலப்பகுதியில் கூட முறையான நிர்வாக சேவையொன்று காணப்படவில்லை. 



எனினும் இன்றைய நிலையில் அவ்வனைத்து நாடுகளும் உற்பத்தித்திறன் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முன்னோக்கி சென்றுள்ளன. அதனடிப்படையில் எமது நாட்டிலும் தனியார் மற்றும் அரச துறைகளின் உற்பத்தி, போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித்திறன் என்பவற்றை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அந்த துறைகளை முன்னேற்றாமல் எமக்கு நாடெனும் ரீதியில் முன்னோக்கி செல்ல முடியாது. ஆகவே எம்மை முன்னேற்றிக் கொள்வது தொடர்பான போட்டியே எமக்கு மத்தியிலான முதலாவது போட்டியாகக் காணப்பட வேண்டும். அப்போது எமக்கு சர்வதேசத்தினை வெற்றிக் கொள்ள முடியும்.

அரச மற்றும் தனியார் துறைகளில் உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாம் ஆசியாவில் முன்னிலையில் இருந்த காலத்தில் எமக்கு பின்னால் இருந்த நாடுகள் எம்மை பின்தள்ளிவிட்டு முன்னோக்கிச் சென்ற முறை தொடர்பில் கவனம் செலுத்தி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது சில அரச மற்றும் தனியார் துறைகள் இன்று முன்னோக்கி சென்றுள்ளன. எனினும் முழுமையாக நோக்குமிடத்து அனைத்து துறைகளும் இன்னும் அந்த முன்னேற்ற மட்டத்தினை அடையவில்லை.

அதனால், அரச சேவையின் உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்வதற்காக நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உற்பத்தித்திறன் செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சேவையினை நாம் பாராட்ட வேண்டும். இலங்கையில் மாகாணங்களிலும், மாவட்ட செயலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும்  உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்வதற்காக இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் வாய்ப்பு கிடைக்கின்றன. அந்த முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதே எமது தேவையாகும். அவ்வாறான முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாகவே எமக்கு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.

அந்த நடவடிக்கைகளை நிறைவேற்றுவதுடன் நாட்டின் அபிவிருத்திக்காக நிறைவேற்ற வேண்டிய இன்னும் பல விடயங்கள் காணப்படுகின்றன. இன்று முதலீட்டு பிரிவினை நோக்கும் போது முதலீட்டாளர்களுக்கு தமது வியாபாரத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கு மிக நீண்ட காலம் செலவழிக்க வேண்டிய நிலை உட்பட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. எனினும், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷpயா போன்ற நாடுகளில் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனுமதி ஒரு மாத காலத்தினுள் கிடைத்துவிடுகின்றது. 



இன்று எமது நாட்டில் கீழ் மட்ட நிறுவனங்களின் நிலைமை திருப்தியளிக்கக் கூடியதாக உள்ளது. அன்றைய காலத்தினை விட இன்று மக்கள் அவற்றில் இருந்து பயனை பெற்றுக் கொள்கின்றனர். அதனால் இவ் உற்பத்தித்திறனை மதிப்பிடும் நிகழ்ச்சியினை மேலும் பலப்படுத்த வேண்டும். உற்பத்தித்திறனான உற்பத்திகளை அதிகரித்துக் கொள்ள இவ்வாறான போட்டிகள் அவசியமாகின்றன. எனினும் இதனை உற்பத்தித்திறன் போட்டிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ள கூடாது. 

உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே நாம் அரச அலுவலர்களுக்கு 02 சந்தர்ப்பங்களில் சம்பள அதிகரிப்பினை வழங்கினோம். அரசாங்கம் எனும் ரீதியில் முதலில் அதன்பால் எமது கவனத்தினைச் செலுத்தினோம். அரச சேவையினை டிஜிட்டல்மயப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். கீழ் மட்டத்தில் சில அலுவலகங்கள் மிகவும் சிறப்பாக டிஜிட்டல்மயப்படுத்தப்பட்டுள்ளன. கீழ் மட்டத்திலுள்ள அலுவலகங்கள் அந்த நிலையினை அடைந்த போதிலும் எமது விசாலமான திணைக்களங்கள் இதுவரை அந்த நிலையினை அடையவில்லை என்றே குறிப்பிட வேண்டியுள்ளது. பண்டாரவளை மிருக வைத்திய அலுவலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஆகியவற்றுக்கு முடியும் எனின், ஏனைய பெரிய நிறுவனங்களுக்கு ஏன் அதனை மேற்கொள்ள முடியாது? நாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக இவ்வாறான வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.

அதேபோன்று எமது நாட்டினுள் போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து சேவையினை விருத்தி செய்வதற்கும் வீதிக் கட்டமைப்பினை விருத்தி செய்வதற்கும் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். கொழும்பைச் சூழவுள்ள வீதிக் கட்டமைப்பினை விருத்தி செய்வதற்கு நாம் அதிக சிரத்தை கொண்டு செயற்பட்டு வருகின்றோம். 2021 ஆம் ஆண்டாகும் போது இவ்வீதி கட்டமைப்பினை மக்கள் மயப்படுத்தவும் நாம் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம்.

இவ்வாறான பல செயற்றிட்டங்களை செயற்படுத்திக் கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். விசேடமாக அரச துறையின் உற்பத்தித்திறன் தொடர்பில் திருப்தி கொள்ளாது மேலும் விருத்தி செய்து கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 



இவ்வுற்பத்தித்திறன் விருத்தி செய்யும் பணியினை பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் ரஞ்;ஜித் மத்தும பண்டார அவர்களுக்கும், இவ்வேலைத்திட்டத்தின் கீழ் வெற்றி பெற்ற மொனராகலை பிரதேச செயலகத்திற்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார அவர்கள் அரச சேவையின் வளர்ச்சிக்கு பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றார்.

இதற்கு முன்னர் அரசாங்கமொன்றினால் அரச சேவையின் கீழ் மட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்காத அதிகளவான நிதித்தொகையினை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாம் ஒதுக்கி உள்ளோம். கம்பெரலிய, கிராம சக்தி, என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா, வீதிகளை நிர்மாணித்தல், வீடுகளை நிர்மாணித்தல் போன்ற பல வேலைத்திட்டங்கள் இன்று கீழ் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சகல அரச நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு பாரியளவிலான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

நாட்டுக்கு கிடைக்கின்ற முதலீடுகளை அதிகரிப்பதற்கும், நாட்டின் உற்பத்தி ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். கீழ் மட்டத்தினை விருத்தி செய்வது, உலக சந்தைக்குள் நுழைதல் ஆகிய இரு செயற்றிட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வது எமது நிர்வாக துறையின் பிரதான நோக்கமாகும்.    

எமது நிர்வாகச் சேவையானது காலனித்துவ ஆட்சிக்காலத்தில் உலகளவில் பிரசித்தி பெற்றிருந்தது. அன்றைய இலங்கையின் சிவில் சேவையாளரான லெனாட் வுல்ப் தொடர்பில் இங்கிலாந்தில் வெளியான கட்டுரையொன்றை வாசிப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் நிர்வாகப்பிரிவினைப் போன்று இலக்கியத்துறையிலும் திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரியாவார். அவ்வாறான அதிகாரிகள் எமது அரச சேவையில் இன்றும் உள்ளனர். அத்திறமைகளில் இருந்து நாம் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் முன்னோக்கிச் சென்றால் எமது பயணத்தினை யாராலும் தடுக்க முடியாது என்பதை இறுதியாக கூறிக் கொள்கின்றேன்.'

இந்த நிகழ்வில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, உள்ளக அலுவல்கள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவதுவல, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றம் உற்பத்தித்திறன் விருதுகளினை பெறும் நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இன்று எமது நீன்ட கால கனவு நினைவாகியது.

வேவல்தெனிய ஹரிதபுர, பாய்ஸா றிபாய் மாதிரி கிராம அடிக்கல் நாட்டு நிகழ்வின் போது (படம்). 35 வீடுகள் அமைக்கப்படவுள்ள இத்தொகுதி இன்ஷா அல்லாஹ் சுற்றாடல் சுகம் தரும் முதலாவது முஸ்லிம் கிராமமாகும்.

(தகவல்: ஆஸிம் சேர் - வேவல்தெனிய பாபுஸ்ஸலாம் மு.வி. முன்னாள் அதிபர்)

2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.00 மணிக்கு பின்னர் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இதனைப் பார்வையிட முடியும்.

2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றது.
அதில், 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்று வெற்றி நடைபோடும் தாருல் ஹசனாத் அகாடமியின் (DHA) மாணவன்.

2000ம் ஆண்டு சமூக சேவகர் அல் ஹாஜ் அபுல் ஹசன் ஹாஜியாரால் முஸ்லிம் சமூக மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனமானது இலாப நோக்கமற்றது. இங்கு இஸ்லாமிய அடிப்படை கல்வியுடன் கூடிய கணக்கிடல் துறைசார் கற்கை நெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 1000 ற்கும் அதிகமான கணக்காளர்களை இந் நிறுவனம் உருவாக்கம் செய்து இந் சமூகத்திற்கு வலுவூட்டியுள்ளது.

அந்த வகையில் இறுதியாக ( 2019 ஜனவரியில் ) நடைபெற்ற இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர்கள் கழகத்தின் (AAT– SL) பரீட்சையில் தோன்றிய எமது மாணவன் முஹம்மது மும்தாஜ் முஹம்மது சாதிக் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சிறப்பு சாதனை பெற்று எமது பாடசாலைக்கும் அவரது பெற்றோருக்கும் பெருமை பெற்று தந்துள்ளார்.

முதலில் அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிப்பதுடன் இம்மாணவனின் வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் 2015ம் ஆண்டு நடைபெற்ற AAT இறுதிக்கட்ட பரீட்சையில் M.I.A.M. அப்கர் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சிறப்பு சாதனை அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தாருல்ஹஸனாத்தின் இரு பிரதான சிறப்பம்சத்தின் முதலாவது ஏதுவெனில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் G.C.E. (O/L) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படையில் இருந்து ஆங்கில மொழியை கற்றுக் கொடுப்பதுடன் AAT மற்றும் G.C.E.
(A/L) பரீட்சையையும் ஆங்கில மொழி மூலம் தோற்றி சாதனை படைப்பதற்கு வழிகாட்டப்படுகின்றனர்.

மற்றுமோர் சிறப்பம்சம் என்னவெனில் புனித திருக்குர்ஆனில் இறுதி 3 ஜூஸ்களை மனனம் செய்வதற்கு வழிகாட்டப்படுகின்றனர். மேலும் இஸ்லாமிய வாழ்வியல் சிந்தனைகளையும் அறிந்து கொள்வதற்கான ஓர் சூழலை இந்நிறுவனம் அமைத்துக் கொடுக்கின்றது.

19 வருடம் பழமை வாய்ந்த இந் நிறுவனமானது இலங்கையின் சப்ரகமு,வ மாகாணத்தின் வரகாப்பொல நகரில் 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இயற்கை அழகுமிகு ஓர் ரம்யமான சூழலில் சகல வசதிகளையும் ( மாணவர் விடுதி, IT கூடம், விளையாட்டு மைதானம் பள்ளிவாசல், வகுப்பறை ) யைக் கொண்டு அமையப்பெற்றல்லது. இங்கு இலங்கையின் தலைசிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு பாடபோதனைகள் நடாத்தப்படுவதனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஆளுமையுள்ள மாணவர்களை உருவாக்க முடிகின்றது.
எமது பாடசாலையில் வருடந்தோரும் இரு முறை (ஜனவரி மற்றும் ஏப்ரல்) மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்படுகின்றர்.


அம்மாணவர்கள் 2 ½ வருடத்திற்குள் AAT யின் 3 படித்தரங்களையும் ஆங்கில மொழி மூலம் சித்தி பெறுவதுடன் G.C.E.
(A/L) பரீட்சையிலும் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிறுவனத்தின் பழைய மாணவர்கள் கணக்கியல் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் கடமை புரிவதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு எமது இணையத்தளமான www.dhlsl.lk இணையத்திற்கு உட்பிரவேசிக்கவும.;

கொழும்பில் நாளை (30) 
24 மணித்தியால நீர் வெட்டு


( மினுவாங்கொடை நிருபர் )

   நாளை 30 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
   மின்சார விநியோகம் துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காகவேண்டி,  இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச்  சபை தெரிவித்துள்ளது.
   கொழும்பு, கோட்டை,  தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, சொய்ஸாபுர,  கடுவல,  மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா  ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
   நாளை 30 ஆம் திகதி காலை 9 மணி முதல் 31 ஆம் திகதி காலை 9 மணி வரையிலும் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச்  சபை ​அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )


வடக்கு-கிழக்கில் சுகாதாரத் துறை பாரிய வளர்ச்சி!
.....................................................................................................
பைசல் காசிம் பெருமிதம் 
 
வடக்கு-கிழக்கு மாகாணங்களில்  சுகாதாரத் துறை  என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

நாட்டின் ஒவ்வொரு துறையையும் கட்டியெழுப்பும் நோக்கில் வரவு-செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் கணிசமான தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நான் இராஜாங்க அமைச்சராக இருக்கும் சுகாதாரத் துறையும் இந்தப் பாரிய அபிவிருத்தி வட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சுகாதாரத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக இதுவரை மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவிருக்கின்ற சேவைகள் சிலவற்றையும்  இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அங்குள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் நிலவுகின்ற குறைபாடுகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்துகொண்டு அவற்றை அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பல அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.எதிர்காலத்தில் அங்கு நிர்மாணிக்கப்படவுள்ள சத்திர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு வரவு-செலவு திட்டம் நிறைவேறியதும் நிதி ஒதுக்கப்படும்.

அதேபோல்,அந்த வைத்தியசாலையில் clinical complex நிர்மாணிப்பதற்கும் நிதி ஒதுக்கவுள்ளோம் .இந்த வருடத்துக்குள் இந்தக் கட்டடத்தை நிர்மாணித்து முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.அந்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கதிரியிக்கப் பிரிவு கடந்த வாரம்தான் திறந்து வைக்கப்பட்டது.

சொறிக்கல்முனை பிரதேச வைத்தியசாலையில் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும்கொண்ட நவீன ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் மக்களின் பாவனைக்காக இம்மாதம் 18ஆம் திகதி கையளிக்கப்பட்டது.எதிர்காலத்தில் அங்கு மேலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்.ஆளணி பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

உலக வங்கியின் நிதி உதவியில் தொற்ற நோய்யைக்  கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில்  ஆரம்ப வைத்திய பாரமரிப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.அதனூடாக,வைத்திய ஆய்வுகூடம்,கதிர் இயக்கப் பிரிவு மற்றும் அவற்றுடன் இணைந்ததாக மேலும் பல வைத்திய வசதிகளும் ஒலுவில் வைத்தியசாலைக்கு வழங்கப்படும்.

அங்கு 2 மாடிக்  கட்டடம் ஒன்றும் அமைக்கப்படும்.அத்தோடு,வைத்தியசாலைக்கு நான் ஒதுக்கீடு செய்துள்ள  20 இலட்சம் ரூபாய் செலவில் சுற்று மதில் அமைக்கப்படுகிறது.

மூவினங்களும் பயன்பெறும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 56.59 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குருதி சுத்திகரிப்பு பிரிவு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.நான் அமைச்சராக ஆனது முதல் இந்த வைத்தியசாலையின் தேவைக்காக 75 மில்லியன் ரூபா நிதியை செலவழித்துள்ளேன்.கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அது ஒதுக்கப்பட்டுள்ளது.

01-CCTV system - 1.5mn - 2016
02-Air-condition system -5Mn - 2016
03-Construction dialysis unit with equipment ( 10Mn building+ equipment’s 46.590Mn) -56.59Mn (2017)
04-Medical equipment 2016 – 5Mn (under HDU) 2017
05-Renovation works 4Mn - 2018
06-Medical equipment’s – fully automated analyser 2.185Mn
07-Total : 69.275Mn

மேலும் அந்த வைத்தியசாலைக்கு கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வருகை தரும் வைத்திய நிபுணர் [ visiting physician] ஒருவரும் குழந்தை நல வைத்தியர் [pediatrician] ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 34 மில்லியன் ரூபா செலவில் நோயாளர் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்த வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கி இருக்கின்றோம்.

01.Construction dialysis unit with equipment ( 10Mn building+ equipment’s 46.590Mn) -56.59Mn (2017)

02.Medical ward -32.5Mn + furniture 3.6Mn--- 38.6Mn (2017-2018)

03.Renovation admiration building & surgical award 4Mn (2018)

04.Renovation maternity ward 5Mn (2018)

05.CCTV system - 2.767Mn

06.Air-condition system -2.479Mn

07.Operation theatre table -1.5Mn

08.Medical equipment’s – fully automated analyser 2.185Mn

Total : 113.121Mn


35 மில்லியன் ரூபா செலவில் மத்தியமுகாம் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆண், பெண் மருத்துவ விடுதி தொகுதி இம்மாதம் 18ஆம் திகதி மக்களின் பாவனைக்கு விடப்பட்டது. 

நிந்தவூரில் சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையை அண்மையில் மக்களின் பாவனைக்கு கையளித்தோம்.அங்கு இன்னும் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளன.நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு வைத்திய பிரிவுகள் 20.01.2019 அன்று  மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

5 கோடி ரூபா செலவில் இறக்காமத்தில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.அது மிகவிரைவில் பூர்த்தி செய்யப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும்.

மீறாவோடை பிரதேச வைத்தியசாலையில் 24  கோடி ரூபா செலவில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.முதல் கட்டமாக 10 கோடி ரூபாவை இந்த வரவு-செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கியுள்ளோம்.அந்த வைத்திசாலையின் வைத்தியர்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த மாதம் புதிதாக வைத்தியர் ஒருவரையும் நியமித்துள்ளோம்.அதேபோல்,அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்றையும் வழங்கியுள்ளோம்.

இனப்பாகுபாடு இன்றி அணைத்து  வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை ஒரு கோடி ரூபா நிதி என்னால் வழங்கப்பட்டுள்ளது.அந்த வைத்தியசாலைக்கு விரைவில் அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்றையும் வழங்கவுள்ளோம்.காரைதீவு ஆதார வைத்தியசாலைக்கு சுற்று மதில் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு 152 அம்பியூலன்ஸ் வாகனங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
அவற்றுள் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன.
திருகோணமலை,மீறாவோடை,நிந்தவூர்,இறக்காமம்,அம்பாறை,மட்டக்களப்பு,பாணம,ஏறாவூர்,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கே இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கதிரவெளி,வாழைச்சேனை,சந்திவெளி மற்றும் காத்தான்குடி ஆகிய வைத்தியசாலைகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை,கிண்ணியா,சேருநுவர மற்றும் ஈச்சிலம்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில்,சம்மாந்துறை மற்றும் மத்திய முகாம் வைத்தியசாலைகளுக்கும் விரைவில் அம்பியூலன்ஸ் வாகனங்களை வழங்கவுள்ளோம்

கிழக்கு மாகாணத்தில் பொது மற்றும் போதனா வைத்தியசாலைகள் இல்லாத குறைகளை நிவர்த்தி செய்வதற்காக இனி ஏனைய வைத்தியசாலைகளில் விசேட வைத்திய பிரிவுகள் தொடங்கப்படும்.

கிழக்கு மக்களின் நலனையும் வைத்தியசாலைகளின் பௌதீக தேவைகளையும் கவனத்தில் கொண்டு   கண்,காது, சிறுவர், மகளிர் மகப்பேற்று, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளை ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும்  உருவாக்கி சகல பிரதேசத்திலும் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  முயற்சியினை முன்னெடுத்து வருகின்றோம்.

நான் மேலே குறிப்பிட்டுள்ளவை கிழக்கு மாகாண சுகாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாம் செய்த சேவைகளுள் சிலவற்றை மாத்திரம்தான்.குறிப்பிடுவதற்கு இன்னும் இருக்கின்றன.நேரம் போதாமை காரணமாக சிலவற்றை மாத்திரமே குறிப்பிட்டுள்ளேன்.

வடக்கை எடுத்துக்கொண்டால் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரிகளுக்கும் எனக்கும் இடையில் 06.02.2019 அன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்படி,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 5 கோடி ரூபா பெறுமதியான ct scanner இயந்திரம்,தேவையான கருவிகள் மற்றும் ct scanner க்கான ஒரு கோடி செலவிலான கட்டடம் ஆகியவற்றை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் அந்த வைத்தியசாலைகளில் வைத்திய ஆலோசகர்களின் எண்ணிக்கையை 23 இல் இருந்து 34 ஆக அதிகரிப்பதற்கும் மகப்பேற்று வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறை வைத்தியசாலைக்கு வைத்தியர்,தாதியர் மற்றும் வைத்திய ஆலோசகர் விடுதியை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரச கட்டடத் திணைக்கள அதிகாரிகள் விரைவில் அங்கு சென்று இது தொடர்பில் மேலதிக செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளனர்.

அதேபோல்,நானாட்டான்,அடம்பன் உள்ளிட்ட மேலும் பல வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கும்  நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் அரச ஒசுசல கட்டடம் அண்மையில் மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.மேலும்,வைத்திய புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அங்கு அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதற்கான  அடிக்கல்  16.08.2018  நடப்பட்டது.

நாம் பல சிரமங்களுக்கு  மத்தியில்தான்  எமது நாட்டின் வைத்தியத் துறையை  முன்னேற்றுவதற்கு பல நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம்.

நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் பல குறைபாடுகள் உள்ளன.வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது.ஒரு வருடத்துக்கு நாம் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றோம்.
அவற்றுள் 200 பேர் எங்களை விட்டுச் செல்கின்றனர்.

இவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர்.மீதியாகவுள்ள ஆயிரம் வைத்தியர்களை நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றோம்.இன்னும் 150 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்க முடியாமல் உள்ளோம்.

அதேபோல்,2200 வைத்திய ஆலோசகர்கள் சுகாதார அமைச்சின்கீழ் வேலை செய்கின்றனர்.அதிகமான ஆலோசர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இவ்வாறான குறைபாடுகளுடனும் சவால்களுடனும்தான் நாம் இந்த சுகாதார சேவையை சிறந்த முறையில் வழங்கி வருகின்றோம்.இன்னும் இரண்டாயிரம் இருதய சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவ்வாறான குறைபாடுகளின் மத்தியில் எமது வைத்தியர்களும் தாதியர்களும் சிறந்த சேவையை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.அதற்காக அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜித சேனாரத்ன அவர்கள் சுகாதார அமைச்சராக வந்ததன் பின்தான் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்துள்ளார்.எல்லா வைத்தியர்களுடனும் பேசி பிரச்சினையைத் தீர்க்கின்றார்.

அவர் எல்லா மாவட்டங்களையும் சமமாகப் பார்த்து அபிவிருத்தி செய்கின்றார்.அவர் இனவாதமற்ற நீதியான மனிதர்.நான் 14 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன்.எனது இந்தக் காலத்துக்குள் பல சுகாதார அமைச்சர்களைக் கண்டுவிட்டேன்.அவர்கள் அனைவரும் அவர்களின் மாவட்டங்களை மாத்திரம் அபிவிருத்தி செய்பவர்களாகவே இருந்திருக்கின்றனர்.அவர்கள் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்வர்.ஆனால்,ராஜித மட்டும்தான் முழு நாட்டிலுமுள்ள வைத்தியசாலைகளையும் சமமாகப் பார்த்து அபிவிருத்தி செய்கிறார்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படுகின்ற அதி நவீன முறைமையைப் பயன்படுத்தி எமது நாட்டின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் எமது அமைச்சர் ராஜித சேனாரத்ன பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.புதிதாக வருகின்ற நவீன வைத்திய கருவிகள் அனைத்தையும் இறக்குமதி செய்து மக்கள் பாவனைக்கு விடுகின்றார்.

அரசியல் இலாபம் கருதாது நாட்டின் நன்மை கருதி ராஜிதவின் இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு நாம் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஆதரவு வழங்க வேண்டும் .என்றார்.

[ஊடகப் பிரிவு]


அரசாங்க பாடசாலைகளில் தரம் 13 வரையிலான கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

தரம் 13 உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் 2ஆம் கல்வி ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட தொழில் விடயத்துக்கான தேசிய தொழில் ஆற்றல் (NVQ) 4 மட்ட சான்றிதழை வழங்குவதற்கு அனுமதியுள்ள தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வியை பெறவேண்டியுள்ளது. 

இவ்வாறான தொழில் பயிற்சி நிறுவனங்கள் பல முக்கிய நகரங்களில் அமைந்துள்ளமை மற்றும் சில பயிற்சி நிறுவனம் ஒரு இடத்தில் மாத்திரம் அமைந்திருப்பதன் காரணமாக சில மாணவர்கள் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக தொகையை செலவிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்காக நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம் )


2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார். 

பெரும்பாலும் இன்று மாலையாகும் போது இணையத்தளத்தில் பெறுபேறுகள் வௌியடப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

அதன்பின்னர் றறற.னழநநெவள.டம என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் பரீட்சைக பெறுபேறுகளை குறிப்பிட்ட தினங்களில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார். 


பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிப்பான இம்ரான் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். 

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார். 

கஞ்சிப்பான இம்ரான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைத்தீவு நோக்கி செல்ல இருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கஞ்சிப்பான இம்ரான் பொறுப்பேற்கப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து அவரிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரியான கோதாகொட ஆரச்சிகே லலித் குமார ஆகிய இருவரும் நேற்று டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

வில்பத்து விடயத்தினை வைத்து இனவாதத்தினை தூண்டுவோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய ஜனநாயக கட்சியின் (UDP) தலைவர் நஜாத் நூர்தீன் தெரிவிப்பு.


 எமது நாட்டின் சொத்துக்களில் ஒன்றான  வில்பத்து வனாந்திரத்தினை அழித்து அங்கே முஸ்லிம்கள் குடிபதியாகின்றனர் என்று இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதத்தினை இலத்திரனியல்  ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பரப்பிக் கொண்டு வருகின்றவர்களுக்கு எதிராக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விடயம் சம்பந்தமாக அவ்விடத்துக்கு நேரில் சென்று உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்த ராஜாங்க அமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க, அஜித் மான்னப்பெரும, மற்றும் பாராளுமன்றத்திலே உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதுறுதீன்,  சுற்றுலா மற்றும்  வனவிலங்குகள் வன  விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர் புத்திக பத்திரன ஆகியோருக்கு ஐக்கிய ஜனநாயக கட்சி (UDP) சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் UDP யின் தலைவர் நஜாத் நூர்தீன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

(நாஸர் JP)

மருத்தும் தொடர்பான அண்மைக்கால பிழையான புரிதலிருந்து சரியான புரிதலை வழங்கும் மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்வு.கலந்து பயன் பெற "த யங் பிரண்டஸ்" அமைப்பு உங்களுக்கு திறந்த அழைப்பை விடுக்கிறது.

அண்மைக் காலமாக இலங்கை வாழ் சில மக்களிடம், குழுமங்களிடம் மருத்தும் தொடர்பான பிழையான கருத்து,  தவறான வழிகாட்டல்கள் ,சிந்தனைகள் வேகமாக மக்கள் தளத்தில் பரப்பப்படுகின்றன.

"எந்தவொரு நோயை அல்லாஹ் இறக்கினாலும் அதற்கு நிவாரணத்தை இறக்காமல் இல்லை" என்பது இஸ்லாத்தின் வழிகாட்டல். "உங்களது உலக விவகாரங்களை நீங்கள் நன்கறிந்தவர்கள்" என்பதும் இஸ்லாத்தின் போதனை. வரையறைகளைப் பேணி விடயங்களைக் கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது காலத்தின் தேவை. அதற்கான முறையாக வழி நாடத்தப்பட வேண்டும் என்பது சமூகக் கூட்டுப் பொறுப்பாகும். என்பதனாலே இந்த நிகழ்வு அக்குறனை சுகாதார சபை (Akurana Health Committee) The Young Friends (TYF) அமைப்பும் இணைந்து ஊர் மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின்
 பிரதான பேசு பொருளாக
-இஸ்லாம் கற்றுத்தரும் ஆரோக்கியமும் மருத்துவமும்
- சுதேச நவீன மருத்துவ முறைகளின்  உண்மை நிலை
- எமது சமூகத்தின் முறையற்ற வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் நோய்கள் மற்றும் அது தொடர்பாக எதிர்கால மாற்றங்கள் எப்படி இருக்க வேண்டும்
- மக்கள்  மத்தியில் பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட நோய்களும் அதற்கான சரியான வழிமுறைகளும் போன்ற பல மருத்துவம் தொடர்பான விடயங்கள் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களால் தெளிவுபடுத்தப்படும்.

இந்நிகழ்வு அக்குறனை ஜம்மியதுல் உலமாவின் ஒத்துழைப்புடன் அக்குறனை அஸ்னா பள்ளியில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06.04.2019 சனிக்கிழமை காலை 8.30 மணி  முதல் நண்பகல் 12.30 (லுஹர் தொழுகை) வரை நடாத்த தீர்மானித்துள்ளோம்.

இந்நிகழ்வு ஆண்களுக்கும் பெண்களுக்கும்(பிரத்தியேக இடம் ஏற்பாடு செய்யப்படுள்ளது)சேர்த்து நடாத்தப்படவுள்ளது.



A Raheem Akbar
2019/03/28


"மாத்ய அருண"  ஊடகவியலாளர்கள் இலகு கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

( மினுவாங்கொடை நிருபர் )

ஊடகவியலாளர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இலகு கடன் திட்டத்தை வழங்க,  ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கைகளை  எடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. ஊடகத்துறையில் மூன்று வருட சேவையைப் பூர்த்தி செய்து 60 வயதுக்குக்  கீழ்ப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதி நேர ஊடகவியலாளர்கள், முழு நேரப்  பணியில் ஈடுபடும் ஊடக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது. 
   இந்த இலகுக்  கடன் திட்டத்தின் கீழ்,  ஊடகவியலாளர்களுக்குத் தேவையான ஊடக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியில்லாக்  கடனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அத்துடன்,  தன்னிடமிருக்கும் ஊடக உபகரணங்களின் தரத்தை மேலும்  மேம்படுத்திக் கொள்ள, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான  கடன் உதவிகளை வழங்கவும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. 
   இது தொடர்பிலான  விண்ணப்பங்களைப்  பூர்த்தி செய்து,  ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர், ஊடக அமைச்சுக்குக்  கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்குமாறும்  கேட்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

https://www.media.gov.lk/images/pdf_word/2019/madya-aruna-0327.pdf


வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்று, பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடிய போது, பிரதி சபாநாயகர் இது தொடர்பில் சபைக்கு அறிவித்துள்ளார். 

வில்பத்து தேசிய வனத்தை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது. 

இந்த அறிக்கையின் பிரதி ஒன்றை ​பாராளுமன்றத்திற்கு பெற்றுக் கொள்வதற்காக கடந்த 22ம் திகதி சபாநாயகரால் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அதன்படி அந்த அறிக்கையின் பிரதி நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சபையில் அறிவித்தார்.


உலகில் கூடிய கேள்வி உள்ள மீன்களை கடலில் மற்றும் கரையில் வளர்த்து உலக கடற்றொழில் துறையில், இலங்கையினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றியமைக்க கடுமையாக முயற்சிப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி  தெரிவித்தார்.

இது கடற்றொழில் துறையின் கடைசி எதிர்கால இலக்கு என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார். 
சார்க் வலய நாடுகளின் நீர் வாழ் உயிரின மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்றைய தினம் (26) ஆரம்பமான இந்த மாநாடு இரு தினங்களுக்கு நடைபெறும். சார்க் வலயத்தில் உள்ள நாடுகளின் நீர்வாழ் உயிரினங்களுடன் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களுடன் நடைபெறும் இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றும் போது, மீன் பிடிக்கைத்தொழிலின் எதிர்காலம் மற்றும் வெளிநாட்டு பரிமாற்றத்தை இலக்காகக் கொண்டு உலகில் அதிக கேள்வி கொண்ட மீன் வளர்ப்பினை இலங்கையின் மீன்பிடித் தொழில் புரிவோருக்கு வாய்ப்பினை வழங்குவதற்கு தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.  

அதன் மூலம் கடலில் மீன் வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கு நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தற்போது நடவடிக்கை எடுத்து வருவதுடன், அதற்கு சாதகமான பெறுபேறுகள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அவர்கள், கடல் மீன்களை கரையில் வளர்க்கும் பணிகளும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை மூலம் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த கடல் மற்றும் கரையில் மீன் வளர்த்தல் சம்பந்தமாக இப்போதும் முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மீன் வளர்ப்புத் துறையில் முதலிட, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவேற்பதாகவும், இந்த வளர்ப்புத் துறையில் சார்க் பிராந்திய நாடுகளின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் தெரிவித்தார். 

இதன் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறும் தெரிவித்தார், 'எமது அமைச்சின் கீழ் உள்ள நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சார்க் நாடுகளின் அனுசரணையில் இவ்வாறான வேலைத்திட்டமொன்றை செய்ததற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தெற்காசிய நாடுகளில் நிலவும் மந்த போசணை நிலைமையை நீக்குவதற்கு, இங்கிருக்கும் மீன் வளத்தின் புரதச் சத்து பெரிதும் உதவுகிறது. ஆனால் அதிகரித்துச் செல்லும் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, மீன் உற்பத்தியின் அளவு அதிகரிப்பதில்லை என புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனை நிவர்த்தி செய்ய பல நாடுகளின் ஒன்றியங்கள் மூலம் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியம்.'

இந்த மாநாட்டிற்கு சார்க் நாடுகளின் நீர் வாழ் உயிரினங்கள் தொடர்பான துறைகளின் நிபுணர்கள், விவசாய, நீர்ப்பாசன, கிராமியப் பொருளாதார, கால்நடை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தொடர்பான அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்த்ரா அவர்கள், அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தொடர்பான அமைச்சு தொடர்பான நிறுவனங்களின் உயரதிகாரிகள், தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நுவன் பிரசன்ன மதவன்ஆரச்சி, உள்ளிட்ட அதனது ஊழியர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் 


அமைச்சர் ரிஷாத் மீது அபாண்டம்

வில்பத்து வன எல்லைக்குள் எந்தவொரு முஸ்லிம் குடும்பமும் குடியமர்த்தப்படவில்லை எனவும் சில தீயசக்திகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, வில்பத்து வனப்பகுதியில் எந்தவித காடழிப்பும் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். முஸ்லிம் குடியேற்றங்கள் வில்பத்து வன எல்லைக்கு வெளியேயே இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரிஷாத்பதியுதீன் மீது வீண்பழி சுமத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யாகும். சில சக்திகள் வில்பத்து விவகாரத்தை தமது அரசியல் சுயநலனுக்காக கையில் எடுத்து தென்னிலங்கை பெரும்பான்மைச் சிங்கள மக்களை தூண்டிவிடுகின்றனர். உண்மையிலேயே வில்பத்து வன எல்லைக்குள் ஒரு முஸ்லிம் குடும்பமாவது குடியேற்றப்படவில்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும் கூட இந்த இனவாதச் சக்திகள் சில சிங்கள ஊடகங்கள் மூலம் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நேர்மையான அரசியல்வாதியாக நான் காண்கின்றேன். அவர் தனது சமூகத்தின் விடியலுக்காகப் பாடுபடுகின்றார். குரல்கொடுத்து வருகின்றார். இதனை தவறெனக் கொள்ள முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூவ் ஹக்கீமிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகின்றேன்.

வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு கைகொடுத்து உதவ வேண்டும். அவரைப் பாதுகாக்க வேண்டும். இந்த விடயத்தில் கட்சி அரசியல் பேதம் பார்க்க முற்பட வேண்டாம். ரிஷாத்தின் நல்ல பணிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.


அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற   சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோருக்கான நிகழ்விலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்தில் பல தடைகளை எதிர்நோக்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.  

உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு,  அவர்களின் குரல்களுக்காக கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

எனினும், அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்வதில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

மேலும், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான திட்டம் ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட போதிலும், அதை அமுல்படுத்த முடியாமல் போனது. ஆகவே இவ்விடயம் மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டால், பாராளுமன்றத்தில் பெண்கள் பொருத்தமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் கடினம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் கூட, பெண்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 


8300 இளைஞர், யுவதிகள் பங்கேற்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2019 யொவுன்புர நிகழ்வு திஸ்ஸமகாராமை வீரவிலையில் இன்று 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது.

இது பத்தாவது யொவுன்புர நிகழ்வாகும். இதில் நாடு பூராவுமிருந்தும் சகல இனங்களையும் சேர்ந்த 8300 இளைஞர், யுவதிகள் பங்குபற்றவுள்ளனர்.

இவர்களில் இளைஞர் கழக அங்கத்தவர்கள் 6900, வெளிநாட்டு இளைஞர், யுவதிகள் 100, இளைஞர் பதக்கம் பெற்றவர்களும் அபேட்சகர்களும் 100, சாரணர்கள் 350, கொத்தலாவை பாதுகாப்பு கல்லுாரியிலிருந்து 100, இளைஞர் பாராளுமன்ற மற்றும் மாணவத் தலைவர்கள் 100 மற்றும் தொழில் பயிலுனர்கள் 500 பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம் முறை யொவுன்புர நிகழ்வு தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதினை அடிப்படையாகக் கொண்டு இடம் பெறவுள்ளது. இந்த யொவுன்புர நிகழ்வில் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள், தகவல் தொழிநுட்பம், தலைமைத்துவம், ஆளுமை விருத்தி, விளையாட்டு நிகழ்வுகள், கலாசார போட்டிகள், யொவுன்புர இளைஞன் மற்றும் யுவதி தெரிவு, இசை நிகழ்ச்சிகள், தொழில் வான்மை வழிகாட்டல்கள், தொழில் சந்தைகள், தலைமைத்துவப் பயிற்சி, மரநடுகை திட்டங்கள், சிரமதானம், வீட்டுத் தோட்ட பயிர் செய்கை, இயற்கை உர உற்பத்தி, மீன் வளர்ப்பு மற்றும் ஊடகத் துறை ஆகிய செயற்பாடுகளோடு அரச மற்றும் அரச சார்பற்ற நிறவனங்களின் கண்காட்சிகளோடு இசை நிகழ்சிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் நாளாந்தம் இடம்பெறவுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வில் துறைமுகங்கள் கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமாகிய சட்டத்தரணி எரந்த வெலிஅங்ககே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதோடு இறுதி நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.

பாடகர் அமல் பெரேராவின் மகன் நதிமாலும் சிறைச்சாலை அதிகாரியொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


நதிமால் பெரேரா (24) மற்றும் சிறைச்சாலை அதிகாரி கே. லலித் குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இவ்விருவரும் மாகந்துரே மதுஷுடன், துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நாடு கடத்தப்பட்ட இவ்விருவரும், விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தபோதே, கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் பிளயி துபாய் குணு 547 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்திருந்தனர்.

உள்ளாச ஹோட்டல் ஒன்றில் வைத்து கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி மாகந்துரே மதுஷ், பாடகர் அமல் பெரேரா, நதிமால் பெரேரா உட்பட 31 பேர் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


மின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய அமைச்சர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் ரவி கருணாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவில் அமைச்சர்களான கபீர் ஹாசிம், எரான் விக்ரமரதுங்க, ஹர்ஷ டி சில்வா அங்கத்துவம் வகிக்கின்றனர்.


நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவலை - பியகம வீதியின் கடுவலை பாலத்தில் அவசர திருத்தப் பணி மேற்கொள்ள உள்ளதால் கடுவலையில் இருந்து பயகம நோக்கிய வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது. 

இன்று (26) முதல் எதிர்வரும் 29ம் திகதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 05 மணிவரை வீதி இவ்வாறு மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக கடுவலை - பியகம வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

மாற்று வழியாக அதிவேக வீதியின் மேம் பாலத்தை சாரதிகள் பயன்படுத்தலாம் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நடைபெற்று முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது. 

பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் இம்மாத இறுதியில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித முன்னதாக கூறினார். 

கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.