மாகாண சபைகள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்கட்சியினருக்கு உண்மையான தேவையின்மையினாலலேயே கடந்த (28)ம் திகதி அவர்கள் பாராளுமன்றத்தில் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் செலவீடுகளுக்கு எதிராக வாக்களித்து அதனை தோற்கடித்தனர் எனவும் சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதனால் ஏப்ரல் மாதத்தின் பின்னர் அந்நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதி இருப்பில் இல்லை எனவும் வெளிப்படுத்தினார்.

3500 இலட்சம் ரூபா நிதியினை செலவழித்து நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்ட விளையாட்டுத் தொகுதிக்கு வீரவிலயில் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பின் விளைவினால் யொவுன்புற நிகழ்வினை அம்பாந்தோட்டையில் நடாத்த முடிந்தது. அவர் இங்குள்ள பொறுப்புக்களை சுமந்து பணிகளை நிறைவேற்றினார். இம்முறை வீரவிலயில் இடம்பெற்ற யொவுன்புற நிகழ்வானது வெற்றிகரமான நிகழ்வாகும். சஜித் பிரேமதாச அவர்கள் இம்மாவட்ட அபிவிருத்திக்காக பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதற்காக எம்மிடம் பல வேண்டுகோள்களினை அவர் தொடர்ந்து விடுத்து வருகின்றார்.

இவ்வாறே கிராமிய அபிவிருத்திகளுக்காக நாம் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதேபோன்று தேசிய மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நாம் இன்று வரை பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். அதில் ஒரு கட்டமாகவே கடந்த தினமொன்றில் அம்பாந்தோட்டையினை மையமாகக் கொண்டு அம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், சீமெந்து தொழிற்சாலை என்பவற்றை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான பல முதலீடுகள் இங்கு மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதன் ஊடாக அம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் சர்வதேச வியாபார கேந்திர நிலையமாக மாற்றம் பெறவுள்ளது.

ரஜரட்ட யுகத்தின் பின்னர் தெற்கு பகுதியில் இடம்பெறும் பாரியளவிலான அபிவிருத்தி பணிகள் இவையாகும். அன்றைய காலத்தில் அநுராதபுரம் நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான கேந்திர இடமாக நோக்கப்பட்டதுடன், நாட்டின் தென் பகுதிக்கு இரண்டாம் நிலையே கிடைத்தது. இன்று தெற்கைப்பற்றி பேசுவதற்கு பலர் இருக்கின்றனர். பல தென் பிராந்தியவாசிகள் இருப்பினும் தெற்கு பகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு ஒருவருக்கும் முடியவில்லை. அதனால் எமது அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் அந்த நடவடிக்கைகளை பொறுப்பேற்று இப்பிரதேசத்தினை அபிவிருத்தி செய்து வருகின்றார். 

யொவுன்புறயினை இலக்காகக் கொண்டு இச்சர்வதேச விளையாட்டு தொகுதியினை நிர்மாணிப்பதற்கு நாம் தீர்மானித்தோம். அதற்காக வேண்டி அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றம் ஹரீன் பிரனாந்து ஆகியோர்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது அம்பாந்தோட்டையில் இருக்கும் இளைஞர்களுக்கு தமது விளையாட்டு திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் இந்த விளையாட்டுத் தொகுதியின் ஊடாக கிடைக்க உள்ளது. இவ்வாறான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படாவிட்டால் உங்களது விளையாட்டுத் திறன்களை விருத்தி செய்து கொள்ள முடியாது.

சர்வதேச மட்டத்தில் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் சந்தர்ப்பத்தில் நாம் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தொகுதிகள் போன்ற அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். அதனால் இவ்விளையாட்டு மைதானத்தின் ஊடாக உங்கள் அனைவருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றது. இவ்விளையாட்டு மைதானத்துக்கு மேலதிகமாக மாவட்ட இளைஞர் மத்திய நிலையமொன்றையும் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்பதனையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.



இவ்விளையாட்டு மைதானத்தின் ஊடாக பிள்ளைகளின் விளையாட்டு திறமைகளை விருத்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதற்கு பகரமாக மிளகாய் தூள் அடிக்கும் விளையாட்டினை பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டாம் எனவும் நான் கூறிக் கொள்கின்றேன். 

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் ஏன் இதற்கு முன்னர் இடம்பெறவில்லை என்பதை நான் கேட்கின்றேன். சஜித் பிரேமதாச அவர்கள் வரும் வரை இங்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறாதது ஏன்? அன்று அவர்கள் யானைகள் வாழ்ந்த காடுகளில் இருந்து அவற்றை துறத்திவிட்டு 'சர்வதேச கிரிக்கட் மைதானம்' எனும் பெயர் பலகையினை பொறித்தினார்கள். எனினும் அங்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடாத்துவதற்கு முடியாத நிலையுள்ளது. ஒரு போட்டியினை நடாத்துவதும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலேயாகும். அது சஹாரா பாலைவனத்துக்கு மழை பொழிவதை போன்ற ஓர் நிகழ்வாகும். இயற்கையாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த யானைகளின் சொந்த நிலங்கள் இதனால் பறிக்கப்பட்டது. அவர்கள் இதற்கு செலவழித்த நிதியினை அப்பகுதி பிரதேச செயலகத்துக்கு வழங்கி இருந்தால் அதை விட கூடிய பயனை பெற்றிருக்கலாம்.

அம்பாந்தோட்டை மாநாட்டு மண்;டபத்துக்கு செலவழித்த தொகை தொடர்பில் கவனத்தினை செலுத்தினால் மகரகம இளைஞர் சேவைகள் மன்றத்தினை விடவும் விசாலமான நிலையமொன்றை அங்கு நிர்மாணிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அவ்வாறு நிதியினை முறையற்ற முறையில் ஏன் பயன்படுத்தினீர்கள் என நான் முன்னைய ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கிராமிய இளைஞர் யுவதிகளின் கலை திறமைகள் விருத்திக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இதற்கு முன்னால் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. 



அவர்கள் பணத்தினை வீண்விரயமாக்கிய போதும் நாம் அதனை பயன்படுத்தி அபிவிருத்தியையே மேற்கொண்டு வருகின்றோம். அரசாங்கம் எனும் ரிதியில் எமது கொள்கையானது கிராமிய அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எமது அதிகாரம் பிரதேச சபைகளில் இல்லாத போதும் மத்திய அரசாங்கம் எனும் ரீதியில் நாம் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். எனினும் எதிர்காலத்தில் மாகாண சபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் நிதி ஒதுக்கிக் கொடுக்க முடியாது சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமையினை ஏற்படுத்தியது கூட இன்று குறித்த பிரதேச சபைகளில் அதிகாரத்தில் உள்ள நபர்களே. அவர்களே பாராளுமன்றத்தில் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை தோல்வியுறச் செய்தனர். அவர்கள் வேண்டாம் எனக் கூறும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு அவற்றுக்கு நிதி ஒதுக்குவது?

நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளுக்கு நாம் நிதி ஒதுக்குவோம். அவர்களுக்கு நிதி அவசியமாகின்றது. இந்த பிரதேசத்தில் கூட 12 பிரதேச சபைகள் காணப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில் அவற்றுக்கு தேவையான நிதியினை ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதி வேண்டாம் எனின், பிரதேச சபைகளில் சேர்க்கப்படுகின்ற நிதியின் மூலம் மாத்திரம் நிர்வாகத்தினை கொண்டு நடத்த முடியுமா? மாகாண சபைகள் நிதி ஒதுக்கீட்டினை பாதுகாப்பதற்காகவே நாம் வாக்களித்தோம். எனினும் அவர்கள் அதனை தோல்வியுறச் செய்வதற்காகவே வாக்களித்தனர்.

பிரதேச சபைகளுக்கு நிதி அவசியமில்லை என எதிர்கட்சியினர் தெரிவிப்பதன் மூலம் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து எனக்கு தெரியாது. அது தொடர்பில் தொடர்ந்து வரும் காலத்தில் தீர்மானிக்க வேண்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 30ம் திகதியாகும் போது அனைத்து வேலைத்திட்டங்களும் இடைநடுவே நிறுத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. நிதி ஒதுக்கீட்டினை தோல்வியடையச் செய்வதற்கு ஏன் வாக்களித்தனர் என்பது தொடர்பில் அவர்களிடமே கேட்டறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான மனிதர்களை 'தமது மூக்கினை தாமே வெட்டிக் கொள்ளும் மனிதர்கள்' என்றே கூறவேண்டும்.

நாட்டின் ஏனைய நிறுவனங்களுக்காக நாங்கள் நிதி ஒதுக்குவோம். எனினும் அவர்கள் தோல்வியடையச் செய்த நிதி ஒதுக்கீடுகளுக்கு யாது செய்வது என எமக்கு தெரியாது. அவர்களது நடவடிக்கைகளினால் ஆளுநர்களுக்கும் தமது பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. 


அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்காக அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் எதிர்கட்சியில் இருந்த காலத்திலிருந்தே பல முயற்சிகளை எடுத்து வந்தார். அதனால் இன்றும் கூட அவர் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அம்பாந்தோட்டையினை மீன்பிடி கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்களுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது அதிகாரத்தின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளுக்கு அவசியமான நிதியினை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நான் இறுதியாக குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வேதஆராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் எரன்த வெலியங்க ஆகியோருடன் முக்;கிய அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.