புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 'தகபலல்லாஹூ மின்னா வமின்கும்'
************************************************************************************************

முஸ்லிம்களின் நிம்மதியான இஸ்லாமிய வாழ்விற்கு வழியமைக்கும் நன்நாளாகவும் இனங்களுக்கிடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற திருநாளாகவும் இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், மிகுந்த துன்பத்தின் மத்தியில் முஸ்லிம்கள் இப்பெருநாளை இந்நாட்டில் கொண்டாடுவது பெருத்த வேதனை அளிக்கிறது. முஸ்லிம் விரோத சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைவாக இலங்கைத் திருநாட்டின் அமைதி மற்றும் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் அமைதி ஏற்படுவதற்கும் முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்விற்கும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டு மக்கள் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவம், சுபீட்சம், இனங்களுக்கிடையிலான ஐக்கியம் என்பவற்றை ஏற்படுத்தி ஒரு தேசத்து மக்கள் என்ற வாஞ்சையோடு வாழச் செய்வதோடு முஸ்லிம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற திருநாளாகவும் இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டும்.

மேலும் ரமழான் மாத்தில் பேணிவந்த நற்பண்புகளையும், நற்செயல்களையும், இறை அச்சத்தையும் எமது வாழ்நாள் முழுவதும் பேணிவருவதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக மாற முயற்சிப்போமாக. 

நோன்புகாலத்தில் செய்த நல்லமல்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்கும் எச்சந்தர்ப்பத்திலும் புனித இஸ்லாம் மார்க்கத்தின் நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்து மரணிப்பதற்கும் இறைவன் அனைவருக்கும் அருள் புரிய பிரார்த்திப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

- ஊடகப் பிரிவு -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.