ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இன்றிரவு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என்று நேற்று (21) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பில் இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

இதன்பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் பராாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிற்பகல் 2 மணியளவில் ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். பிரதமரிடம் பேசவேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பிரதேச சபை எல்லை விவகாரம், தோப்பூர் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் பிற்பகல் 3:30 மணியளவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்கள். ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. கல்முனை நிர்வாகப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டுமென ரவூப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.

முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் நாளை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறும், இன்னும் ஒரு வாரத்துக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகவும் பிரதமர் இதன்போது கூறினார். ஆனால், கூறப்படுவதுபோல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும், இதற்கு தீர்க்கமான முடிவுகளை எட்டும்வரை அமைச்சுகளை பொறுப்பேற்பதில்லை எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் தங்களது நிலைப்பாட்டை பிரதமரிடம் தெரிவித்தனர்.

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் எம்.பி.க்கள் காட்டிய தீவிரத்தன்மையை புரிந்துகொண்ட பிரதமர், இன்றிரவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தார். இன்றிரவு அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.