புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

(adaderana)

ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே!
================================
வை எல் எஸ் ஹமீட்



ஜனாதிபதித் தேர்தலில் மூவருக்குமேல் போட்டியிடும்போது ஒருவர் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்கட்கு 1,2, 3 என இலக்கமிடலாம். விரும்பினால் முதலாவது தெரிவுக்கு புள்ளடியும் ஏனையவற்றிற்கு இலக்கங்களும் இடலாம். ( x,2,3).
1,2,3 என இலக்கமிடவேண்டுமென ஒரு வழிகாட்டி மட்டும்தான் Third Shedule (ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம்) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்றுதான் வாக்களிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை.
அதேநேரம் பிரிவு 51(2) இன்படி ஒரு வாக்காளர் தாம் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்; என்ற எண்ணத்தை அவரது வாக்குச்சீட்டில் கீறப்பட்ட அடையாளம் பிரதிபலிக்கின்றது; என்று திருப்திகண்டால் அதனை ஏற்கவேண்டும். (ஆனாலும் 1,2,3 என எழுதுவது சிறந்தது.)
அதேபோல், விரும்பினால் ஒருவருக்கு மட்டும் வாக்களித்து விட்டு ஏனைய இலக்கங்களை விட்டுவிடலாம். அல்லது இருவருக்கும் வாக்களிக்கலாம். மூவருக்கும் வாக்களிக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. ( இவற்றைக் குறிப்பிடக் காரணம் பலர் பின்னூட்டம் மற்றும் inbox இல் இவ்வாறான கேள்விகளை நிறையவே கேட்கின்றார்கள்.)
ஒருவர் முதலாம் இலக்கத்தை எழுதாமல் அல்லது புள்ளடி இடாமல் 2 என்றோ அல்லது 3 என்றோ அல்லது 2,3 என்றோ எழுதினால் வாக்கு நிராகரிக்கப்படும். [பிரிவு 51(1)(e)(111)]
இதன்மூலம் புரிந்துகொள்வது முதலாவது வாக்கு மாத்திரமே வாக்காகும். ஏனையவை விருப்பத்தெரிவு வாக்குகளா? என்ற கேள்வியை எழுப்பினால் பதில் “ இல்லை” என்பதாகும். ஏனெனில் அவை நேரடியாக எண்ணப்படுவதில்லை. பதிலீடாகத்தான் எண்ணப்படுகின்றன.
அதாவது, பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்படுகின்ற மூன்று விருப்பத் தெரிவு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இங்கு அவ்வாறு இல்லை. ஆனால் சிலநேரம் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு வாக்காக எண்ணப்படலாம்; விருப்பத் தெரிவு வாக்காக அல்ல.
சுருங்கக்கூறின் ஒவ்வருக்கும் முதலாவது தெரிவு மட்டுமே வாக்கு.
சிலநேரம் அவருடைய முதலாவது வாக்குக்குப் பதிலாக இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக மாறலாம். சுருங்கக்கூறின் ஒருவருக்கு முதலாவது தெரிவு வாக்காக இருக்கலாம்; இன்னொருவருக்கு இரண்டாவது தெரிவு வாக்காக இருக்கலாம்; இன்னொருவருக்கு மூன்றாவது தெரிவு வாக்காக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் மூன்று தெரிவும் அல்லது இரண்டு தெரிவுகள் வாக்காக அமைய முடியாது. ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே
இது எவ்வாறு எனப்பார்ப்போம்.
வாக்கெண்ணும் முறை
——————————
முதலாவது சுற்றில் முதலாவது வாக்கு எண்ணப்படும். ஒருவர் 50% ஐத் தாண்டினால் அவர் ஜனாதிபதி. யாரும் 50% ஐத் தாண்டாதபோது இரண்டாம் சுற்று எண்ணிக்கை.
மூன்றாம் சுற்று எண்ணிக்கை என்ற ஒன்று இல்லை. சிலர் நினைக்கின்றார்கள்; இரண்டாம் சுற்றில் இரண்டாம் வாக்கு எண்ணப்பட்டு அதிலும் யாரும் 50% பெறாவிட்டால் மூன்றாவது சுற்றில் மூன்றாம் வாக்கு எண்ணப்படுமென்று. இது பிழையாகும்.
முதலாவது சுற்றில் முதலாம் வாக்கின் அடிப்படையில் ஒவ்வொருவரும் பெற்றவாக்குகள் கூட்டப்படுவதோடு அவர்களது வாக்குச் சீட்டுக்கள் வெவ்வேறாக கட்டப்படும்.
இப்பொழுது முதல் இரு வேட்பாளர்களைத் தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
உதாரணமாக
A,B,C,D,E என்ற ஐந்து வேட்பாளர்களில் C,D,E போட்டியில் இருந்து நீக்கப்பட்டபின் மீண்டும் அவர்களது கட்டப்பட்ட வாக்குள் அவிழ்க்கப்பட்டு அவற்றில் A அல்லது B இற்கு இரண்டாவது வாக்குகளை யாரும் வழங்கியிருந்தால் அவை A அல்லது B யின் வாக்குகளோடு கூட்டப்படுவதுடன் அந்த வாக்குச் சீட்டுக்களும் A அல்லது B யின் வாக்குச் சீட்டுகளுடன் கட்டப்படும்.
அதன்பின் C,D,E யின் எஞ்சிய வாக்குகளில் A அல்லது B யிற்கு யாராவது தமது மூன்றாவது வாக்கை அளித்திருந்திரூந்தால் மேற்கூறியதுபோன்று அவையும் கூட்டப்பட்டு உரியவரின் வாக்குகளுடன் கட்டப்படும். ( அதாவது இவர்கள் தமது இரண்டாவது வாக்கை C,D,E ஆகியோருக்குள் தாம் முதலாவது வாக்கை வழங்காத ஒருவருக்கு கொடுத்திருப்பார்கள். அது பிரயோசனமற்ற வாக்கு).
இப்பொழுது யார் அதிகூடிய வாக்குப் பெற்றிருக்கின்றாரோ அவரே வெற்றியாளர்.
எனவே, 50% என்ற ஒன்று அவசியமில்லை. முதலாவது சுற்றில் 50% இற்கு மேல் பெற்றிருந்தால் அதன்பின் இரண்டாம் மூன்றாம் வாக்குகளை எண்ணவேண்டுமென்ற அவசியமில்லை. காரணம் ஏனைய அனைவருமே அடுத்தவருக்கு தமது இரண்டாம் அல்லது மூன்றாம் வாக்கை அளித்திருந்தாலும் அவை 50% ஐத் தாண்டமுடியாது.
இதன் யதார்த்தத்தைப் பாருங்கள்.
நாம் அளிக்கின்ற முதலாவது வாக்கைப் பொறுத்தவரை பிரதான இரு வேட்பாளரை விடுத்து ஏனைய வேட்பாளர்கட்கு அளிக்கின்ற வாக்கிற்கு எந்தப் பெறுமதியுமில்லை. பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு அளித்தால் ஒன்றில் ஒருவர் தெரிவுசெய்யப்படுவது தடுக்கப்படலாம். அடுத்தவர் தெரிவுசெய்யப்பட அது உதவலாம்.
இப்பொழுது இரண்டாம் வாக்குற்கு வருவோம்.
Aயும் Bயும் பிரதான வேட்பாளர்களெனில் அவர்களிலொருவருக்கு முதலாம் வாக்கை இடுபவர் அவரது ஏனைய இரு வாக்குகளையும் யாருக்கு அளித்தாலும் அதற்கு எதுவித பெறுமதியும் இல்லை. அவை எண்ணப்படப் போவதுமல்லை. இவரைப் பொறுத்தவரை இவரது முதலாவது தெரிவு மட்டுமே வாக்காகும். ஏனெனில் அவரது வாக்குச்சீட்டு அவர் வாக்களித்த பிரதான வேட்பாளருக்குரிய வாக்குச்சீட்டாக கட்டிவைக்கப்படும். இரண்டாம் சுற்றில் அது அவிழ்க்கப்படவே மாட்டாது.
இப்பொழுது இவர் 1,2,3 என மூவருக்கு இலக்கமிட்டிருந்தாலும் இவரது வாக்கு ஒன்றே. சிலர் நமக்கு மூன்று வாக்குகள் இருப்பதால் இம்முறை யாரும் 50% பெறாத சூழ்நிலையில் ஏனைய வாக்குகளையும் பாவிக்கவேண்டுமென்று முகநூல்களில் கூறுகின்றார்களே! அது சரியா? என சிந்தியுங்கள்.
எனவே, பிரதான வேட்பாளர் இருவரில் ஒருவருக்கு வாக்களிப்பவர்களைப் பொறுத்தவரை முதலாவது வாக்கு மட்டும்தான் வாக்காகும். ஏனைய வாக்குகளைப் பாவிப்பதால் பாதிப்புமில்லை; நன்மையுமில்லை.
பிரதான வேட்பாளர்களல்லாதவர்க்கு ( C,D,E) வாக்களிக்கும்போது:
இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற முதலாவது வாக்கினால் எதுவித பிரயோசனமுமில்லை இத்தேர்தலைப் பொறுத்தவரை. ஆனால் இவர்கள் ( உதாரணமாக முஸ்லிம்கள்) எமது கட்சிக்கு இவ்வளவுதூரம் வாக்களித்தார்கள் என்ற நன்றிக்கடன் சிலவேளை இருக்கலாம். அதேநேரம் அதிகரித்த அந்த வாக்கைக் காட்டி பொதுத்தேர்தலில் தனது வாக்கு வங்கியை மேலும் அதிகரிக்க அவர்கள் முற்படலாம்.
மறுபுறம் நாம் யாரின் தெரிவை தவிர்க்க நினைக்கின்றோமோ அவருக்கெதிராக அடுத்த பிரதான வேட்பாளரின் வாக்கை அதிகரிக்க அவ்வாக்குப் பாவிக்கப்படாமல் போகிறது. அதன்மூலம் நாம் விரும்பாத வேட்பாளரின் வெற்றிக்கு உதவுகின்றோம்.
இந்தப்பாதிப்பை இந்த இரண்டாவது வாக்கு ஈடு செய்யும்.
அதாவது உதிரி வேட்பாளர்கட்கு நாம் அளித்த முதலாவது வாக்கு பிரயோசனமற்றுப்போக இப்பொழுது இரண்டாவது வாக்கை நமது வாக்காகப் பயன்படுத்தலாம்.
இரண்டாவது வாக்கு
—————————
நாம் A தோற்கடிக்கபடவேண்டுமென விரும்புகிறோமெனில் முதலாவது வாக்கை உதிரி வேட்பாளர்களுக்கு அளித்தருந்தால் எமது 2வது வாக்கை கட்டாயம் Bயிற்கு அளித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டால் முதலாவது வாக்கை உதிரிகளுக்கு அளித்ததன்மூலம் Bயின் வாக்குகள் கூடுவதற்கு சந்தர்ப்பம் வழங்காமை Aயின் வெற்றிக்கு உதவுவதாக அமையும்.
B யிற்கு அளிக்கப்படும் இரண்டாவது வாக்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாத நிலையிலேயே உதவும்; என்பதையும் கவனத்திற்கொள்வோம்.
இப்பொழுது முதலாவது சுற்றிலேயே நாம் தோற்கடிக்க விரும்பும் A, 50% பெற்றுவிட்டார்; எனக்கொள்வோம். நாம் B யிற்கு முதலாவது வாக்கை அளித்திருந்தாலும் A யின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. நமது வாக்குகள் இல்லாமலேயே அவர் 50% பெற்றுவிட்டார்.
இங்கு எழும் பிரச்சினை இரண்டு: ஒன்று அவருடைய எந்த இனவாதத்திற்காக நாம் அவரைத் தோற்கடிக்க நினைத்தோமோ அந்த இனவாதத்தில் அவர் இன்னும் மூர்க்கத் தனமாக இருப்பார். ஏனெனில் அவருக்கு வாக்களித்தவர்கள் அவரது இனவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். எனவே, அவர்களைத் திருப்திப்படுத்த நம்மீது இனவாதக் கணைகள் வீசப்படும். மறுபுறம் அவருக்கு வாக்களிக்கவில்லை; என்கின்ற அவரது வெஞ்சினம் நம்மீது தீயாகக்கொட்டும்.
இப்பொழுது சிந்தியுங்கள், நாம் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது; எனத் தீர்மானிக்கின்ற நேரம் வந்துவிட்டதா? இன்னும் வேட்புமனு கையளிக்கப்படவில்லை. மக்களின் சரியான உணர்வை அறிய இன்னும் நேரமிருக்கிறது. இந்நிலையில் விடியமுன்னே தீர்மானம் எடுத்து முகநூல்களில் பட்டிமன்றம் நடாத்தும் சகோதரர்களே சிந்தியுங்கள்.
இரண்டு, சிறுபான்மை இல்லாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம்; என்ற எண்ணப்பாடு பொதுவாக பெரும்பான்மை சமூகத்திடம் உறுதிபெறும். விளைவு எதிர்காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் இனவாதத்தைக் கையிலெடுக்கத் தொடங்குவார்கள்.
அதன்பின், ஒரு ஜனநாயக நாட்டில் அரசு என்பது “ மக்களால் மக்களுக்காக செய்யப்படும் மக்களாட்சி “ என்பது மாறி “ பெரும்பான்மை சமூகத்தால் பெரும்பான்மை சமூகத்திற்காக செய்யப்படும் பெரும்பான்மை சமூக ஆட்சி” என்ற பதம் நிலைபெறும்; என்பதையும் அதன் விளைவுகளையும் கவனத்திற்கொள்க. நாம் எந்த நாட்டிற்கு சென்று வாழ்வது என்பதையும் சிந்திக்குக.
மூன்றாவது வாக்கு:
நீங்கள் முதலாவது வாக்கை A அல்லது B யிற்கு அளித்தால் ஏனைய இரு வாக்குகளை யாருக்கு இலக்கமிட்டாலும் பெறுமதியில்லை. உங்கள் வாக்கு ஒன்றே!
முதலாவது வாக்கை உதிரிகளுக்கு இட்டால் இரண்டாவது வாக்கை A அல்லது B யிற்கு அளித்தால் அதுதான் உங்கள் வாக்கு. ஏனையவை வெறும் இலக்கங்களே! எனவே, மூன்றாவது வாக்கை யாருக்கு அளித்தாலும் பிரயோசனம் இல்லை.
முதல் இரு வாக்குகளையும் உதிரிகளுக்கு அளித்தவர்கள் மூன்றாவது வாக்கை ஒரு பிரதான வேட்பாளருக்கு அளித்தால் அதற்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாதபோது பெறுமானமிருக்கும். அதுதான் உங்களது வாக்காகும்.
எனவே, ஒருவருக்கு வாக்கு ஒன்றே. மாறாக மூன்று என்றால் வாக்காளர்கள் ஒரு கோடி அறுபது லட்சமென்றால் வாக்குகள் நான்கு கோடி எண்பது லட்சமாக வேண்டும். அவ்வாறு இல்லை.
பாராளுமன்றத் தேர்தலிலும் கட்சிக்கு அளிப்பது மாத்திரமே வாக்கு. ஆனாலும் விருப்பத் தெரிவு வாக்குகள் மூன்று. அந்த மூன்றையும் அங்கு மூவரைத் தெரிவுசெய்யப் பாவிக்கலாம்.
இங்கு வாக்கும் ஒன்று. தெரிவுசெய்வதும் ஒருவரையே!
இதனை ஒரு கிராமிய, பாமரப்பாணியில் கூறுவதாக இருந்தால், நாம் முதலாவது வாக்கை ஒருவருக்கு அளித்துவிட்டுக் கூறுகின்றோம்; இவர் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் எனது முதலாவது வாக்குத் ‘துப்பல்’; எனது இரண்டாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.
அடுத்ததாக கூறுகின்றோம்; அவரும் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் அதுவும் ‘ துப்பல்’ மூன்றாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.
எனவே, சிந்தித்து யார் குறைந்த பாதிப்பானவர், யாரை நாம் எவ்வளவு ஒன்று பட்டாலும் தோற்கடிக்கவே முடியாது; ( அவ்வாறான ஒரு சூழ்நிலை இருந்தால்) என்பவற்றைக் கவனத்திற்கொண்டு உங்கள் வாக்குகளின் பெறுமதி உணர்ந்து செயற்படுங்கள்.
உங்கள் புரியாமை, அறியாமை, மேலெழுந்த வாரியான சிந்தனை இந்த சமூகத்திற்கு தீங்காக மாறிவிடவேண்டாம். இறைவன் நமக்கு சரியான வழியைக் காட்டட்டும்



எதிர்காலத்திலும் நாட்டை ஆட்சி செய்வது ஒரு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பண்டாரநாயக்க நினைவு விழா கடந்த 27ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;
முன்னாள் தீவிர ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் என்ற வகையில் இந்த பண்டாரநாயக்க நினைவு விழாவை  ஏற்பாடு செய்ய கிடைத்தமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பது மிகவும் பலம்வாய்ந்த ஒரு கட்சி, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை 2015ஆம் ஆண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஒரு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அதேபோன்று எதிர்வரும் காலத்திலும் இந்த நாட்டை ஆட்சி செய்யப்போவது ஒரு  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினாரே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, செயலாளர் தயாசிறி ஜயசேகர,  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர, மகாஜன எக்சத் பெறமுண தலைவர் தினேஷ் குணவர்தன, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.








பயங்கரவாதிகளினதும் பிரிவினைவாதிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பல நிபந்தனைகளுக்கு இணங்கி மற்றும் பாரிய பிளவுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.

(AdaDerana)

 

இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துக் கூறும்விதமாக ஆங்கில தொலைகாட்சி அலைவரிசையினை ஆரம்பிக்க மூன்று இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் எடுத்த தீர்மானமானது உலக இஸ்லாமிய மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதிலும் இஸ்லாத்துக்கு எதிராக போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற சர்வதேச யூத சார்புடைய ஊடகங்களின் பிரச்சாரத்தினை முறியடிப்பதே இதன் நோக்கமாகும்.

துருக்கி, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளின் தலைவர்களான முறையே எர்டோகான், இம்ரான்கான், மஹதீர் முஹமத் ஆகிய மூன்று தலைவர்களும் இஸ்லாத்தின் மீதுள்ள பற்றுதலையும், ஊடகத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தது போன்று இஸ்லாம் பிறந்த மண்ணில் உள்ள தலைவர்கள் உணரவில்லை. 

நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்களை பரப்புவது மட்டுமல்லாது முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.

உலகில் பல நாடுகளில் பெரும்பான்மை அரசுகளினால் அடக்கப்பட்டு உரிமை இழந்த முஸ்லிம்கள் தங்களது உரிமைக்காகவும், ஒடுக்கப்பட்ட விலங்கினை உடைத்தெறிய போராடுகின்ற அனைத்து இஸ்லாமிய போராட்ட இயக்கங்களும் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்படுகின்றன. 

அத்துடன் உலக வல்லரசுகளுக்கு அடிமைப்பட்டு இஸ்லாத்துக்கு முரணாக ஆட்சி செய்கின்ற பொம்மை ஆட்சியாலர்களுக்கு எதிராக போராடி இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்ற போராளிகளும் பயங்கரவாதிகளாகவே கான்பிக்கப்படுகின்றார்கள்.

இந்த செயல்பாடுகளை சர்வதேச பிரபலமான ஊடகங்கள் மிகவும் தந்திரமாகவும், மதிநுற்பமாகவும் செயலாற்றி வருகின்றது.

சில நாடுகளில் தங்களது கைகளைக்கொண்டு தங்களது கண்களை குத்துவது போன்று எம்மவர்களைக்கொண்டே எமது சமூகத்தினர்கள் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். 

இன்று சர்வதேச ரீதியில் இயங்குகின்ற ஒவ்வொரு ஊடகங்களும் ஏதோ ஒருவகையில் தங்கள் இனத்துக்காகவும், மொழிக்காகவும், சமயத்துக்காகவும், இயங்கி வருவதுடன்,. இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தினையும், முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றன. 

அந்தவகையில் ராய்டர், CNN, BBC போன்ற சர்வதேச ஊடகங்கள் அமெரிக்க வல்லாதிக்கத்தையும், யூத பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்துவதோடு இஸ்லாமிய போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலும், இஸ்லாமிய உலகை தொடர்ந்து பிளவுபடுத்தி வைத்திருப்பதிலும் கவனமாக செயல்படுகின்றன.

இவ்வாறான செயல்பாடுகளை முறியடித்து உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறும்பொருட்டு மூன்று தலைவர்களின் சிந்தனையில் இது உருவானதற்கு அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்த வேண்டும். அத்துடன் இந்த முயற்சிக்கு யூதர்களின் இடையூறுகள் வரமாட்டாது என்று எதிர்பார்க்கவும் முடியாது. 

அதுபோன்று எமது நாட்டிலும் முஸ்லிம் சமூகத்துக்கு உள்ள பிரச்சனைகளை சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துக்கூறும் விதத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் முஸ்லிம்களின் குரலாக செயல்படுகின்ற ஊடகம் ஒன்று மிகவும் அவசியமானது. 

எமது சமூகத்தில் எத்தனையோ பணம் படைத்தவர்கள், அரசியல் தலைவர்கள் இருந்தும் இவ்வாறான விடயங்களில் ஆர்வம் காட்டாதது கவலையான விடயமாகும்.

எனவே ஊடகத்தின் முக்கியத்துவத்தினை உலக தலைவர்கள் உணர்ந்தது போன்று எமது நாட்டில் உள்ள தலைவர்களும், பணம் படைத்தவர்களும் உணரவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


தமிழில் ராஃபி சரிப்தீன்
நாடு தற்போது முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை இன்னும் அதிகரிப்பதாகவே ஜனாதிபதித் தேர்தல் அமையப் போகின்றது. ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியைப் பெற்ற போதிலும் நாடு தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முடியாத நிலையே ஏற்படப்போகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் தமது அபேட்சகர் பெயர்கள் வெளியிடப்பட்ட நிலையில் அரசியலமைப்பின் 19 வது சீர்திருத்தித்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய ஜனாதிபதி என்பது ஒரு பெயரளவுப் பதவியாகவும் அரசு சார்ந்த அனைத்து அதிகாரங்களும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை வசம் இருக்கும் விதத்திலேயே அமையப் போகின்றது.
ஜனாதிபதி என்பவர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றார் என்ற காரணத்தினாலும் ஜனாதிபதி ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை வேறு ஒரு கட்சியைச் சார்ந்ததாகவும் தெரிவாகுமாயின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் என்பவற்றுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு, அதன் விளைவாக முழு அரசியலமைப்பையும் நகைப்புக்குள்ளாக்குவதற்கு காரணமாக அமையலாம்.
இலங்கை தற்போது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளின் தன்மைகளை கீழ்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
1. ஊழலினால் மாசுபட்டு நாசகார தாக்குதல்கள் மூலமாக பலவீனமான நிலையிலும் செயற்படும் சக்தியை இழந்த நிலையிலுமே இன்றைய அரசாங்கம் காணப்படுகின்றது.
2. சாதி குல மத பேதங்கள் காரணமாக உருவான கலவரங்கள் சண்டைகள் மூலமாக பிரிவினைக்குற்பட்ட நிலையிலேயே இன்றைய சமூகம் காணப்படுகின்றது.
3. எப்போது வேண்டுமானாலும் வங்குரோத்து நிலையை அடைந்துவிடலாம் என்ற பாதகமான நிலையிலேயே நாட்டின் பொருளாதாரம் காணப்படுகின்றது. புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதும் இதுவரைகாலமும் ஜனாதிபதி வசமிருந்த நாட்டின் ஆட்சி அதிகாரமானது பாராளுமன்றத்திற்கு கிடைக்கப் பெறவிருக்கின்றது. எனினும் இவ்வாறான ஒரு பாரிய பொறுப்பை ஏற்பதற்கு எந்த விதத்திலும் பொறுத்தமில்லாதததும் ஊழல் நிறைந்த நிலையிலுமே இன்றைய பாராளுமன்றம் இருக்கின்றது என்பது துரதிஸ்ட்டவசமான நிலையாகும்;.
கிராம மக்களின் வாழ்க்கை முறை
கிராமிய மக்களின் வழ்க்கைத் தரம் மிகவுமே பரிதாபகரமான நிலையில் காணப்படுகின்றது. மிக அண்மைக் காலம் வரை இலங்கையின் தெற்குப் பகுதியின் கிராமங்களில் வசிப்பவர்களின் பிரதான வருமான ஈட்டும் முறையாக சிறு தேயிலைத் தோட்டங்கள் காணப்பட்டு வந்தன.
“ஹினிதும” போன்ற கஷ்டப் பிரதேசங்களில் கூட சிறு தேயிலைத் தோட்டங்களை வைத்திருக்கும் விவசாயிகளின் பொருளாதார மட்டமானது அந்தப் பகுதியில் வேறு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் பொருளாதார மட்டத்திலும் பார்க்க உயர்ந்த மட்டத்திலேயே காணப்பட்டது. மின்சாரம் இல்லாத பிரதேச விவசாயிகளின் வீடுகளில் ஜெனரேட்டர்கள் காணப்பட்டன. இன்றைய காலப்பகுதியில் சிறி தேயிலைத் தோட்ட விவசாயிகளது நிலை மிகவும் கவலைக்கிடமானதாக காணப்படுகின்றது.
காலியிலிருந்து பெத்தேகம வரையான தூரம் 19 கிலோமீட்டர்களாகும். கீம்பிய தொடக்கம் பெத்தேகம வரையில் 7 தேயிலைத் தொழிற்சாலைகள் காணப்பட்டன. அவற்றில் 06 தொழிற்சாலைகள் இன்றளவில் மூடப்பட்டுள்ளதுடன் மிகுதியாக இருக்கும் ஒரே ஒரு தொழிற்சாலை மிகுந்த சிரமத்துடன் செயற்பட்டுவருகின்றது.
தேயிலையின் விலையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு இது வரைகாலமும் அறவிடப்பட்டு வந்த பொருளாதார சேவைகள் வரியினை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்பட்ட அழுத்தங்கள், வங்கிக் கடன்களுக்கான வட்டி வீதம் இரட்டிப்பாக்கபபட்டமை, தொழிலாளர்கள் தட்டுப்பாடு, கிலைபோசெட் தடை செய்யப்பட்டமை, தேயிலை மீள் ஏற்றுமதிக் கொள்ளை போன்ற காரணிகள் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரங்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த தேயிலை தொழிற்சாலைகளின் இருப்புக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின.
கருவா மற்றும் மிளகு பயிரிடும் விவசாயிகளின் நிலைமை கூட இது போன்றதாகவே காணப்படுகின்றது. மீள் ஏற்றுமதி முறையின் கீழ், தரத்தில் குறைந்த கருவா மற்றும் மிளகு என்பன இறக்குமதி செய்யப்பட்டு அவற்றுடன் இலங்கையில் விளையும் கருவா மிளகு என்பவற்றை கலந்து ஏற்றுமதி செய்தததன் காரணமாக கருவா, மிளகு என்பவற்றுக்கான விலை வீழ்ச்சிகண்டது. இதன் விளைவு கருவா மற்றும் மிளகு பயிரிடும் விவசாயிகளை நேரடியாகவே பாதிப்புக்குள்ளாக்கியது. இலங்கையின் இறப்பர் தோட்டங்கள் கூட கைவிடப்படும் நிலையிலேயே காணப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் இறப்பரின் விலை இலங்கையில் இருக்கும் இறப்பரின் விலையிலும் குறைவு என்பதனால் உற்பத்திச்சாலைகள் இலங்கை இறப்பரை வாங்காமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இறப்பரையே உற்பத்திகளுக்காக பயன்படுத்துகின்றன.
கால் போன போக்கில் பயணித்தல்
நெற் பயிர்ச்செய்கை கூட மோசமானதொரு நிலையிலேயே காணப்படுகின்றது. நெல் பயிரானது இலங்கையின் பிரதான ஒரு பயிர்ச் செய்கையாக கருதப்பட்ட போதிலும் மற்றைய அனைத்து பயிர்ச் செய்கையிலும் பார்க்க மிகவும் குறைந்த அளவிலான வருமானத்தையே நெற்பயிர்ச் செய்கை ஊடாக விவசாயிகளால் ஈட்டிக்கொள்ள முடிகின்றது. நெல் பயிரிடும் விவசாயி ஒருவருக்கு அதிஷ்டம் இருக்குமாயின் ஒரு போகத்தில் ஒரு ஏக்கர் வயல் நிலத்திலிருந்து ரூ 40,000 அளவில் வருமானம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர் பற்றாக்குறையானது நெற் செய்கையில் பிரதானமான பிரச்சினையாக காணப்படுவதுடன் அறுவடைக்காலங்களில் இந்தியாவிலிருந்து ஊழியர்களை அழைத்துவர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஈர வலயங்களில் அதிகளவிலான வயல் நிலங்கள் பயிரடப்படாமல் கைவிடப்படும் நிலைக்குள்ளாகியிருக்கின்றது. கைவிடும் நிலையில் இருக்கும் வயல் நிலங்களில் வேறுவகையான பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதறகான வாய்ப்புகள் இருந்த போதிலும் வயல் நிலங்கள் தொடர்பான இறுக்கமான சட்டங்கள் காரணமாக ஈர வலயப் பிரதேசங்களில் எந்தப் பயிர்ச் செய்கைகளும் மேற்கொள்ளப்படாமல் ஆயிரக் கணக்கிலான ஏக்கர் அளவில் வயல் நிலங்கள் எந்த வருமானம் பெறப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
கடந்த சில தசாப்தங்களாக விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் அவை பல்கிப் பெறுகுவதற்கு இடமளித்து வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை காரணமாக பாரிய எண்ணிக்கைகளாக அதிகரித்திருக்கும் விலங்குகள் மூலமாக விவசாய நிலங்களுக்கு பாரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்துகின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புகளுக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதத்திலும் அதிகமான விவசாய உற்பத்திகள் வன விலங்குகள் மூலமாக அழிக்கப்படுகின்றன எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக நாடொன்றில்; வன விலங்குகளினால் விவசாய உற்பத்திகளுக்கு ஏற்படும் அழிவுகள் 10 வீதத்திலும் குறைவான அளவிலேயே இருக்க வேண்டும். எமது நாட்டில் காணப்படும் நிலையானது நாட்டின் தேசிய பொருளாதாரத்தை நேரடியாக பாதிப்பதுடன் விவசாயிகள் ஈட்டுகின்ற வருமானத்தின் அளவில் குறைவு ஏற்படுவதற்காகவும் நேரடித் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
கிராமிய பெண்களுக்காக பிணைகள் இன்றி கடன் வழங்குவதற்காக (மைக்ரோ) நுண் நிதி நிறுவனங்களினால் செயற்படுத்தப்படுகின்ற கடன் திட்டங்கள் பகல் கொள்ளை வகையராவாகக் குறிப்பிலாம். தாம் பெற்றுக் கொண்ட தவணைக் கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் தொகை 150 விட அதிகம் என்பதாக குறிப்பிப்படுகின்றது. சிகரட் மதுபானம் என்பவற்றுக்கான அதிக விலையேற்றம் காரணமாக கசிப்பு மற்றும் பீடி போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தங்களை பழக்கப்படுததிக்கொள்ளும் கிராம மக்களின் தொகை பாரிய அளவாக உயர்ந்துவருகின்றது. ஒரு தீய பழக்கத்தினை ஒழிப்பதற்காக மேற்கொண்ட முயற்சி அதனை விட பாரதூரமான தீய பழக்கம் ஒன்று உருவாக காரணமாக அமைந்திருக்கின்றது.
காணி கொள்ளையிடல்
கிராமிய சமூகத்திடம் காணப்படுகின்ற இந்த பரிதாபகரமான நிலை அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய வீழ்ச்சி நிலை மற்றும் அழுகல் நிலை என்பனவற்றின் காரணமாகவே ஏற்பட்டிருக் வேண்டும். கடந்த சில தசாப்தங்களாக நாட்டின் அனைத்து விடயங்களும் அரசின் முறையான வழிகாட்டல்களோ கட்டுப்பாடுகளோ இல்லாத நிலையிலேயே நடைபெற்றுவருகின்றன. இதனைத் தோல்வியடைந்த ஒரு தேசத்திற்கான அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக குறிப்பிட முடியும்.
வர்த்தகப் பயிர்ச் செய்கைகள் பிரித்தானியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு பொக்கிசமாக கருதமுடியும். பிரித்தானிய காலம் முதல் 1970 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டங்களை அரசாங்கம் தன் வசம் சுவீகரித்துக் கொண்ட காலம் வரை இலங்கை உலக அலவில் சிறந்த தேயிலை உற்பத்தி செய்யும் நாடு என்ற அந்தஸ்த்தைப் பெற்றிருந்தது. தேயிலை உள்ளிட்ட வர்த்தகப் பயிர்ச் செய்கைகள் அனைத்துமே போதுமான அளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற பிரதான ஏற்றுமதிப் பண்டங்காளாகவே இருந்துவந்தன.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களை அரசுடமையாக்கல் மற்றும் காணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தேயிலைத் தோட்டங்கள் அரசுடமையாக சுவீகரிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் வர்த்தகம் சார்ந்த பாரிய பின்னடைவு ஆரம்பமானது என்பதாக குறிப்பிடலாம். இந்த இரண்டு முறைகள் ஊடாகவும் அரசினால் சுவீகரிக்கப்பட்ட மொத்த காணிகளின் அளவு ஒரு மில்லியன் ஏக்கர்களிலும் அதிகமாகும். சுவீகரிக்கப்பட்ட தோட்டங்களை வெற்றிகரமாக பராமரிப்பதற்கான திட்டங்கள் எதுவும் அரசிடம் காணப்படவில்லை. தோட்ட முகாமை குறித்த அடிப்படை அறிவு துளி கூட இல்லாத ஆளும் கட்சி அரசியல்வாதிகளே இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட தோட்டங்களின் முதல் நிர்வாகிகளாக நியமிக்கப்பபட்டனர். அரசினால் சுவீகரிக்கப்பட்ட இந்த தோட்டங்களில் குறித்த ஒரு பாரிய பகுதி 1977 ஆம் ஆண்டுகளின் பின்னர் ஆளும் கட்சி அரசியல்வாதிகளும்; அவர்களது உற்ற நண்பர்களும் மிகவூம் குறைந்த தொகைக்கு கொள்வனவு செய்யப்பட்டு தோட்ட உரிமையாளர்களாக தங்களை ஆக்கிக்கொண்டனர். பிரித்தானியா இலங்கையை ஆக்கிரமித்த போது தேயிலைத் தோட்ட பயிர்செய்கையின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானியர்களால் மேற்கொள்ளப்பட்ட காணிக் கொள்ளையிடலுக்கு ஒப்பானதாக அரசியல்வாதிகளின் காணிக் கொள்ளையிடல் நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.
இந்த கொள்ளையடித்தல் நடவடிக்கையின் பின்னர் மீதமாக இருந்த தோட்டங்களில் பாரிய ஒரு பகுதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் தனியார் நிறுவகங்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு தேயிலைத் தோட்டங்களைப் பெற்றுக்கொண்ட தனியார் நிறுவனங்கள் குறித்த தோட்டங்களின் வெளித் தோற்றத்தினை அழகு படுத்தியதே தவிர தேயிலை உற்பத்தின் தரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கைகளின் பிரதிபலனாக உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்காக இருந்து வந்த அங்கீகாரம் குறைவடையத் துவயங்கியது. அதன் பின்னரான காலப்பகுதிகளில் குறித்த நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் தேயிலை உற்பத்தி செய்யும் போது அதனுடன் சீனியைக் கலந்துவிட்டதன் காரணமாக தற்போதளவில் இலங்கைத் தேயிலைக்கான அங்கீகாரம் மிகவும் மோசமான அளவில் குறைந்திருக்கின்றது. ஏற்றுமதிப் பொருட்களின் தர நிர்ணயம் குறித்த பொறுப்பு அரசிடமே காணப்படுகின்றது. தோட்டத் துறை சம்பந்தமான நடவடிக்கைகளுக்காகவென அமைச்சு ஒன்றும் விடயங்களுக்குப் பொறுப்பாக அமைச்சர் ஒவருடன் பாரிய அதிகாரிகள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இவைகள் அனைத்தையும் பரிபாலனம் செய்வதற்காக அரச நிதியில் ஒரு பகுதியும் செலவிடப்படுகின்றது. இவ்வாறான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் வர்த்தக துறையில் இலங்கையின் தோட்டத் துறை பின்தங்கிய நிலையில் இருப்பதானதன் ஊடாக இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளது என்பது நிரூபனமாகின்றதல்லவா?
தோல்வியடைந்துள்ள அரசு
இலங்கை அரசு அடைந்திருக்கும் தோல்வி குறித்து கிராமிய விவசாயம் மற்றும் மக்களினது வாழ்க்கைததரம் என்பன அடைந்திருக்கும் வீழ்ச்சியின் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது. மீள் ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் போது இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்கள் மற்றும் அதனுடன் கலக்கப்பட்டு ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் தொடர்பாகவும் அவை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளின் சாதக பாதக தன்மை குறித்தும் ஆராய்ந்துபாராமல் மீள் ஏற்றுமதிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன என்பது இதன் ஊடாக தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது.
இலங்கையின் குப்பை பிரச்சினைக்கு முறையான தீர்வுகாணப்படாமல் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில் வெளிநாட்டுக் குப்பைகளை இறக்குமதி செய்து அவற்றை மீள் ஏற்றுமதி செய்வதற்காக அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்பதை தம்மிக பெரேரா தொடர்பான நிகழ்வு ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது. மேற்படி குப்பைகள் மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படவில்லை. அவைகளை இலங்கையின் குப்பைகளுடம் சேர்த்து விட்டு அதன் ஊடாக இலாபம் ஈட்டிக்கொள்ளும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதை புரிந்துகொள்வது கடினமானதொரு விடயமல்ல. இது நாட்டிற்கு பாரிய பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க விடயமாக இருந்த போதிலும்இ மேற்படி தவறுகளை சரிசெய்வதற்கான உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. அரசு தோல்வியடைந்த நிலையில் இருப்பதனை இந்த சம்பவம் கூட எடுத்துக்காட்டி நிற்கின்றது. கருவா, மிளகு மீள் ஏற்றுமதி கொள்ளை ஊடாகவும் இந்த விடயம் நிரூபனமாகின்றது.
உலகிலேயே மிகச் சிறந்த கருவா இலங்கையிலேயே கிடைக்கின்றது. இயற்கையின் அருட்கொடையாக இலங்கையின் கருவா வகைகளுக்காக கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த சிறப்பியல்பைப் பயன்படுத்தி கருவா ஊடாக நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வருமானங்களை பெற்றுக்கொள்வதில் இலங்கை தோல்வி கண்டுள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கை கருவாவிற்கு இருக்கும் விசேட அங்கீகாரத்தினை போக்குவதற்கு இலங்கையின் அரசின் கருவா தொடர்பிலான கொள்கைகளே காரணமாக அமைந்திருக்கின்றன. மிளகு தொடர்பிலும் இதே விடயத்தையே குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
இலங்கையின் விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வன விலங்குகள் தொடர்பில் அரசாங்கம் நீண்டகாலமாக கடைபிடித்துவரும் முட்டாள் தனமான கொள்கைகள் தொடர்பிலும், அந்த கொள்கைகள் ஊடாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் தொடர்பிலும் பார்க்கும் போது இலங்கை அரசின் தோல்வியடைந்த தன்மை உறுதி செய்வதற்காக முன்வைக்க முடியூமான நூற்றுக்கணக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று என்பதாக கூறமுடிகின்றது.
கிலைபோசெட் தொடர்பில் மேற்கொண்ட தான்தோன்றித் தனமான கொள்கைகள் ஊடாகவும் இதே தன்மையே தெளிவாகின்றது. விவசாயத் திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானிகளின் பரிந்துரைகளுக்கு இசைவாக அரசு கிலைபோசெட் இற்கு தடை விதிக்கவில்லை மாறாக சுற்றாடல் பாதுகாவலர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொண்டு அரசுடன் தொடர்புகளைப் பேணி வந்த அரசியல் குழுவொன்றின் வேண்டுகோளுக்கிணங்கவே மேற்படி தடை விதிப்பினை அரசு மேற்கொண்டிருந்தது. இந்த தடை உத்தரவானது நாட்டின் வர்த்தக தோட்டங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. நெல் மூலமாக பெறப்படுகின்ற வருமானம் மிகக் குறைந்த அளவில் இருக்கும் நிலையிலும் நாட்டிற்கு தேவையான அரிசி முழுவதையும் உலர் வலயத்தில் அமைந்திருக்கும் வயல்களின் ஊடாக பெறமுடியுமான நிலையிலும் அவைகள் மீது கவனம் செலுத்தாது நெல்லுக்கான முக்கியத்துவத்தினை முதன்மைப் படுத்திக்கொண்டிருப்பது ஊடாகவூம் அரசாங்கம் தோல்வியை அடைந்திருப்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றது.
கல்வி
கல்வி என்பது ஒரு நாட்டின் நிகழ்காலத்தில் மாத்திரமன்றி எதிர்காலத்திலும் தாக்கம் செலுத்தக்கூடிய திறன் கொண்ட மிக முக்கியமான காரணியாகும். இலங்கையின் மொத்த கல்வித் துறையும் சிக்கலான அமைப்பாக மாறியிருக்கின்றது. நாம் இங்கு குறிப்பிட முனைவது முழு கல்வித் துறை தொடரபாகவல்ல, மாறாக பாடசாலைக் கல்வி தொடர்பாக மாத்திரமே குறிப்பிட முனைகின்றோம். பணம் படைத்தவர்களுக்கு சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகள் என்ற அமைப்பிலும் வசதியற்றவர்களுக்கு ஆசிரமம் போன்ற பாடசாலைகள் என்ற அமைப்பிலுமே இன்றைய பாடசாலைக் கல்வித் துறை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பாடசாலை முறையில் காணப்படுகின்ற இந்த முரண்பாடுகள் ஒட்டு மொத்த கல்வித் துறையையும் பாதித்திருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் முன்பள்ளிகள், ஆரம்ப நிலைப் பாடசாலை, கனிஷ்ட பாடசாலைகள், சிரேஷ்டபாடசாலைகள் என்ற அடிப்படையில் பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து பாடசாலைகளினதும் தரம் ஒரே மாதிரியானதாக அமைவதுடன் ஆரம்பாடசாலை ஒன்றுக்காக விண்ணப்பிக்க வேண்டுமாயின் வீட்டின் அருகாமையில் அமைந்திருக்கும் ஆரம்பப் பாடசாலைக்கே விண்ணப்பிக்கப்பட வேண்டும். இந்த இலகுவான முறைமை ஊடாக அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் ஒரே தரத்தில் வைத்துப் பார்க்கப்படுவதுடன் மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதில் போட்டித் தன்மையோ பாடசாலை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் வழங்கும் முறையோ காணப்படுவதில்லை. அதுமாத்திரமன்றி இந்த இலகுவான முறைமையின் ஊடாக பாடசாலையின் வளங்கள் சமமாக பங்கிடப்படுவதுடன் பாடசாலை முகாமைச் செயற்பாடுகளையூம் இலகுபடுத்துகின்றது. பாடசாலை முறை ஊடாக வர்க்க பேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கப்பெறுவது தனது வீட்டிற்கு அருகாமையில் அமைந்திருக்கும் பாடசாலை என்பதால் போக்குவரத்துக்கான செலவுகள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படுவதில்லை என்பதுடன் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.
தற்போது காணப்படும் சிக்கலான பாடசாலை முறைக்குப் பதிலாக மேற்குறிப்பிட்ட இலகுவான முறையை அமுல்படுத்துவதன் அவசியப்பாடு குறித்து இளைஞர் விரக்தி ஆணைக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தொடராக வலியுறுத்தி வந்துள்ள போதிலும் நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களும் அரசின் உயர் அதிகாரிகளும் தற்போது நிலவுகின்ற ஊழல் நிறைந்த முறையை மாற்றியமைப்பதற்கு இடமளிப்பதாக தெரியவில்லை. இது இலங்கை அரசின் தேல்வியடைந்த தன்மையை விளக்குவதற்கான இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.
தோல்வியடைந்த தன்மையினை வெற்றிகொள்ளல்.
நிறைவேற்று அதிகாரமற்ற புதிய ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொள்வதனாலோ அல்லது பாரளுமன்ற தேர்தல் ஒன்றின் மூலமாக புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக்கொள்வதன் ஊடாகவோ இலங்கை அரசுக்கே உரித்தான தோல்வியடைந்த தன்மையினை வெற்றிகொண்டுவிட முடியாது. நாட்டில் நிலைகொண்டிருக்கும் தேல்வியடைந்த தன்மையினை வெற்றிகொள்ளும் வரை நாட்டில் நிலவுகின்ற நாசகாரத் தன்மை அவ்வாறே இருந்துகொண்டிருக்கும்.
தோல்வியடைந்த நாடொன்றையே இலங்கையராகிய நாம் பெற்றிருக்கின்றோம். இது ஊழல் நிறைந்திருக்கின்ற, திறம்பட செயற்படுவதற்கான பலமற்ற, சுயநினைவை இழந்து போன தேசமொன்றாகும். நாட்டின் நாசகாரத் தன்மையினை இல்லாதொழிக்க வேண்டுமாயின் தோல்வியடைந்த அரசாங்கமானது வெற்றியடைந்த அரசாங்கமாக புனர்நிர்மாணிக்கப்பட வேண்டும். அதற்காக கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டு மக்களின் பூரண அவதாணத்தையும் இந்த முக்கியமானதும் அவசியமானதுமான பிரச்சினையின் மீது செலுத்தப்படல் வேண்டும். அரச மற்றும் சமூக மேம்பாட்டிற்காக புனர்நிர்மாணம் ஒன்றினை, ஊழல் காரணமாக அழுகிப் போயுள்ள பாராளுமன்றத்தின் மூலமாக ஏற்படுத்தலாம் என்பதனை எதிர்பார்க்க முடியாது. கட்டமைப்பு மாற்றம் ஒன்றை இலக்காக கொண்ட மக்கள் அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான செயற் திட்டம் ஒன்றை நோக்கி நாட்டை நகர்த்துவதே இலங்கையின் இன்றைய நிலைக்கு அமைய புனர்நிர்மாணம் மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும்.

சோமாலியா மக்களுக்கு விமானத்தில் இருந்து தாராளமாய் உணவு கொண்டு வந்து கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர்.ரணில் கேட்டு இருந்தால் நாலு முழம் பெட்சீட்டைப் போட்டுக் கொண்டு தூங்கி எழுந்து ரிசல்ட் பார்க்க வேண்டிய அகோரமாய் பரிணமிக்க இருந்த ஜனாதிபதி தேர்தல் கடைசி நேரத்தில் யூ டேர்ன் எடுத்து இருக்கிறது.சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராகி இருக்கிறார்.உலக மக்களின் பொது பிரச்சினைகளில் ஒன்று போல இளித்துக் கொண்டு இத்தனை நாளாய் இழுத்தடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குளறுபடியை ‘செட்டிங்’என்று சிலர் சொல்கிறார்கள்...இல்லை....வேறு வழி இன்றி ரணில் கொடுத்து தொலைத்து இருக்கிறார்....
ஃபேஸ்புக் கருத்துக் கணிப்புக்களில் தேர்வு செய்யப்படும் ஜனாதிபதிகளை ஒதுக்கிவிட்டு லொக் அவுட் செய்துவிட்டு சூழலை அவதானித்தால் தற்போதைய அரசியலைப் புரிந்து கொள்ளலாம்.கோட்டா ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தருணத்தில் நான் ஊரில் சிங்கள டிரைவர் ஒருவரின் ஆட்டோ ஒன்றுக்குள் இருந்தேன்.கோட்டாவின் லைவைக் கேட்டபடியே ரணிலை மிகக் கடுமையாய் திட்டித் தீர்த்த அவர் சஜித் பிரேமதாஸ வேட்பாளரானால் மட்டும்தான் போட்டி ஒன்றைப் பார்க்கலாம் என்றார்.இப்போது திடீரென்று தன்னை மாற்றிக் கொண்டு சஜித் என்கிறார்.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவர் "இதுவரை யூ என் பீக்கு வோட்டுப் போட்டதில்லை.எனது மகளுக்கு சஜித் பிரேமதாஸ ஹம்பாந்தோட்டையில் வீடு கட்டித் தந்ததால் அந்த நன்றிக்கு பிரதியுபகாரம் செய்ய வேண்டி இருக்கிறது "என்றார்.....மகிந்த தரப்புடன் நெருங்கிப் பழகும் அரசாங்க ஆபீஸ்களில் இருக்கும் ஆபீசர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை விசாரித்துப் பாருங்கள்.சஜித் பிரேமதாஸ வேட்பாளராகுவார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை.அவர்கள் ரணிலை நம்பி ஏமாந்து போய் இருக்கிறார்கள்..
சஜித் பிரேமதாஸ அப்படி என்னதான் செய்து இருக்கிறார் என்று பார்த்தால் ஏழை பாளைகளுக்கு பத்தாயிரத்துக்கு மேல் வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறார்.இதுவே மகிந்த ஆட்சியில் இருந்தால் விமானிகளுக்கு ரேடாரே தெரியாதளவுக்கு இலங்கை முழுக்க கட்டவுட் ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு இருக்கும்.இந்த ஆட்சியின் பிரதான சீரழிவுகளில் ஒன்று சரியாய் மார்க்கட்டிங் பண்ணத் தெரியாமல் முழிச்சி நிற்பது தான்.....
தனி பெளத்த வாக்குகளால் மட்டும் இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தேர்வு செய்யப்படுவதாயின் கிட்டத்தட்ட 65 வீதம் பெளத்த வோட்டுக்களை அள்ள வேண்டும்.ரணில் கேட்டு இருந்தால் கோட்டா சிம்பிளாய் அள்ளி இருப்பார்.அதுமட்டுமல்ல ரணிலுடன் பகைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் அநுரகுமாரவுக்கு வோட்டு போட்டு தள்ளி இருப்பார்கள்.இப்போது நிலமை வேறு....நகர வோட்டுக்கள் எப்படிப் போனாலும் சிங்கள கிராம வோட்டுக்கள் சஜித் கோட்டா என்று உடையப் போகின்றன.2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சி தன் சொந்த வேட்பாளரை நிறுத்துகிறது.ரணிலால் கட்சியை விட்டுத் தூரமான ஒரு பெரும் கூட்டம் திடீர் எழுச்சி கண்டது போல இருக்கிறது...
கடந்த எட்டு பத்து வருசங்களாய் ரணிலுக்கு எதிராக கம்பு சுத்தி ஓய்ந்து போன சஜித் பிரேமதாஸவிற்கு இந்த அந்தஸ்து கிடைக்கப் பெற்றதன் பின்னணியில் இருந்த மறைகரம் வண்ணாத்துப் பூச்சி என்றும் ஒரு பால்காரர் என்றும் சிலரால் பரிகசிக்கப்படும் மங்கள தான்.இலங்கை அரசியலில் கிங்மேக்கர் மங்கள..2005 ஆம் ஆண்டு மகிந்தவை வேட்பாளராக்க சந்திரிக்கா மறுத்து நின்ற போதும் மங்கள போய் சந்திரிக்காவை நச்சரித்து மகிந்தவை அபேட்சகராக்கினார்.மங்களவின் அரசியல் சரித்திரத்தில் பாரிய சறுக்கல்கள் குறைவு. பொதுவாய் அவர் தோற்கும் சூது விளையாடுவதில்லை.2005 ஜனாதிபதித் தேர்தல் போல படுசுவாரசியமாய் அமைய இருக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலில் மங்கள சஜித்தின் வாழ்வில் மங்கள விளக்கு ஏற்றுவாரா இல்லையா என்பது நவம்பர் 17 இல் தெரிந்துவிடும்.

((ஸபர் அஹ்மத்) 



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களை ஆதரிக்க நேற்று (26) இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் காங்கிரஸின் விஷேட உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக UPC யின் பொதுச்செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் J.P. தெரிவித்தார்.

UPC யின் பிரதித் தலைவர் S.K.M.அஜ்மல் அவர்களினால் "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி சஜித் பிரேமதாஸ அவர்களை ஆதரிக்க வேண்டும்" என்று முன்மொழியப்பட்ட பிரேரணையை கட்சியின் தலைவர் சுஹைல் மொஹமட் அவர்களினால் அங்கீகரிக்கப்பட்டு உயர்பீட உறுப்பினர்களினதும் அங்கீகாரத்துடன் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்ட யோசனையை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (26) பிற்பகல் 3.00 மணி அளவில் கூடியது.

சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை சில நிபந்தனைகளின் கீழ் நியமிக்க பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(adaderana)


நீண்ட இழுபறிக்கும் போராட்டத்துக்கும் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிபந்தனையின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவின் பெயரை அறிவிப்பு செய்யப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இது மனச்சோர்வில் இருந்த ஐ.தே கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தினையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் முறன்பட்டுக்கொண்டு கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் ஐ.தே கட்சியில் இணைந்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
இந்த இழுபறியினால் ஐ.தே கட்சி தனது வேட்பாளராக யாரை நிறுத்தப்போகின்றது என்ற ஆவலுடனான எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் அனைவரிடமும் காணப்பட்டதானது ஐ.தே கட்சியின் வாக்கு வங்கியில் சாதக தன்மையை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.தே கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தை இலக்காக கொண்ட சஜித் பிரேமதாசாவின் அரசியல் வாழ்வினை இந்த தேர்தலே தீர்மானிக்கப்போகின்றது.
1994 ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர் காமினி திஸ்ஸாநாயக கொல்லப்பட்டதனால் அவரது மனைவி சிறிமதி திஸ்ஸாநாயக பதில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்தேர்தலில் ஸ்ரீமதி தோல்வி அடைந்ததனால் தேர்தலுடன் அவர் காணாமல்போனார்.
அந்த தேர்தலில் சிலநேரம் ஸ்ரீமதி வெற்றி பெற்றிருந்தால் ஐ.தே கட்சியின் தலைவராக அவரே இருந்திருப்பார்.
பின்பு 1999, 2005 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஐ.,தே கட்சி சார்பாக அதன் தலைவர் ரணில் விகரமசிங்க போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அவரது தலைமைத்துவத்திற்கு சவால்விடுக்கும் நிலையில் அந்த கட்சிக்குள் யாரும் இருக்கவில்லை.
2005 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கட்டம் கட்டமாக ஏராளமான தேர்தல்களை நடாத்தி மஹிந்த ராஜபக்ச தன்னை ஒரு வெற்றியாளராக காண்பித்ததனால், ஐ.தே கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.
அதனால் அக்கட்சியின் தலைவர் பதவிக்கு ரணில் பொருத்தமற்றவர் என்ற நிலை அவரது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உருவாகியது.
இதனாலேயே ஐ.தே கட்சியை பலமடைய செய்வதென்றால் ரணிலை தலைமை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகியதுடன், தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாசா என்று நம்பப்படுகின்றது.
ஆனாலும் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் சாதாரணமானதல்ல. மறுபுறத்தில் கோட்டபாய ராஜபக்ச என்னும் பலம் பொருந்திய வேட்பாளரோடு போட்டி போடுகின்ற நிலையில் தான் எப்படியாவது வெற்றி பெற்றால்தான் ஐ.தே கட்சியின் தலைவர் பதவியை அடையமுடியும்.
2005 இல் சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்தவை நிறுத்தியபோது அவர் வெற்றி பெற்றதனால்தான் சந்திரிக்கா ஓரம்கட்டப்பட்டு கட்சியின் தலைமை பொறுப்பை மகிந்த கைப்பேற்றி இருந்தார்.
அத்தேர்தலில் மஹிந்த தோல்வி அடைந்திருந்தால், சிறிமதி திஸ்ஸாநாயக்காவுக்கு ஏற்பட்ட நிலைமையே மகிந்தவுக்கும் ஏற்பட்டிருக்கும்.
எனவே சஜித் பிரேமதாச ஐ.தே கட்சியின் தலைவர் பதவியை கைப்பேற்றுவதென்றால் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
தோல்வி அடைந்தால் சஜிதும் வெற்றி வேட்பாளர் அல்ல என்ற தோற்றப்பாடு உருவாகிவிடும். அத்தோடு அன்று ஸ்ரீமதி திச்சானாயக்காவுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படாவிட்டாலும், ரணில் விக்ரமசிங்கவின் கைதான் தொடர்ந்து ஐ.தே கட்சிக்குள் மேலோங்கும்.
அத்துடன் ஐ.தே கட்சியின் தலைவர் பதவியை கைப்பெற்றுவதற்கு சஜிதுக்கு இன்று இருதரப்பு போட்டியாக இருக்கின்ற நிலைமையானது, தேர்தலுக்கு பின்பு பலதரப்பு போட்டியாக மாற்றமடையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது அரசியலில் ஆச்சர்யப்படக்கூடிய விடயமல்ல.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் இன்று (26) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இதுவரை பெயரிடப்படவில்லை எனவும், இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தின் பின்னரே அது குறித்து அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இன்று நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் மிக முக்கியதுவமிக்கதாக கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(adaderana)

( மினுவாங்கொடை நிருபர் )

   தொடர்ச்சியாக மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணத்தினால், கம்பஹா மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுமிடத்து, அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

   அடை மழை காரணமாக, இதுவரையில் கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

   இதேவேளை, திங்கட்கிழமை காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பொது இடங்களில் தங்க வைப்பதற்கான ஒழுங்குகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் தேவையான விபரங்களைப் பெற்று, சமைத்த உணவு வகைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

   திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக, அத்தனுகலு ஓயா, ஜா - எல தண்டுகம் ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம், நேற்று வரையிலான காலப் பகுதிக்குள் உயர்ந்திருப்பதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம் - ஹரீஸ் எம்.பி நடவடிக்கை
=====================================
காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்களை தேடும் பணியினை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், மீன்பிடி அமைச்சர் ஹரிசனை சந்தித்து தீவிரப் படுத்தியுள்ளார்.
சாய்ந்தமருதிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் எட்டு நாளாகியும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இன்று (25) புதன்கிழமை மீன்பிடி அமைச்சர் ஹரிசனை சந்தித்து விமானப்படையின் உதவியினைப் பெற்று மீனவர்களை தேடும் பணியினை தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கினங்க மீன்பிடி அமைச்சர் ஹரிசன், விமானப்படை தளபதியை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதுடன் கடற்பரப்பில் விமானங்கள் மூலம் தேடுதலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் வேண்டுகோளுக்கினங்க கடற்படையினரும், மீன்பிடி திணைக்களமும் தங்களது தேடுதலினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு மேலதிகமாக மாலைதீவு மற்றும் மியன்மார் போன்ற வெளிநாட்டு கடற்பரப்பில் தேடுதலினை மேற்கொள்ளும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மீன்பிடி திணைக்களம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் இரு நாட்டு தூதுவர்களுடாக அந்நாட்டு மீன்பிடி நிறுவனங்கள், கடற்படை மற்றும் விமானப்படைகளின் ஊடாக தேடுதல்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தொடர்ச்சியாக மீனவர்களை தேடும் பணியினை தீவிரப்பபடுத்தும் முகமாக நாளை கொழும்பில் மீனவ சங்க பிரதிநிதிகள், மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் உடனான சந்திப்பினை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பினை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலும் வருகை தந்திருந்தார்.
-ஊடகப் பிரிவு-



( மினுவாங்கொடை நிருபர் )



   எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், 
கம்பஹா மாவட்டத்தின் தாழ் நிலங்களில்  மூன்று நாட்களாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது
 இதேவேளை, கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளால் நீர் வடிந்தோடாமை காரணமாக, வத்தளை பிரதேசத்தின் சில இடங்களில் வௌ்ள நீர் தேங்கிக் காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

   தொடர்ச்சியாக மூன்று நாட்களாகப்  பெய்து வரும் கடும் மழை காரணமாக, நீர்கொழும்பு நகரின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.    நீர்கொழும்பு - தளுபத்த, கட்டுவ, பெரியமுல்ல, கட்டுவாப்பிட்டிய உட்பட பல பிரதேசங்களின் தாழ் நிலங்களில் நீர் தேங்கியுள்ளது.
   பெரியமுல்ல - தெனியாய வத்தையில் 190 குடும்பங்களும், செல்லக்கந்த பிரதேசத்தில் 40 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

   பெரியமுல்ல ஜயரத்ன வீதியில் உள்ள இறப்பர் வத்தை, கோமஸ்வத்தை ஆகிய பிரதேசங்களில் 300 குடும்பங்கள் வரை அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளன. அவர்கள் தற்போது அப்பிரதேசங்களிலிருந்து  வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

   நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் கட்டுவாப்பிட்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்த வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

   நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியின் மஹ ஹுணுப்பிட்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டமையால், கட்டுநாயக்க - நீர்கொழும்பு பிரதான வீதியில் சுமார் இரண்டு அடியளவில் வெள்ள நீர் தேங்கியிருந்தது.

   இந்நிலையில், அதி கூடிய மழை வீழ்ச்சி கட்டுநாயக்கவில் பதிவாகியுள்ளது. அங்கு 219 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

   இது தவிர, சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களில் 12,109 குடும்பங்களைச் சேர்ந்த, 48,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

   சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 282 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 878 குடும்பங்களைச் சேர்ந்த 3,488 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

   இதேவேளை, அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு பொலிஸாரால் விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

011 2587225 மற்றும் 
011 2454576 ஆகிய இலக்கங்கள் ஊடாக அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்திய முப்பெரும் ஆளுமைகள்.


1.பேராசிரியர் கலாநிதி அல்லாமா தைக்கா சுஐப் ஆலிம்.
B.A (Hon) ceylone, M.A, PhD (USA)
ஆய்வு நூல் :
*Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu – A study of the Contributions of Sri Lanka and Tamil Nadu to Arabic, Arwi, Persian and Urdu Languages, Literature and Education
*880 பக்கங்கள்
* இந்த ஆய்வு நூலை எழுத சுமார் 35 வருடங்கள் நூலாசிரியர் ஆய்வு செய்ததாக கலாநிதி சுக்ரி அவர்கள் கூறுகிறார்கள்.
2.பேராசிரியர் லோனா தேவராஜா அம்மையார்
B.A, M. A (Ceylone), PhD (London)
ஆய்வு நூல் :
*THE MUSLIMS OF SRI LANKA....ONE THOUSAND YEARS OF ETHNIC HARMONY 900 - 1915
3. கலாநிதி எம் ஏ எம் சுக்ரி
B.A (ceylone) M. A, PhD (Edinburgh)
ஆய்வு நூல்:
Muslims of Sri Lanka: Avenues to Antiquity
இந்த முப்பெரும் ஆளுமைகளின் பணிகள் இடம்பெற்றிருக்காவிட்டால் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு அழிந்து போயிருக்கும் என்று களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்கள் கூறுகிறார்.
வாழ்வின் பெரும் பகுதியை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று இருப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணித்த இவர்களின் சேவையை வல்லநாயன் ஏற்று அவர்களையும் பொருந்திக்கொள்வானாக.

(பஸ்ஹான் நவாஸ்)



அரசாங்கத்திற்கு எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து நாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் ´ஒன்லைன்´ முறையில் மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.

நாம் தொழிநுட்பத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். அப்போது நேரம் மற்றும் பணத்தை சேமித்துக் கொள்ள முடியும். அரச இயந்திரத்தில் தற்போது ஊழியர் மிகை காணப்படுகிறது. 350,000 அரச ஊழியர்களை கொண்டு அனைத்து அரச நிறுவனங்களையும் செயற்படுத்த முடியும். 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ நாட்டினை பொறுப்பேட்கும் போது 5 இலட்சத்துக்கும் அதிகமாக அரச ஊழியர்கள் காணப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

(adaderana)

சவூதி அரேபியாவில் அப்கைக் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை மற்றும் குரைஸ் எண்ணெய் வயலை குறிவைத்து நடாத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை இலங்கை கண்டிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிக்கையில், முப்பது ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு என்ற வகையில், இலங்கை இந்த வேதனையை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் தெரிவிப்பதில் உறுதியாக உள்ளது.

மத்திய கிழக்கின் நிலையான தன்மை உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானதாவதுடன், அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரைவில் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் என இலங்கை நம்புகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. (A)
Blogger இயக்குவது.