ராஜபக்ஷக்களை முஸ்லிம்களின் எதிரிகளாகக் காட்டிய முஸ்லிம் தலைவர்கள் இன்று வாயடைத்துப் போயுள்ளனர்
- ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் காட்டம்

( ஐ. ஏ. காதிர் கான் )

   ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்கள் புஷ்வாணமாகிவிட்டன. தேசிய காங்கிரஸின் துணிச்சலே என்னையும் தைரியமூட்டியது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸ் சரியாக அடையாளம் கண்டதுபோல், கொழும்பு மேயராக இருந்த காலத்தில், தானும் சரியாக அடையாளம் கண்டதாக,  வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.

   "காந்தா சவிய" (மகளிர் சக்தி)  அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைக் குழந்தைகளுக்கு கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள்  வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் (28)  நடந்த இவ்வைபவத்தில் ஆளுநர் முஸம்மில் மேலும் உரையாற்றும்போது, 

   பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகச் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ,  எதிர்காலத்தில் நாட்டின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரென, கொழும்பு மாநகர சபையின் மேயராக இருந்தபோதே, நான் தீர்மானித்தேன்.

   தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகளை நுணுக்கமாக அவதானிக்கும் வாய்ப்பு, கொழும்பு மேயராக நான் இருந்த காலத்தில் எனக்குக் கிடைத்தது.  பாதுகாப்புச் செயலாளராக இருந்து அவர் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் கச்சிதமானவை. நேர்த்தியான வேலைகளைத் திட்டமிடுவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அவர் சளைத்ததில்லை.கொழும்பு நகரின் அழகை அவதானித்தால், ஒரு டொபி சருகையைக் கூட வீதியில் வீசுவதற்கு மனம் முன்வராது. இது அச்சத்தினால் ஏற்பட்ட உணர்வல்ல. அழகினால் கவரப்பட்ட மனங்களின் வௌிப்பாடாகும்.இவ்வாறான செயல் வீரரை அடையாளம் கண்டு அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.  அதாஉல்லா முன்வந்தமை என்னையும் தைரியமூட்டியது.

ஆனால், முஸ்லிம்களின் தலைவர்களெனக் கூறித்திரிவோர், எமது சமூகத்தைத் தொடர்ந்தும் தவறாகவே வழி நடத்துகின்றனர். வாக்குக ளுக்காகவும், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கடமைப்பட்டதற் காகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தொடர்ந்தும் முஸ்லிம்களை ஏமாளிகளாக்குகின்றன.

   இங்குள்ள பலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும்,  பெற்றோர் செய்த தவறுக்காக எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தைகளைப் பழிவாங்கக் கூடாது. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்கு நாங்கள் அரசியல் பேதம் பார்ப்பதில்லை. எனினும், இனியும் எமது சமூகத்தை ஏமாற்ற வருவோர் பற்றி நீங்கள் தௌிவாக இருக்க வேண்டும். ராஜபக்‌ஷக்களை முஸ்லிம்களின் எதிரிகளாகக் காட்டிய முஸ்லிம் தலைவர்கள், இன்று வாயடைத்துப் போயுள்ளனர். பெரும்பான்மைச் சமூகத்துடன் இணைந்து வாழ்வதே சிறுபான்மைச் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பானது.

பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள பெரும்பான்மையினர் தீர்மானித்ததன் பின்னர், முஸ்லிம்கள் முரட்டுப்பிடிவாதத்துடன் செயற்படுவது, எமது குழந்தைகளின் எதிர்காலத்தையே ஆபத்துக்குள்ளாக்கிவிடும். "காந்தா சவிய" அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் 16 ஆவது தடவையாக இச்சிறப்புத் திட்டத்தை முன்னடெுத்துள்ளமை பாராட்டக்குரியது என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.