சீனாவில், 6000-க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 130-க்கும் அதிகமான மக்களைப் பலி கொண்டுள்ள இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, 'ஊகான்' (wuhan) நகரத்தில் புதிய தற்காலிக மருத்துவமனை ஒன்றை சீன அரசு கட்டத் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மருத்துவமனைப் பணிகள், பிப்ரவரி 2-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பிப்ரவரி 3-ம் தேதியிலிருந்து சிகிச்சைகள் தொடங்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது ஊகான் நகரத்திலிருந்துதான். 11 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில், வைரஸ் பாதிப்பிற்குப் பின்னர் அந்த நகரத்திலிருந்த மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியதால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் போதிய சிகிச்சை அளிப்பதற்காகத் தற்காலிக மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 1000 படுக்கைகள் கொண்டதாக 25,000 சதுர மீட்டர்கள் பரப்பளவில் இம்மருத்துவமனை அமைய உள்ளது.
சரியாக ஆறு நாள்களுக்குள் இம்மருத்துவமனையைக் கட்டிமுடிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, 2003-ல் Sars வைரஸ் தாக்குதலின்போதும், அந்த வைரஸ் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏழு நாள்களில் ஒரு தற்காலிக மருத்துவமனையைக் கட்டியது சீன அரசு. இதுபோன்ற கட்டடப் பணிகளை விரைவாக முடிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்கள். அவர்களால் எப்படி இது சாத்தியமாகிறது... எந்த முறையில் இந்தக் கட்டடத்தை விரைவாகக் கட்டு,கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
இந்த வகையில் கட்டடங்களை உருவாக்கும்போது, நெரிசலான இடங்களில் வழக்கமான முறையைப் பின்பற்றி அவதிப்படத் தேவையில்லை. விரைவான கட்டுமானம்தான் இந்த முறையின் மிகப் பெரிய பலமே. ஊகான் நகரத்தில் இந்த மருத்துவமனையைக் கட்டுவதற்காக, ஆயிரக்கணக்கான பணியாளர்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக 500 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். கட்டுமானம் முடிந்தவுடன், 1300 மருத்துவப் பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
2003ல் Sars வாரஸ் பாதிப்பின்போதும் இதேபோன்ற மருத்துவமனையை அமைக்க 4000 பணியாளர்கள், 24 மணி நேரமும் பணிகளை மேற்கொண்டனர். தற்போது கட்டப்படும் மருத்துவமனைக்காக அங்கு வேலை செய்யும் அனைவரும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைக் கைவிட்டுள்ளனர். இந்த மருத்துவமனை, அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, 40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட 14 நகரங்களில், தரைவழிப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த வைரஸ் தாக்குதலால், அது கண்டுபிடிக்கப்பட்ட ஊகான் மாவட்டத்தில் மட்டும் 3,50,000-க்கு மேல் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிவருகிறது. அதைத் தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
நன்றி - விகடன்
கருத்துரையிடுக