அரசாங்கம் தேர்தலை இலக்காக கொண்டு செயற்கையான இயல்புநிலையை ஏற்படுத்த வேண்டாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது கொரோனா பரவுவதை தடுப்பதை விட தேர்தலை நடாத்த வேண்டும் என்பதே இந்த அரசின் குறிக்கோளாக உள்ளது, அரசின் அண்மைக்கால செயற்பாடுகளையும் அமைச்சர்கள் சிலர் வெளியிட்ட கருத்துக்களையும் நோக்குமிடத்து இதன் உண்மை தன்மையை உணர்ந்துகொள்ளலாம்.
எமது யாப்பின் படி மார்ச் மாதம் கலைக்கபட்ட பாராளுமன்றம் ஜூன் முதல் வாரம் புதிய உறுப்பினர்களுடன் கூட்டப்பட வேண்டும். அவ்வாறு ஜூன் மாதம் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமானால் ஏப்ரல் இருபதாம் திகதி தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் குறுப்பிட்டுள்ளார்.இப்பொழுது ஏப்ரல் இருபதாம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது, ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி தாம் இலங்கையில் கொரோனா தொற்றை அழித்துவிட முடியும் என சுகாதார அமைச்சர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.அதேபோல் ஏப்ரல் இருபதாம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்தப்படுவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகஅறிய கிடைக்கிறது.
இவைகள் அனைத்தும் அரசு தேர்தல் ஒன்றை நடாத்த தயாராகி வருவதையும் அதற்காக நாட்டில் செயற்கையான இயல்புநிலை ஒன்றை உருவாக்க முயற்சித்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.

கடந்த ஜனவரி மாத இறுதிப்பகுதியில் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த சஜித் பிரேமதாச கொரோனாவின் தாக்கம் இலங்கையை அடையாமல் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் கூறிய போது அரசு சாதகமான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. நாட்டில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் சஜித் பிரேமதாச நாட்டை மூடி ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என கூறியபோது இருபத்தி எட்டு பேர் பாதிக்கப்பட்டதுக்காக நாட்டை மூட முடியுமா என ஜனாதிபதி கேட்டார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேட்புமனு தாக்கல் முடியும் வரை காத்துக்கொண்டிருந்தனர்.

அதே போல் இப்பொழுதும் தேர்தலை நடாத்த செயற்கையான இயல்புநிலை ஒன்றை ஏற்படுத்த இந்த அரசு முயற்சிக்க கூடாது. நாளாந்தம் மேற்கொள்ளும் பரிசோதனைகளை அதிகரித்து இந்த தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான விபரங்களை மக்கள் முன் வெளிபடுத்த வேண்டும்.

இந்த தொற்று நாட்டில் இருந்து முற்றாக நீங்கிய பின்னே தேர்தல் ஒன்று பற்றி யோசிக்க வேண்டும். மக்களின் பிணங்களின் மேல் ஏறி தேர்தல் ஒன்றை நடாத்த ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இந்த நோயை கட்டுபடுத்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாம் அரசுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளோம். மக்கள் கஷ்டப்படும் போது அவர்கள் முன் சென்று “தென் செபத” என கேட்கும் எதிர்கட்சி தலைவர் இன்றில்லை.

நாம் பொதுமக்களின் பாதுகாப்புக்காக எப்போதும் முன் நிற்போம். இதனையும் மீறி இந்த அரசு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை நடாத்த முயற்சிப்பின் அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.