அம்பாறை மாவட்டம்  ஒலுவில் துறைமுக பகுதியில்  அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு இன்று(18) பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஜா-எல பிரதேசத்தில் இருந்து  அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர்  ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதில்  05 கடற்படையினர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மூவர் வெலிகந்தை பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கும் ஏனைய  இருவர் கொழும்புக்கும் மாற்றப்பட்டுள்ளனர் .

இது தவிர மேலும்  05 கடற்படையினர் கொரோனாத் தொற்று பரிசோதனைக்காக தற்போது  மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஏனைய  70 கடற்படையினருக்கும்  நாளை (19) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக  அவர் கூறினார்.

-ஷிஹான்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.