இலங்கையில் கொவிட் 19 தொற்றின்றி றபாய்தீன் போன்று அநியாயமாக எரிக்கப்பட்ட சடலங்கள் எத்தனை? ஜனாதிபதி கோட்டபாய தனது மௌனத்தை கலைத்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் - முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா

சர்வதேச விதிமுறைகளையும் வழி காட்டல்களையும் தாண்டி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களது சடலங்கள் எரிக்கப்படும் நிலையில் , மாதம்பிட்டிய ரபாய்தீன் போன்ற நோய் தொற்று உறுதி செய்யப்படாதவர்களது சடலங்களும் எரியூட்டப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தனது சமூக வலைத்தள பக்கங்களின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு மாதம்பிட்டி தொட்டலங்க - நெத்செவன வீடமைப்பு தொகுதியில் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்த 67வயதான அப்துல் ஹமீட் முஹம்மட் ரபாய்தீன் என்பவரது ஜனாசா கொரோனா தொற்று என சந்தேகிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு கொவிட் 19 தொற்று உள்ளதா என்ற பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் முன்னரே அவசர அவசரமாக அவரது உறவினர்கள் வற்புறுத்தி கையொப்பம் பெறப்பட்டு 6ஆம் திகதி பொரளை கனத்தை மயானத்தில் சடலம் எரியூட்டப்பட்டுள்ளது.

குறித்த நபரது சடலம் கொரோனா தொற்றாளர்களது சடலத்தை கையாள்வது போன்று பொதியிடப்படாமல் சாதாரணமான முறையிலேயே பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அவரது உறவினர்களும் எவ்வித தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட வில்லை. இதுவரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை அறிக்கைகளும் உறவினர்களுக்கு இந்த நிமிடம் வரை கையளிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த தகவல் வெளியிடப்படாத வகையில் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதான தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ள அதே வேளை இதுவரை கொரோனா தொற்று உள்ளதான சந்தேகத்தில் எரிக்கப்பட்ட இவரது பெயர் எந்தவித பட்டியல்களுக்குள்ளும் உள் வாங்கப்படவில்லை.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் நபர்களது உடலங்களை அடக்கம் செய்வதற்கான  உலக சுகாதார ஸ்த்தாபனம் , மற்றும் உலகளாவிய விஞ்சானிகளது பரிந்துரைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு , உறவுகளுக்கான இறுதி கிரியைகளை கூட சரி வர நிறைவேற்ற முடியாத நிலையிலே அவற்றை எரிக்கும் நிலையில் நோய் தொற்றுக்க உள்ளாகாதவர்களையும் எரிப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த விடயம் தொடர்பிலான தனது மௌனத்தை கலைத்து இதுவரை கொரோனா தொற்றினால்  மரணித்தவர்களதும் நோய் தொற்று இல்லாமல் எரியூட்டப்பட்டவர்களது விபரங்களையும் வெளியிட வேண்டும். இந்நிலை தொடர இடமளியாது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா வேண்டிக் கொண்டுள்ளார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.