(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஐம்பது வருட அரசியல் அனுபவம் இருந்தும் மஹிந்த ராஜபக்ஷ்வால் ஜனாதிபதி மேற்கொள்ளும் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான ஒருவரை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பாக மக்கள் தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளர்களின் சந்திப்பொன்று கட்சி காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் அடிக்கடி வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுகின்றார். அந்த அறிவித்தல்கள் மூலம் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கின்றார். இதனால் பிரதமரின் அதிகாரம் இழிவாக்கப்பட்டிருப்பதுபோல், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரமும் அகெளரவப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அதுமாத்திரமல்லாது இதன் மூலம் நிர்வாக அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்களை குப்பைக் கூடைக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்றம் இவ்வாறு புறக்கணிக்கப்படும்போது, பிரதமருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இருக்கும் கெளரவம் என்ன? ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை பார்த்துக்கொண்டு, பிரதமர் அமைதி காப்பதில் என்ன தெளிவாகின்றது? இருக்கும் அதிகாரங்களைக்கூட மக்களுக்காக பயன்படுத்த பிரதமருக்கு தேவையில்லை. அல்லது ஜனாதிபதி அவரையும் தனது அதிகாரத்துக்கு அடிபனிய வைத்திருக்க வேண்டும்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு 50 வருட அரசியல் அனுபவம் இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதியின் இந்த தான்தோன்றித்தனமான தீர்மானங்களை எதிர்க்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கின்றார். அப்படியான ஒருவரை எவ்வாறு மீண்டும் பிரதமராக்குவது? அதனால் பொதுத் தேர்தலில் மக்கள் இது தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.
கருத்துரையிடுக