மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 8-ம் திகதி ஆரம்பமாகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை பொலிசார் கொடூரமாக கொலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அமெரிக்காவில் இன்னும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இனவெறி விளையாட்டிலும் உள்ளது என்று வீரர்கள் குற்றம்சாட்டினர். கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் 'இங்கிலீஷ் பிரிமீயர் லீக்' கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. அப்போது கால்பந்து வீரர்கள் முழங்காலை தரையில் ஊன்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது டி-சர்ட்டில் 'Black Lives Matter' என்ற இலட்சிணையை அணிந்து விளையாட இருக்கிறார்கள். இதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ''ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்வது ஆகியவை எங்களது கடமை என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.