(செ.தேன்மொழி)

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் நேற்று செவ்வாய்கிழமையும் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகவில்லை.

ஆனையிறவில் 2000-3000 வரையான இராணுவத்தினரை ஒரே இரவில் தான் கொலைச் செய்ததாக அவர் தேர்தல் பிரசாரமொன்றின் போது கூறியது குறித்து அவரிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பாணையை திங்கட்கிழமையும் , இன்றும் அனுப்பியிருந்த போதிலும் , இரு தினங்களிலும் அவர் ஆஜாராகததால் அது குறித்து நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் , அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் சிலர் அம்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது,
ஆனையிறவில் 2000-3000 வரையான இராணுவத்தினரை ஒரே இரவில் தான் கொலைச் செய்ததாக கூறியது குறித்து கருணாஅம்மானிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கமைய திங்கட்கிழமை அவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

அவர் சமூகமளிக்காததால் , செவ்வாய்கிழமையும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சமூகமளித்திருக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதி மன்றத்திற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவிற்கமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை கருணா அம்மானிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக புலனாய்வு பிரிவினர் சிலர் அம்பாறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இராணுவத்தினரின் கொலை தொடர்பில் கருணா தெரிவித்திருக்கும் பிரசாரத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு அவரை கைதுசெய்ய முடியாது. அவரிடம் பெற்றுக்கொள்ளும் வாக்குமூலங்களில் ஏதாவது தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் மாத்திரமே கைது செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில், விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தன்னால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுகவீனம் காரணமாக ஆஜராக முடியாதென தனது சட்டத்தரணி ஊடாக சி.ஐ.டி.க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.