(ஆர்.யசி)

தனிநபர் வங்கிக் கடன்களை மீள அறவிடும்போது சலுகை வழங்குமாறு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட உத்தரவை செயற்படுத்துவதில் வங்கிககள் பல தயக்கம் காட்டியுள்ளன என்பதனை ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்தில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகியிருந்த நிலையில் மக்கள் வருமானம் இழந்திருந்தமையினால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்றுக் கொண்டிருந்த கடன்களை மீளச் செலுத்துவதற்கு சலுகை காலத்தை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் நிதி நிறுவனங்கள் தற்போது மக்களிடம் கடன் தவணையை மீளப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துலகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நிதி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய வங்கியின் கீழே இயங்குகின்றன.

இதன்படி இந்த விடயத்தில் அரசாங்கத்தினால் நேரடியாக உத்தரவிட முடியாது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே மத்திய வங்கியுடன் பேசி மக்களுக்கு வங்கிகளுடனான சலுகை பொதியை வழங்க நடவடிக்கையெடுத்திருந்தது. பின்னர் கொவிட்-19 தொற்று நிலைமையை தொடர்ந்தும் அது தொடர்பான நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது.

நிதி சட்டத்திற்கமைய நிதி விடயங்களை பயன்படுத்துவது தொடர்பான சட்ட திட்டங்களை அரசாங்கத்தினால் நேரடியாக மத்திய வங்கிக்கு விடுக்க முடியாது. நிதி சட்டத்திற்கமைய வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குபவராக மத்திய வங்கிக்கே செயற்பட முடியும்.

இதன்படி அரசாங்கத்தினால் வங்கிகளுக்கு உத்தரவிட முடியாது. அது தொடர்பான அதிகாரம் மத்திய வங்கிக்கே இருக்கின்றது.

அரசாங்கத்தினால் சட்டத்திற்கு அப்பால் சென்று செயற்பட முடியாது. இந்நிலையில் பல வங்கிகள் சலுகை வழங்குவதில் தயக்கம் காட்டியுள்ளது. இதனை ஏற்றுக் கொள்கின்றோம்.

எவ்வாறாயினும் இது தொடர்பாக அடுத்த வாரத்தில் மேலுமொரு நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்கவுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப பிரிவினருடன் அவர் கலந்துரையாடி நடவடிக்கையெடுப்பார் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.