பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக எதிர்வரும் 28-ம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சகல துறை வீரர் முஹம்மத் ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி வீரர் பகார் ஸமான் உற்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சகல துறை வீரரான 39 வயதான முஹம்மத் ஹபீஸ் தனது திருப்திக்காக லாகூரில் உள்ள மற்றொரு தனியார் வைத்தியசாலையில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் ஹபீசுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் 'நெகட்டிவ்' என முடிவு வந்துள்ளது. இதே போல் அவரது குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனை சரியானது தானா? என்ற குழப்பம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எது எப்படி என்றாலும் இன்று அனைத்து வீரர்களுக்கும் மறுபடியும் கொரோனா சோதனை நடத்தப்பட இருக்கிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.