(எம்.ஆர்.எம்.வஸீம்)

பொது சுகாதார அதிகாரியின் பரிசோதனைக்கு பின்னர் நாளை (12) முதல் பள்ளிவாசல்களை திறக்கலாம் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்தார்.

மதஸ்தலங்களை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்ற நிலையில் பள்ளிவாசல்களை திறக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய சகல மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டில் கொராேனா தொற்றின் தாக்கம் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதனால் வணக்கஸ்தலங்களை  12 ஆம் திகதி முதல் திறப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அதன் பிரகாரம் முஸ்லிம் பள்ளிவாசல்களையும் நாளை முதல் திறப்பதற்கு வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்தது.

அத்துடன் வணக்கஸ்தலங்களை மீண்டும் திறக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் பள்ளிவாசல்களை திறக்கும்போது பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்றை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அனுப்பியிருக்கின்றது.

குறிப்பாக பள்ளிவாசல்களை வழிபாட்டுக்காக திறப்பதற்கு முன்னர் பிரதேச பொது சுகாதார அதிகாரியினால் பரிசோதித்து, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் பள்ளிவாசலுக்குள் ஒரு சந்தரப்பத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கே அனுமதிக்கப்பட வேண்டும். சுகாதார பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ள ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படுமாறு அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.