கொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது.

குழந்தை சிகிச்சைக்காக தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் உரிய சிகிச்சை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து குழந்தையின் உறவினர்கள் வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் அதன் சொத்துக்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் சொத்துகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான பணிப்புறக்கணிப்பு நாளை (04) காலை 8 மணி வரையில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெனியாய பொலிஸாரினால் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று மொரவக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.