நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (06) திறக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில் தரம் 05, 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

நாளைய தினம் அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கற்பித்தலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன், தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலைகளின் புதிய கால அட்டவ​ணையின் பிரகாரம் தமது கற்பித்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்ததன் பின்னர் ஆசிரியர்கள் வீடுகளுக்கு செல்ல முடியுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிபர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு பிரவேசிக்கவும் வௌியேறவும் வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலைகளில் கடமைகளின் இருக்கவேண்டிய தேவை இல்லை எனவும் அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்தர பரீட்சையை உத்தேசிக்கப்பட்டுள்ள தினத்தில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் மாணவர்களின் கருத்துகளை கேட்டறிந்து அடுத்த வாரத்திற்குள் அமைச்சிடம் ஒப்படைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து அதிபர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கருத்துகளை கருத்திற்கொண்டே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.