சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது.

அயர்லாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, அயர்லாந்து அணி களமிறங்கியது. 28 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேம்பர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 59 ஓட்டம் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.கடைசி கட்டத்தில் மெக் பிரின் 40 ஓட்டங்கள் சேர்த்தார்.

இறுதியில் அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து சார்பில் வில்லே 5 விக்கெட்டும், சாகிப் முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணி முதலில் இருந்தே அடித்து ஆடத் தொடங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் வீழ்ந்தன.

சாம் பில்லிங்சும், இயன் மார்கனும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சாம் பில்லிங்ஸ் அரை சதமடித்தார். அவர் 67 ஓட்டங்களுடனும், இயன் மார்கன் 36 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இறுதியில், இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. வில்லே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.