பாறுக் ஷிஹான்

கருணாவும் ஞானசாரவும் கல்முனையை கலவர பூமியாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. ஐக்கியமாக இருக்கும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசும் பேச்சுகளை நிறுத்த வேண்டும். இவ்வாறான இனவாதிகளின் ஆசைகளுக்கு இடமளிக்கக்கூடாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலில் மாவட்டத்தை வெல்வதற்காக கட்சியின் தீவிர பிரசாரத்தின் ஒரு கட்டமாக முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத்தவிசாளர் சேகு இஸ்ஸடீனுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 5 மணியளவில் செய்தியாளர் மாநாடொன்றினை அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஏற்பாடு செய்த பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது, மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் அல்லாமல் கலவர பூமியாக மாற்றுவதற்கான முஸ்தீபுகள் தற்போது நடைபெறுகிறது. கருணா அம்பாறைக்கு வந்த பிறகு முஸ்லிம்ககளை கேவலமாகப் பேசுவதும் வந்தேறு குடிகள் என மிருகத்தை விட கேவலமாகக் கூறி வருவதை கட்சியின் பிரதித்தலைவர் என்ற வகையில் வன்மையாகள் கண்டிக்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேச தரமுயத்தும் விடயத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுபோடுவதாக கூறியிருப்பதும் ஞானசார தேரரின் படையெடுப்பு என்பதும் வன்முறையைத் தூண்டுவதாகும். எனவே, கல்முனை கருணாவின் அப்பன் வீட்டுச்சொத்தல்ல என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். கல்முனை விவகாரத்தில் முஸ்லிம் தலைவர்கள் கட்டிக்காத்த நகரம். எம்மை சிதைத்தால் முஸ்லிம்கள் மாவட்டத்தில் சிறுபான்மையாக்கப்படலாமென்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைந்த வடகிழக்கு தனி மாநிலமாக மாற்றப்பட வேண்டுமென வெளியிட்டிருப்பது முஸ்லிம் மக்களை அக்கறைப்படாமல் பலவந்தமாக சதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரங்கேற்றிய விடயத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

முஸ்லிம்களை அநாதையாக விடும் வேலைகளை தமிழ் தலைமைகள் செய்வதை தந்தை செல்வா இருந்திருந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார். தராள மனதுடன் செயற்பட்ட தமிழ் தலைமைகள் மத்தியில் இப்போதுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படுவது மன வேதனைக்குரியது.

கருணாவும் ஞானசாரவும் கல்முனையை கலவர பூமியாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. ஐக்கியமாக இருக்கும் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசும் பேச்சுகளை நிறுத்த வேண்டும். இவ்வாறான இனவாதிகளின் ஆசைகளுக்கு இடமளிக்கக்கூடாதெனத் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஷுடன் முஸ்லிம் காங்கிரஸ் இஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸடீன் மற்றும் கல்முனை மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர், உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர், முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.