(எம்.மனோசித்ரா)

சர்வதேச கிரிக்கெட் சபை உயர் பதவிக்கு குமார் சங்கக்கார நியமிக்கப்படுவதை தடுப்பதற்கான சர்வதேச சதித்திட்டமே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் காரணமாகவே 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடர்பற்றி போலியான தகவலை தற்போது மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ளார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கிரிக்கெட் மூலம் இலங்கையை உலகலாவிய ரீதியில் பிரபல்யமடையச் செய்த குமார் சங்கங்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றோர் விசாரணைப் பிரிவிற்கு நேரடியாக அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் சாதாரண தரத்தில் கூட சித்தியடையாத மஹிந்தானந்த அலுத்கமகேவை விசாரிப்பதற்கு விசாரணை அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் செல்கின்றனர். இதுதான் எமது நாட்டில் விளையாட்டுக்கு வழங்கப்படும் கௌரவமா?

சர்வதேச கிரிக்கெட் சபையின் உயர் பதவிக்கு குமார் சங்கக்கார நியமிக்கப்படுவார் என்பதன் காரணமாகவா இவ்வாறு பழிசுமத்தப்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. சங்கக்காரவினுடைய உயர் பதவியைப் பறிப்பதற்காக சர்வதேச சதித்திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

இலங்கையில் சுமார் 20 மில்லியன் மக்கள் கிரிக்கெட்டையும் நம் நாட்டு வீரர்களையும் நேசிக்கின்றனர். இலங்கையின் விளையாட்டு வீரர்களை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக சங்ககார பரிந்துரைக்கப்பட்டாலும் விளையாட்டு மோசடி தொடர்பில் அவர் சாட்சியமளித்துள்ளார் என்பதே ஒரு கரும்புள்ளியாவதோடு அவரது பெயர் நிராகரிக்கப்படுவதற்கும் அதுவே பிரதான காரணியாகும். எனவே அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.