பிரச்சாரத்தில் எனது படங்களை பயன்படுத்தவோ, நியமனங்கள் தருவதாக கூறவோ, அரச பணியாளர்களைப் பாவிக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஊடக அறிக்கையில்,
இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதாகவும், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதாகவும், பல்வேறு நியமனங்களை மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே, இந்த விடயம் தொடர்பாக - ஜனாதிபதி செயலாளர் பீ. பி. ஜயசுந்தர அவர்கள் - அனைத்து ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைப் பிரதானிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனாதிபதியின் புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், நியமனங்களைத் தருவதாக வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம் என்றும், அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென்றும் - கடுமையாக அறிவுறுத்துமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கு அமைய - அனைத்து அரச ஊழியர்களும் எனது இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறும், ஜனாதிபதி செயலாளர், ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனப் பிரதானிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கடிதத்தின் பிரதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.